Skip to main content

வீடு வாங்கிக்கொடுத்தார்... விளக்கும் ஏற்றி வைத்தார்! -ரஜினியின் பெரிய மனசு!! (படங்கள்)

Published on 07/10/2019 | Edited on 07/10/2019

தேவர் ஃபிலிம்ஸ் கதை இலாகாவில் பணையாற்றிவந்த கலைஞானத்தை...‘நீ தனியா படம் பண்ணு... நான் உனக்கு ஃபைனான்ஸ் ஏற்பாடு பண்ணித்தர்றேன்...’ எனச் சொன்னார் தேவர். இதன்படிதான்‘பைரவி’படத்தை ரஜினியை கதாநாயகனாக வைத்து தயாரித்தார் கலைஞானம். ஆனால்... ரஜினியை ஹீரோவாக்கியதில் தேவருக்கு அப்போது உடன்பாடில்லை. ‘ஜெய்சங்கரை ஹீரோவாப் போடு... ரஜினியை வில்லனாப் போடு’ என்றார். ஆனால்... ரஜினிதான் ஹீரோ என்பதில் கலைஞானம் உறுதியாக இருந்ததால்... அந்தப் படத்திற்கு ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்துதர மறுத்துவிட்டார் தேவர். இருப்பினும்... விடாமுயற்சியோடு போராடி... ‘பைரவி’படத்தி தயாரித்தார் கலைஞானம். இங்கிருந்துதான் ரஜினி என்கிற சூப்பர்ஸ்டார் உருவானார்.
 

"நான் ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழிப் படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடிச்சிக்கிட்டிருந்தப்போ... கலைஞானம் சார் வந்து, “பைரவி என்கிற கதையைச் சொல்லி... 25 ஆயிரம் சம்பளம் தர்றேன்... நீங்கதான் ஹீரோ.. நான் நாளைக்கி வந்து... ஃபைனல் பண்ணிக்கிறேன்னு சொன்னார். எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. நான் வில்லனாகத்தான் நடிக்க ஆசைப்பட்டேன். அதுதான் எனக்கு சரியா இருக்கும்... ஹீரோன்னா... அதுல அதுல பல கஷ்டங்கள் உண்டு. என்ன செய்யலாம்?னு புரியாத நிலையில ஒரு முடிவுக்கு வந்தேன். நாளைக்கி கலைஞானம் வந்ததும்... சம்பளத்தை உயர்த்திக் கேட்டா... நம்மளை விட்டுடுவார்னு நினைச்சேன். மறுநாள்... கலைஞானம் சார் வந்தார். ‘சார்... 50 ஆயிரம் ரூபா சம்பளம் வேணும்... அட்வான்ஸா ஐயாயிரம் குடுங்க’னு சொன்னேன். உடனே அவர்...‘இந்தாங்க அட்வான்ஸ்’னு 30 ஆயிரம் ரூபாயை மொத்தமா கொடுத்து அசத்தியதோடு... ‘உங்களுக்கு ஜோடி ஸ்ரீப்ரியா’னும் சொன்னார். அடேங்கப்பா... ஆட்டுக்கார அலமேலு புகழ் நடிகையா?னு எனக்கு வியப்பு... அந்த வியப்பு முடியும் முன்னமே... ‘சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் ஸ்ரீகாந்த் உங்களுக்கு வில்லனா நடிக்கிறார்’னு சொன்னார். மகிழ்ச்சியில் நான் திக்குமுக்காடிப்போனேன்.


 


படம் வெளியான பிறகு... கலைஞானம் சார் என்னைப் பார்க்கும்போதெல்லாம் தூரத்துல இருந்தபடியே ‘ரஜினி சௌக்கியமா?’னு புன்னகையோடு... என் பதிலுக்குக்கூட காத்திருக்காமல் போய்க்கிட்டே இருப்பார். ‘ஒரு படம் செய்து கொடுங்க’னு என்கிட்ட கேட்கவே மாட்டார். அழுதபிள்ளைதானே பால் குடிக்கும்... ஆனா அவரோ...‘நான் (ரஜினி) நல்லா இருந்தாபோதும்ங்கிற நல்ல உள்ளம் கொண்டவர். கலைஞானம் சார்... நான் தப்பு செய்துட்டேன். அவருக்கு நான் ஒரு படம் செய்து கொடுத்திருக்கணும்... “இப்படி... 25.12.2017 அன்று... ராகாவேந்திரா திருமண மண்டபத்தில் தன் ரசிகர்களிடம் அரசியல் அறிவிப்பை வெளியிட்டபோது கலைஞனத்தை கௌரவப்படுத்தினார் ரஜினி. ரஜினி தலைமையில், பாரதிராஜாவின் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் 14.08.2019 அன்று கலைஞானம் அவர்களின் கலைச் சேவையைப் பாராட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது.


இதில் பேசிய சிவக்குமார், “கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்” என்கிற தகவலைச் சொன்னார். இதையடுத்து... அமைச்சர் கடம்பூர் ராஜீ பேசும்போது... “கலைஞானத்திற்கு அரசு சார்பில் வீடு தரபப்டும்” என்றார். ரஜினி தனது பேச்சின்போது... “ஸாரி... கலைஞானம் அவர்கள் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்ங்கிறது எனக்கு இப்பத்தான் தெரியும். ‘நல்லாருக்கீங்களா?’னு கேட்டா... ‘நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கேன்’னு சொல்லுவார். வெள்லை வேட்டி சட்டையில பளிச்சுனு சிரிச்சமுகமா இருக்கிற அவரைப் பார்க்கும் போது... அவர் கஷ்டபப்டுறமாதிரி தோணாது. அழுத குழந்தைக்குத்தான் தாய்கூட பால் கொடுப்பா. கலைஞானம் என்கிட்ட கேட்டிருக்கணும். பத்து படமாவது அவருக்கு நான் செய்துகொடுத்திருக்கணும். கலைஞானத்துக்கு வீடு கொடுக்கிற வாய்ப்பை நான் அரசாங்கத்துக்கு தரமாட்டேன்...  நான் வாங்கித்தருவேன். கலைஞானத்தோட கடைசி மூச்சு... நான் வாங்கித்தர்ற வீட்டுலதான் போகணும். இன்னும் பல்லாண்டுகாலம் கலைஞானம் நலமுடன் வாழணும்” என்றார் ரஜினி.

விழாவுக்குகான வெறும்பேச்சாக இல்லாமல்... கலைஞானத்திற்கு வீடு வாங்கித்தருவதில் கலைஞானத்தைவிட தீவிரமாக இருந்தார் ரஜினி. விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகைக்கு செக் போட்டு ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் கொடுத்துவிட்டுத்தான் ‘தர்பார்’ படப்பிடிப்பிற்குச் சென்றார் ரஜினி. கடந்த 5.10.2019 வெள்ளியன்று... அமுதினி ஃபிளாட்ஸ், 34 விநாயகம் தெரு, வெங்கடேசன் நகர், விருகம்பாக்கம், சென்னை முகவரில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் 1320 சதுரடியில் மூன்ரு படுக்கையறைகளும், இரண்டு கார் பாக்கிங்களும் கொண்ட வீடு வாங்கப்பட்டது.


07.10.2019 அன்று காலை பத்துமணிக்கு தான் வாங்கிக்கொடுத்த புதுவீட்டுக்கு ரஜினி வந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் கலைஞானம். பூஜையறையில் குத்துவிளக்கேற்றினார் ரஜினி. கூடவே பாபா படம் ஒன்றையும் பரிசளித்தார். அதன்ப்பின் ரஜினிக்கு மில்க் ஸ்வீட் தரப்பட்டது. அதைச் சாப்பிட்டபின் கலைஞானம் தன் குடும்பத்தினரை ரஜினிக்கு அறிமுகம் செய்துவைத்தார். பிறகு வீட்டைச் சுற்றிப்பார்த்த ரஜினி... “வீடு தெய்வீகமா இருக்கு” என மகிழ்ச்சி தெரிவித்தார். அதன்பின் விடைபெற்றுச் சென்றார் ரஜினி. கலைஞானத்திடம் நாம் இதுபற்றி கேட்டபோது....  மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக... அவர் சொன்னார்....“வீடு வாங்கிக்கொடுத்தார்... விளக்கும் ஏற்றிவைத்தார்”


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.