கோவை காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் உள்ளே சென்ற மர்ம நபர் 100 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் மற்றும் கொள்ளையன் கைது குறித்து கோவை துணை ஆணையர் சந்தீஷ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அதில் 'கோவை நகைக்கடையில் கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை அடையாளம் கண்டறிந்தோம். மொத்தமாக ஐந்து 5.15 கிலோ நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. அதில் சில கிராம் நகைகள் இன்னும் கிடைக்கவில்லை.
குறிப்பாக வைர நகைகள் கிடைக்கவில்லை. சுமார் 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா மூலம் ஆனைமலை வரை கொள்ளையனை டிராக் செய்தோம். கைதான கொள்ளையன் விஜய், அவருடைய நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். கோயம்பேட்டில் செல்போன் கடையில் சிம் வாங்க முயன்ற போது அவர் சிக்கினார். நகை கடைக்கு சென்றாலும் கொள்ளையன் முக்கிய நோக்கம், நகைகளைத் திருட வேண்டும் என்பதை விட பணத்தைத்தான் கொள்ளையடிக்க தீவிரம் காட்டியுள்ளான்.
இதற்காக அங்குள்ள அலமாரிகளை திறந்து பார்த்த பொழுது அதில் பணம் கிடைக்கவில்லை. பணம் கிடைக்காததால் அடுத்த கட்டமாக பக்கத்திலிருந்த நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு சென்றுள்ளான். முதலில் அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில்தான் விஜய் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளான். ஆனால் அங்கு லோடிங் நடைபெற்றதால் அங்கு நிறைய ஊழியர்கள் இருந்தனர். அதனால் திட்டத்தை மாற்றி நகைக்கடையில் கொள்ளை நிகழ்த்தப்பட்டுள்ளது' என்றார்.