Skip to main content

போதை இளைஞர்கள் தாக்கியதில் ஊர்க்காவல் படைவீரருக்கு கை முறிவு! 3 பேர் கைது!  

Published on 17/06/2020 | Edited on 17/06/2020
Puducherry


புதுச்சேரியில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதையடுத்து இரவு நேரங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிரதீபன் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்கள் ரவிச்சந்திரன், நெல்சன் ஆகியோர் போக்குவரத்தை நெறிப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது முகக்கவசம் அணியாமலும், கஞ்சா மற்றும் மதுபோதையிலும் ஒரே வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் வாகன ஓட்டிகளுடன் சிக்னலில் நின்றனர். அவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் வாகனத்தை விட்டு கீழே இறங்கும்படி ஊர்க்காவல் படைவீரர்கள் ரவிச்சந்திரன் மற்றும் நெல்சன் கூறியுள்ளனர்.


அவர்கள் கீழே இறங்காமல் தகராறு செய்ததுடன் ஊர்க்காவல் படை வீரர்களை தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.


இந்நிலையில் அந்தப் பகுதியில் பணியிலிருந்த கோரிமேடு போலீசார் அவர்களைப் பிடித்து தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  விசாரணை நடத்தினர். 


விசாரணையில் அவர்கள் திலாஸ்பேட்டை கருணாஜோதி நகரைச் சேர்ந்த அறிவழகனின் மகன் கௌதம்(22), சிவசங்கர் என்பவரின் மகன் தமிழரசன்(19), தேவராஜ் என்பவரின் மகன் முகேஷ்(20) என்பது தெரியவந்தது.


அதையடுத்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 


போதை இளைஞர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் ரவிச்சந்திரனின் வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றொரு ஊர்க்காவல்படை வீரரான நெல்சனும் காயமடைந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்