திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் அரிசி கடத்தப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. இவற்றைக் கண்காணித்து குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்துபவர்களை பிடித்து வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று திருச்சி உறையூர் செவ்வந்தியார் கோவில் தெருவில் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் உள்ள சாலையோரம் ஒன்பது மூட்டைகள் கிடந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் உறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் அலாவுதீன், சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் சாலையோரம் கடந்த 50 கிலோ கொண்ட ஒன்பது மூட்டை ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனர். மேலும் சாலையோரம் ரேஷன் அரிசி மூட்டைகளை வீசி சென்றது யார்? எந்த ரேஷன் கடையிலிருந்து அரிசி வாங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.