Skip to main content

மற்றொரு காமெடியனை தூக்கிவிட வேண்டும் என்று நினைக்கு மகா கலைஞன் - விவேக் குறித்து யோகிபாபு!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

hjk

 

நகைச்சுவை நடிகர் விவேக் இன்று (17.04.2021) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து, அவருடனான தன்னுடைய அனுபவங்களைப் பகிந்துகொண்டார். அதில், "என் நண்பர், சின்ன கலைவாணர் என்று பெருமையோடு அழைக்கப்பட்ட நடிகர் விவேக் மறைந்துவிட்டார் என்று சொல்வதா இல்லை, சிரிப்பு செத்துவிட்டது என்று சொல்வதா, தமிழ்த் திரையின் வழியே பகுத்தறிவைப் பரப்பிய ஒரு சீர்திருத்தக் கலைஞன் மறைந்துவிட்டார் என்று சொல்வதா? என்னை பொறுத்தவரையில் ஒரு சகோதரனை இழந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். என் கவிதைகளின் கொள்கை பரப்பு செயலாளரை நான் இழந்துவிட்டேன். தமிழ்த் திரையுலகம் நீண்ட காலமாக சேமித்து வைத்திருந்த செல்வத்தை இழந்துவிட்டது. நகைச்சுவை நடிகர்கள் வருவார்கள், இருக்கிறார்கள். அவர்களில் நடிகர் விவேக் தனி தடம் பதித்தவர். நகைச்சுவையில் கொள்கை இருக்க வேண்டும், சீர்திருத்தம் இருக்க வேண்டும், பகுத்தறிவு இருக்க வேண்டும் என்று தன் கலையில் தன்னை செதுக்கிக்கொண்டவர். இன்று அவர் கொண்டாடப்படுவதற்கு காரணம் அவரின் கலை சேவை மட்டும் அல்ல, அதை தாண்டி அவரின் சமூக அக்கறை.


ஒரு கலைஞனுக்குத் தேவையான சமூக அக்கறையை கலைக்கு வெளியிலும் அவர் பின்பற்றினார் என்பதுதான் நடிகரின் விவேக்கின் தனிச்சிறப்பு. ரசிகர்கள் மட்டுமா துக்கம் கொண்டாடுகிறார்கள், கலையுலகம் மட்டுமா துக்கம் கொண்டாடுகிறது, மனிதர்கள் மட்டுமா இன்று துக்கப்படுகிறார்கள். இல்லை, விவேக் நட்ட மரங்களும், செடிகளும், கன்றுகளும் இன்றைக்கு அவரின் இழப்புக்காக கண்ணீர் சிந்துகின்றன. எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. என்னை, என்னுடைய எழுத்தை திரைக்குப் பின்னால் இருந்து கொண்டாடியவர்களில் பெரும் பங்குகொண்டவர் நடிகர் விவேக். அவரும் நானும் ஒரே வகுப்பில் யோகா பழகிக்கொண்டோம். ஓராண்டாக எனக்குப் பக்கத்தில் இருந்து அவர் யோகா கற்றுக்கொண்டார், பழகினார். இப்போது நான் தனியாக யோகா செய்கிறேன். என்னுடைய பக்கத்து இடம் காலியாகிவிட்டது. நண்பர் விவேக் இவ்வளவு விரைவில் நம்மை விட்டுப் போவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. 59 வயது என்பது இளமை தணிந்த வயது. இனிமேல்தான் ஒருவன் சேவை செய்ய வேண்டிய வயது. பக்குவப்பட்ட வயது. சமூகத்தை அறிகின்ற வயது. இந்த வயதில் மரணம் அவரை பறித்துக்கொண்டதில் எங்களுக்கு சம்மதம் இல்லை. மரணமே உனக்கு சிரிக்கத் தெரியாது, அதனால்தான் சிரிப்பைத் திருடிவிட்டாய்" என்றார். 

 

விவேக் தொடர்பாக நடிகர் யோகிபாபு பேசியதாவது, "விவேக் அவர்களின் மரணம் அதிர்ச்சியான ஒரு சம்பவம். அவருடன் நான் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்தேன். ஆனால் நிறைய அறிவுரை வழங்குவார். அண்ணன் தம்பி மாதிரி பழகுவார். கடைசியாக ‘அரண்மனை’ மற்றும் ‘பிகில்’ படங்களில் அவருடன் இணைந்து நடித்தேன். நான் அவர்கிட்ட பலமுறை சொல்லியிருக்கிறேன், நாம் இணைந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று. ஆனால் தற்போது அது முடியாமல் போய்விட்டது. நான் தமிழ் சினிமாவில் பார்த்த வரைக்கும் ஒரு காமெடி நடிகரை மற்றொரு காமெடி நடிகர் தூக்கிவிடுகிறார் என்றால், அவர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். என்னிடம் கூட நிறைய மரம் நட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்" என்றார். 

 

 

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“எறிகணைகள், கிழவியின் கூடையை உடைக்கின்றன” - வைரமுத்து 

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
vairamuthu about israel iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் நீடித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்தது. மேலும் உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும் என அறிக்கை வெளியிட்டுருந்தது. 

vairamuthu about israel iran issue

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் தாக்குதல் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, 

“இஸ்ரேல் மீது ஈரானும்
ஹமாஸ் மீது இஸ்ரேலும்
விசிறியடிக்கும் எறிகணைகள்,
பாப்பாரபட்டியில்
ஈயோட்டிக்கொண்டு
பலாச்சுளை
விற்றுக்கொண்டிருக்கும்
பஞ்சக் கிழவியின்
கூடையை உடைக்கின்றன

உலகப் பொருளாதாரம்
பின்னல் மயமானது

உலகு தாங்காது

நிறுத்துங்கள் போரை
ஐ.நாவால் முடியாது;
அவரவர் நிறுத்தலாம்” என பதிவிட்டுள்ளார். 

ஏற்கெனவே கடந்த ஆண்டு இஸ்ரேல் - காசா தாக்குதல் குறித்து, “யுத்த களத்தில் நம் தமிழ்ப் பாடல் ஒலிக்கட்டும்” எனக் குறிப்பிட்டு 'புத்தம் புது பூமி வேண்டும்...'(திருடா திருடா) என்ற பாடலை மேற்கோள்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.