Skip to main content

ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் சாவர்க்கர் பேரன் புகார்

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

Savarkar's grandson filed a complaint against Rahul Gandhi at the police station!

 

இந்து மகாசபையின் தலைவரான சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்த போது ஆங்கிலேயர்களுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டு ராகுல் காந்தி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில், 'ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவரான சாவர்க்கரைக் கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி, தன்னைப் பற்றி வேறொருவர் பெயரில் புத்தகம் எழுதி, அதில் தன்னையே வீரர் என்று குறிப்பிட்டுக் கொண்டவர் தான் சாவர்க்கர் என்று குறிப்பிட்டார். 

 

அந்தமானில் இருந்த போது சாவர்க்கர் எழுதிய மன்னிப்புக் கடிதங்களைக் காட்டிய ராகுல் காந்தி, ஆங்கிலேயர்களிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றவர் சாவர்க்கர் என்று குற்றம்சாட்டினார். ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். காந்தி, நேரு, பட்டேல் உள்ளிட்டோர் சிறையில் வாடியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் இதுபோன்ற மன்னிப்புக் கடிதம் எழுதியதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது ஒற்றுமை நடைப்பயணம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கட்சி வலியுறுத்தியுள்ளது. முடிந்தால் நடைப்பயணத்தை நிறுத்திப் பாருங்கள் என்று ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். 

 

இதற்கிடையே, சாவர்க்கர் குறித்து பேசிய ராகுல் காந்தி மீது சாவர்க்கர் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது தாத்தாவான சாவர்க்கரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

 

இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ராகுல் காந்தியின் பேச்சுக்கு மராட்டிய மாநில பா.ஜ.க.வும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், சாவர்க்கரை மதிப்பதாக காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்