Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; காதலியைக் கொடூரமாகக் கொன்ற கோவில் பூசாரி

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Temple priest drama after incident passed away girlfriend in Hyderabad

 

காதலியைக் கொலை செய்துவிட்டு கோவில் பூசாரியே காவல்துறையில் புகார் கொடுத்து நாடகமாடிய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான சம்சாராவில் வசித்து வந்தவர் அப்சரா(30). கடந்த 3 ஆம் தேதி பத்ராச்சலம் சென்று தோழிகளைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அப்சரா அதன்பின் வீடு திரும்பவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அப்சரா குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். அப்போது  அருகே உள்ள கோவில் பூசாரியும் அப்சராவின் நெருங்கிய நண்பரான வெங்கட சாய் என்பவரை அப்சராவின் தந்தை உடன் அழைத்துச் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அப்சரா குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர் சென்ற வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறை இறுதியாக அப்சரா சரூர் நகரில் நின்று கொண்டிருந்த காரில் ஏறியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து அந்த காரில் சென்ற வழித்தடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை எல்லாம் ஆய்வு செய்தபோது அந்த காரை பூசாரி வெங்கட சாய் ஓட்டிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் வெங்கட சாயை பிடித்து விசாரித்ததில், அப்சராவை தான் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், “அடிக்கடி கோவிலுக்கு வரும் அப்சராவுக்கும் பூசாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இப்படி இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டதாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அப்சரா தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வெங்கட சாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் பல்வேறு காரணங்களைக் கூறி திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார்.

 

ஒரு கட்டத்தில் நாளுக்கு நாள் அவரின் நெருக்கடி அதிகமாகவே, அப்சராவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவரைத் தனியாக அழைத்துள்ளார். அதனால் வீட்டில் தோழிகளைப் பார்ப்பதற்காக சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு அப்சராவும் வெங்கட சாய் உடன் சென்றுள்ளார். காரில் அப்சராவை சரூர் பகுதியிலிருந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் தனக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். கோவில் பணிக்காகவே இங்கே இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்சரா அவருடன் தகராறு செய்திருக்கிறார். இந்த நிலையில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற வெங்கட சாய், அப்சராவை தாக்கி தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து உடலை மீண்டும் சரூர் நகர் எடுத்து வந்து அருகே உள்ள கழிவு நீர்த் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கழிவு நீர்த் தொட்டியிலிருந்து உடலை மீட்ட போலீசார் பூசாரி வெங்கட சாயை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்