Skip to main content

''ஒரு குவாட்டருக்கு 100 ரூபாய்; இதுதான் அந்த 30 ஆயிரம் கோடி ஆடியோ'' - எடப்பாடி பழனிசாமி

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

 ``Rs 100 per quarter; This is the 30 thousand crore audio'' - Edappadi Palaniswami interview

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் சென்னை வானகரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது பல பேரிடம் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தார்கள். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடந்து வந்தது. இன்று புதிதாக எந்த வழக்கும் தொடரவில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே இதுகுறித்து பல சம்மன்களை விளக்கம் கேட்டு அனுப்பி இருக்கிறார்கள்.

 

இது குறித்து உச்சநீதிமன்றம் அண்மையில் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில் 60 நாட்களுக்குள் அமலாக்கத்துறை விசாரித்து நடவடிக்கை வேண்டும். அப்படி 60 நாட்களுக்குள் விசாரிக்கப்படவில்லை என்றால் சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதனடிப்படையில் இன்றைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடைய வீடு, அலுவலகம் மற்றும் அவரைச் சார்ந்த நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

இது இப்பொழுது நடந்த வழக்கல்ல தொடர் நடவடிக்கையாக நடந்தது. டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் சுமார் 6,000 கடைகள் இருக்கிறது. அதில் 4,000 கடைகளுக்கு முறையாக டெண்டரே விடவில்லை. முறைகேடாக இரண்டு ஆண்டுகளாக பார்கள் செயல்பட்டு வருகிறது. அரசுக்கு வருகின்ற வருவாய் திமுகவை சேர்ந்தவர்களின் மூலமாக மேல் இடத்திற்கு போய்க்கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆளுநரிடத்திலும் புகார் அளித்தோம். முறைகேடாக பார் நடைபெற்றது மூலமாகவும், முறைகேடாக நடைபெற்ற பாரில் போலி மதுபானம் மற்றும் நேரடியாக ஆலையிலிருந்து காலால் வரி செலுத்தாமல் விற்கப்பட்ட மதுபானத்தில் ஒரு குவாட்டருக்கு நூறு ரூபாய் அதிலிருந்து கிடைத்ததாக தகவல் வந்திருக்கின்றது.

 

இப்படி பல்லாயிரக்கணக்கான கோடி இரண்டு ஆண்டில் கொள்ளையடித்திருக்கிறார்கள். மதுபானக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் உயர்த்தி விற்பனை செய்திருக்கிறார்கள். இப்படி பல கோடி ரூபாய் இன்றைக்கு முதலமைச்சருடைய குடும்பத்திற்கு சென்றதாக வெளிவட்டாரத்தில் வருகின்ற செய்திகள் எல்லாம் தெரிவிக்கின்றன. அது குறித்து தான் முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 30,000 கோடி வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் என ஆடியோ மூலமாக தெளிவாக வந்தது. இப்படி முறைகேடாக சம்பாதித்த பணம் தான் 30,000 கோடி'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்