Skip to main content

"எங்களை விட முதல்வருக்கு அதிக செய்திகள் தெரியும்" - அமைச்சர் துரைமுருகன்

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

minister durai murugan talks about tamilnadu schemes in trichy airport  

 

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்து சேர்ந்தார். பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று கூறியுள்ளார் என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர், “நான் கைது செய்ய மாட்டேன். அவர் என்னிடம் சவால் விடவில்லை” என்றார்.

 

கடந்த அதிமுகவில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை தான் திமுக இன்று தொடங்கி வைக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், "பொதுவாக ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது தொடரப்பட்ட பல திட்டங்கள் நிறைவடைவதற்கு முன்பே ஆட்சி மாறிவிட்டால், புதிய கட்சி ஆட்சி அமைக்கும் போது மக்களின் வரிப்பணத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்ட அந்தத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதுதான் மாண்பு. தாமிரபரணி கருமேனியாறு திட்டத்தை திமுக கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக அத்திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நிதி ஒதுக்கி அந்த பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த காவிரி குண்டாறு திட்டத்தில் ஒருவர் மட்டும் செயல்பட முடியாது. இதை கடன் வாங்கியும் செய்வதற்கான நிலை இருப்பதால் நிதானமாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டமல்ல. அது ஒன்றிய அரசின் திட்டம். அதிலும் மாநில அரசு மட்டும் அதற்கான நிதி ஒதுக்கினால் போதாது. ஒன்றிய அரசும் அதற்கு முழு மூச்சுடன் உதவி செய்திட வேண்டும். இது மிகச்சிறந்த ஒரு நல்ல திட்டம். இது தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் மட்டும் செய்ய முடியாது. பல மாநிலங்கள் இணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டம்" என்றார்.

 

வடமாநிலத்தவர்கள் மீது திமுக தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரத்தை செய்ததால் தான் இப்படிப்பட்ட பிரச்சனை எழுந்ததாக பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது என்கிற கேள்விக்கு பதில் அளித்த அவர், “நாங்கள் ஒருபோதும் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவதில்லை. விருப்பு பிரச்சாரத்தில் தான் ஈடுபடுகிறோம். ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுடைய வெற்றியை தாங்கிக் கொள்ள முடியாமல் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக சர்ச்சையானது தற்போது கிளம்பியுள்ளது. மூன்றாவது அணி உருவாகாமல் இரண்டு அணியோடு இருக்க வேண்டும் என்ற கலைஞரின் நோக்கத்தை முறியடிக்கும் விதமாக இப்படிப்பட்ட சர்ச்சைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. எனவே இதை யாரும் குறிப்பிட்டு சொல்லவில்லை. யார் இதை செய்கிறார்களோ அவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்." என்று கூறினார்.

 

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசை விட திமுக தான் அதிக உழைப்பு காட்டியது என்ற கருத்து எழுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், "எங்களுடைய ஒரே நோக்கம் கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்" என்றார்.

 

இன்று நாகர்கோவிலில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு சதித்திட்டம் நடப்பதாக முதல்வர் பேசியுள்ளார் என்ற கேள்விக்கு, "எங்களை விட முதல்வருக்கு அதிக செய்திகள் தெரியும்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்