Skip to main content

பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா ரிட்டர்ன்?; கைது செய்ய காத்திருந்த போலீசாருக்கு ஏமாற்றம்!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Police waiting to arrest Brajwal Revanna in airport

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டு இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதன்படி பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இத்தகைய சூழலில் ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கை குழு புதியதாக வழக்கைப் பதிவு செய்தது. அதோடு ஹொலேநரசிபுராவில் உள்ள வீட்டிலேயே தன்னை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக மதச் சார்பற்ற ஜனதாதள கட்சியின் பெண் கவுன்சிலர் புகார் அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமைக்கான சட்டப்பிரிவும் எஃப்.ஐ.ஆரில் கூடுதலாக சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்க வேண்டும் எனக் கார்நாடக மாநில சிறப்பு புலானாய்வுக் குழு (S.I.T) கோரிக்கை வைத்திருந்த நிலையில், ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், ஜெர்மனியில் இருந்து பெங்களூருக்கு வருவதாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா, திடீரென்று, டிக்கெட்டை ரத்து செய்ததால், அவரை பிடிக்க காத்திருந்த போலீசார் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜெர்மனியில் இருந்து நேற்று (15-05-24) நள்ளிரவு 12:20 மணி லுஃப்தான்சா விமானம் மூலம் பிரஜ்வல் பெங்களூருக்கு வருவதாக  விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை அறிந்த சிறப்பு புலனாய்வுக் குழு, பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய பெங்களூர் விமான நிலையத்திற்கு விரைந்து சென்று அவருக்காக எதிர்பார்த்து காத்திருந்தனர். 

ஆனால், பிரஜ்வல் திடீரென்று விமான டிக்கெட்டை திடீரென்று ரத்து செய்ததாகக் கூறப்பட்டது. இதற்கிடையே, விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் விவரங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பிரஜ்வல் ரேவண்ணாவின் பெயர் இல்லை என்பதும், அவர் விமானத்தில் வரவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனால், ரேவண்ணாவை கைது செய்ய விமான நிலையத்தில் காத்திருந்த சிறப்பு புலனாய்வுக் குழு ஏமாற்றம் அடைந்தனர். 

சார்ந்த செய்திகள்