Skip to main content

விஜயகாந்தாக மாறிய சித்தராமையா... உதவியாளருக்கு பளார் பளார்!

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவர் சித்தராமையா. இவர் அம்மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் மைசூர் விமான நிலையத்தில் தனது உதவியாளரை இன்று அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரிக்கையில், சம்பந்தப்பட்ட நபர் சித்தராமையாவின் காதில் செல்போனை வைக்க முயற்சித்துள்ளார். அதாவது, சில அதிகாரிகளிடம் தனக்காக பேசுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், உதவியாளரின் கன்னத்தில் சித்தராமையா அறைந்துள்ளார். 71 வயதாகும் சித்தராமையா விரைவாக கோபம் கொள்ளக் கூடியவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ ஒருவரைப் பற்றி பெண் காங்கிரஸ் தொண்டர் சித்தராமையாவிடம் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது கோபத்தில் அப்பெண்ணை திட்டியுள்ளார். மேலும் மைக்கை பிடுங்கி எறிய முயற்சித்துள்ளார். அப்போது தவறுதலாக அப்பெண்ணின் துப்பட்டாவை இழுத்து விட்டார். இந்த சம்பவத்தால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.அதன்பிறகு, அப்பெண்ணை சமாதானப்படுத்தும் முயற்சியாக, அவர் எனது தங்கை போன்றவர் எனக் கூறியிருந்தார். அந்த சம்பவத்தின் போது, சித்தராமையாவை பாஜகவினர் துச்சாதனா என்று விமர்சனம் செய்தனர்.

சார்ந்த செய்திகள்