Skip to main content

தமிழகம் - புதுச்சேரியில் மெகா மீன் உணவு பூங்கா : நிரஞ்சன் ஜோதியிடம் தேசிய மீனவர் பேரவை கோரிக்கை

Published on 16/08/2017 | Edited on 16/08/2017

 தமிழகம் - புதுச்சேரியில் மெகா மீன் உணவு பூங்கா :
 நிரஞ்சன் ஜோதியிடம் தேசிய மீனவர் பேரவை கோரிக்கை 

      தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மீன் உணவு பதப்படுத்துதல், ஏற்றுமதி மற்றும் மதிப்புக்கூட்டுக்கான தொழிற்சாலைகள் அமையும் வகையில் மெகா மீன் உணவு பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று டெல்லியில் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சாத்வி. நிரஞ்சன் ஜோதி அவர்களை சந்தித்த தேசிய மீனவர் பேரவை தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ மா.இளங்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.

      தேசிய மீனவர் பேரவை தலைவர் மா. இளங்கோ டெல்லியில் உள்ள மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் சாத்வி. நிரஞ்சன் ஜோதியை சந்தித்து பேசினார்.

     அப்போது அவர் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் மிக நீண்ட 15 கடற்கரை மாவட்டங்களில் பிடிக்கப்படும் மீன்களை முறையாக பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உரிய கட்டமைப்பு வசதி இல்லாததால் கேரளாவுக்கு மீன்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் கூடுதல் போக்குவரத்து செலவு மற்றும் மீன்கள் பாழாகிப் போவது போன்றவற்றால் பொருளாதார பேரிழப்பு ஏற்படுகிறது. இதனால் தமிழக, புதுச்சேரியில்  கடல் உணவு பதப்படுத்துதல், ஏற்றுமதி மற்றும் மதிப்புக்கூட்டு கடல் உணவு தயாரிப்பு தொழிற்சாலைகள் பல அமையும் வகையில் மெகா மீன் உணவு பூங்கா (தொழிற்பேட்டை) அமைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

     இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று ஆவன செய்வதாகவும், மாநில அரசுகள் முறையாக திட்ட அறிக்கை சமர்ப்பித்து கோரிக்கை விடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்  உறுதி அளித்தார்.

     தனியார் பங்களிப்புடன் உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலை அமைக்க மத்திய உணவு பதப்படுத்துதல் துறை மானிய உதவிகள் வழங்கி ஊக்குவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
     இந்த திட்டங்கள் குறித்து தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ, உயர் அதிகாரிகளுடன் விவாதிக்க அமைச்சர் ஏற்பாடு செய்தார்.

     உணவு பதப்படுத்துதல் துறை உயர் அதிகாரிகளுடன் தேசிய மீனவர் பேரவை தலைவர் மா. இளங்கோ நீண்ட ஆலோசனை நடத்தினார்.

    ஆழ்கடலில் பிடிபடும் மீன்களை சங்கிலித் தொடர் நடவடிக்கைகள் மூலம் வெளிநாடு ஏற்றுமதி வரையிலான (ColdChain) நடவடிக்கைக்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை  நடத்தப்பட்டது.

     இந்த சந்திப்புகளின் போது, தேசிய மீனவர் பேரவை அகில இந்திய பொதுச்செயலாளர் பகவான்தாஸ் காஷ்யப், தேசிய மீனவர் பேரவை உத்திரபிரதேச மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.பி.காஷ்யப், புதுச்சேரி மீனவ சமுதாய தலைவர் எ.காங்கேயன், ஆர். பாரத் ஆகியோர் உடனிருந்தனர்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்