Skip to main content

வான்கோழி ; மயிலாக சித்தரிப்பு! மத்திய பட்ஜெட் குறித்து மு.தமிமுன் அன்சாரி கருத்து!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

 

மக்களவையில் 05.07.2019 வெள்ளிக்கிழமை மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.
 

அதில், ''மத்திய பாஜக அரசின் 2019 - 20 ஆம் ஆண்டிற்கான புதிய பட்ஜெட் , பொதுவான கவர்ச்சி அம்சங்களை கொண்டதாகவே இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு வெளியிட்ட அறிவிப்புகளை திரும்பி பார்ப்பவர்களுக்கு இது நன்றாகவே புரியும். 


  thamimun ansari - nirmala sitharaman



சில்லறை வணிகர்களுக்கு ஓய்வூதியம், வருமான வரி உச்சவரம்பை  5 லட்சமாக உயர்த்துதல், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் 30 ஆயிரம் கிலோ மீட்டருக்கு பசுமை வழி சாலைகள் அமைக்கப்படும் என்பது போன்ற ஒரிரு அம்சங்களை தவிர மற்றவை அலங்காரங்களாகவே உள்ளது.
 

பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்த, இப் பட்ஜெட்டில் பச்சைக் கொடி காட்டப்பட்டிருக்கிறது. விவசாய கடன்கள், கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் பொய்த்திருக்கிறது.
 

புதிய வேலை வாய்ப்புகள் குறித்து உத்திரவாத அறிவிப்புகளும் ஏதுமில்லை. மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படுவது குறித்த அறிவிப்பும் இல்லை. சிறுபான்மையின மக்களுக்கான சிறப்பு திட்டங்கள் ஏதுமில்லை. நதி நீர் இணைப்புக்காக தனி  நிதி ஒதுக்கப்படவும் இல்லை.
 

மேலும், பெட்ரோல்-டீசல் மீதான வரி உயர்வு என்பது நேரடியாக மக்களை பாதிப்பதோடு, விலைவாசி உயர்வுக்கும் வழி வகுக்கும். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இது மேலும் இன்னல்களை தரும்.


 

அது போல் தங்கத்தின் மீதான வரி உயர்வு , சாமன்ய மக்களையும், எளிய மக்களையும் மிகவும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், உலகிலேயே தங்க நகைகள் வாங்கும் கலாச்சாரம் இந்தியர்களிடம் தான் அதிகம் உள்ளது.
 

இதில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில், மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் இருக்கும் சில அறிவிப்புகள் கவலையளிக்கிறது. இது புதிய இந்தியாவை பற்றிய கேள்விகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. மொத்தத்தில் இது பற்றாக்குறை பட்ஜெட்டாகவும், வரி சுமை மிக்க பட்ஜெட்டாகவும் இருக்கிறது. வான்கோழியை மயிலாக சித்தரிக்கும் முயற்சியாக இந்த பட்ஜெட் இருக்கிறது என மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது'' என்று கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்