Skip to main content

“மதிமுகவை திமுக உடன் இணைக்கக்கூடாது; 99.9% பேர் விருப்பம்” - வைகோ

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

“MDMK should not be merged with DMK; 99.9% of people prefer” Vaiko

 

மதிமுக அவைத்தலைவர் துரைசாமி பொதுச்செயலாளர் வைகோவிற்கு, “தங்களின் சமீபகால நடவடிக்கைகளால் கட்சிக்கும் தங்களுக்கும் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதை கட்சியினர் அறிந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த கட்சியினர் மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கட்சியை தாய்க்கட்சியான தி.மு.க.வில் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது” என்று கடிதம் எழுதியுள்ளார். இது கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அவைத்தலைவர் துரைசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கடிதத்திற்கு வைகோவின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் துரைசாமி தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், கட்சியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்திலேயே திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளதாக மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவித்திருக்கிறார். மேலும், அவர் இந்த கடிதத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில் சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரண்டு வருடமாக வராதவர் இப்போது அறிக்கை கொடுக்கிறார் என்றால் அது நல்ல நோக்கத்திலா இருக்க முடியும். கட்சியில் 99.9% பேருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. மதிமுகவை திமுக உட இணைக்கக்கூடாது என்ற முடிவில் தான் உள்ளனர். அவருக்கு இருக்கலாம். 30 வருடங்கள் நாங்கள் போராடி பயணித்து வந்துவிட்டோம். எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்துவிட்டோம். இதையும் கடந்து போவோம்.

 

அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்கிறார்கள். நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம். சிலவற்றை நிராகரிக்கிறோம். ஜனநாயக முறைப்படி கட்சியின் தேர்தல் அனைத்து இடங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான இடங்களில் அமைதியாக ஒற்றுமையாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு மேல் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச நான் விரும்பவில்லை” எனக் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்