Skip to main content

யாருக்காவது கிடைப்பாங்களா சார், இப்படி ஒரு அம்மாவும் அப்பாவும்?  ஆட்டோ சங்கர் #2

Published on 04/05/2018 | Edited on 05/05/2018

குறிப்பு : இந்தத் தொடர் ஒரு குற்றவாளிக்கு வக்காலத்து அல்ல. 1994ஆம் ஆண்டு நக்கீரனில் இந்தத் தொடர் வெளிவருவதைத் தடுக்க அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள் எத்தனையோ கெடுபிடிகளை செய்தார்கள். அதுவே ஒரு தனிக்கதை. அந்த அளவுக்கு ஆட்டோ சங்கருடன் பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடர்பு இருந்தது. நாம் சற்றும் எதிர்பார்க்காத தலைவர்கள் கூட அவனது வாழ்வில் வந்து போவார்கள். அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன, அடுத்தடுத்த பகுதிகளில்...   

என் வாழ்க்கையை எந்த இடத்தில் இருந்து சொல்ல ஆரம்பிச்சாலும் வேதனையான முள் ஒண்ணு விசாலமா முளைச்சிருப்பதைப் பார்க்கலாம். மத்தவங்களுக்கு வாழ்க்கையிலே கஷ்டம் வரும். எனக்குக் கஷ்டமே வாழ்க்கையாயிடுச்சு.
 

auto shankar



அப்ப எனக்கு ஏழெட்டு வயசிருக்கும். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் வராததுமா சுடச்சுட அந்தச் செய்தியை சொன்னாங்க. அம்மா வாயிலேயும் வயித்திலேயும் அடிச்சுக்கிட்டு அழுதுச்சு. "டேய் சங்கரு! உன் அப்பா ஒருத்தியோட ஓடிப் போயிட்டாருடா!'' என் காதுலே காய்ச்சின இரும்பை ஊற்றின வலி! அந்தச் செய்தியை ஜீரணிச்சுக்கிற வயசில்லை அது; இன்னும் சொல்லப்போனா அது செய்தியே இல்லை. இடி! பையன் வீட்டைவிட்டு ஓடறது நடக்கும். தகப்பன் ஓடறதாவது? ஏற்கனவே என் அப்பாவுக்கு ரெண்டு பெண்டாட்டி. மூத்த சம்சாரம் இருக்கிறப்ப ரெண்டாவதா என் அம்மாவைக் கட்டிக்கிட்டாரு... இந்த மூன்றாவது சம்சாரம் புது சமாச்சாரம்!

என் அம்மாவுக்கும், பெரியம்மாவுக்கும் இருந்த குழந்தைகளை வச்சு ஒரு நர்சரி ஸ்கூலே நடத்தலாம். அம்புட்டு பிள்ளைங்க! ஓடிப்போன மனுஷன் சும்மா போயிருக்கக் கூடாதா... இருந்த சொத்து பத்தையெல்லாம் வித்து, பணத்தையும் எடுத்துகிட்டு போயிட்டாரு! நாங்க சோத்துக்கு லாட்டரி!

அம்மாவும், பெரியம்மாவும்... ஏன், மொத்த குடும்பமும் இடிஞ்சு போயிட்டோம்.
"இனிமே என்ன பண்றது?'
எனக்கு பயங்கரக் குழப்பம்.

அப்பா ஏன் ஓடிப்போகணும்? வீட்டிலே ரெண்டு அம்மாவை வைச்சிருக்கிற மாதிரி, இந்த மூணாவது அம்மாவையும் வைச்சிருக்கிறதுதானே? இனிமே அப்பா வருவாரா, மாட்டாரா? வருவார்ன்னா எப்ப? வந்து கொஞ்சநாள்லே நாலாவதா ஒரு அம்மாவைக் கூட்டிவருவாரா? அவளோடும் ஓடிப்போவாரா? இன்னும் எத்தனை அம்மாவைக் கூட்டி வருவார்? இதுக்கெல்லாம் யாரிடம் கேட்டால் பதில் தெரியும்?

 

auto mother

 

 


அம்மாகிட்டே கேட்க மனசில் தெம்பில்லை. பிடிக்காத கேள்விகளுக்குப் பதில் கேட்டால், ஒண்ணு அம்மா அழும் அல்லது அடிச்சு என்னை அழவிடும். பத்து, பதினைஞ்சு குடும்பங்களுக்கு வைக்கவேண்டிய கஷ்டத்தை, கடவுள் எங்க ஒரு குடும்பத்துக்கே குடுக்கிறது எப்பவும் வாடிக்கை! அப்பவும் அப்படித்தான்.

அம்மாவும் பெரியம்மாவும் அக்கம்பக்க வீடுகளில் பாத்திரம் கழுவி, பாத்திரம் கழுவி அம்புட்டு குழந்தைகளோட வயித்தைக் கழுவ முடியுமா என்ன? குழந்தை பெறக்கிறதை நிறுத்த கருப்பையை கத்தரிக்கிறாங்களே...? அதுபோல பசியை நிறுத்த இரைப்பையை எடுத்துடலாம்ன்னு ஒரு ஏற்பாடு இருந்தா, எவ்வளவு நல்லா இருக்கும்? ஹும்!!

தம்பி மோகன் அழுதுகிட்டே வந்தது தூரத்திலிருந்தே தெரிந்தது. என்னைவிட ரெண்டு வயசு சின்னவன் அவன்! பசி பொறுக்கத் தெரியாது! அதற்குப் பழகவும் இல்லை. அப்போதைக்கு ஆறுதல் சொல்லுவேன் நான்! அம்மாகிட்டேயும் சிபாரிசு செய்வேன். அம்மா ஏதாச்சும் கொடுத்து அவன் அழுகையை நிறுத்தும். எதுவுமில்லைன்னா உதையாச்சும் கொடுத்து நிறுத்தும். எனக்குத்தான் பாவமா இருக்கும்! பசியைவிடவும் இந்த பாசம் என்னை படுத்தின பாடு ரொம்பவும் அதிகம்!

அவன் அழுகைக்குக் காரணம் கேட்டேன். ஸ்கூல்லே யாரோ ஒரு பையன் எங்க அப்பா ஓடிப்போனதை சொல்லி கேலி பண்ணிக்கிட்டேயிருக்கான்னு சொன்னான். எனக்கு கண்ணுமண்ணு தெரியாம கோபம் வந்துச்சு. "யாருடா அவன்?'' தம்பி பசியைத் தீர்க்கத்தான் வகை தெரியல; பழியைத் துடைக்கவுமா முடியாது. 

 

"சொல்லு யாரவன்?''

"ஜோஸி நாயரோட பையன்''

அம்மா பாத்திரம் தேய்க்கிற வீடுகளில் ஒன்றுதான் ஜோஸி நாயர் வீடும். இருக்கட்டுமே! சம்பளம் தரதுக்குத்தான் வேலை வாங்கறாங்களே... ஏச்சும் வாங்கணுமா என்ன? ஜோஸி நாயரோட மகனை விசாரிக்கக் கிளம்பினேன்.

ஸ்கூலிலே நாங்க ரெண்டுபேரும் மும்முரமா மோதிக்கிட்டிருந்த சமயத்திலே வாத்தியார் வந்துட்டாரு. சண்டை விலக்கினாரு. எனக்கு செம அடி! "படவா ராஸ்கல்! அவனை ஏண்டா அடிக்கிறே? ஜோஸி நாயர் மகன் மட்டுமா பேசறான்... ஊர் முழுக்க உன் அப்பாவைப் பேசத்தான் செய்யுது. ஊரைப்பூரா அடிப்பியா?'' "அவரு செஞ்சதுக்கு எங்களுக்கு ஏன் சார் தண்டனைன்னு கரகரப்பா கேட்டேன். அடக்கப் பார்த்தும் மீறிக்கிட்டு கண்ணீர் ததும்பினது.

வாத்தியார் பெருமூச்சு விட்டார்! "சங்கர்... நிறைய வாய்களை மூடறதை விட ரெண்டு காதுகளையும் மூடிக்கிறது சுலபமா... இல்லையா?'' அவர் சொன்னதன் அர்த்தம், அப்ப எனக்கு சுத்தமாப் புரியல. இப்ப புரியறபோது, அது காலம் கடந்த ஞானம்!

 

auto sankar brother



அதற்கப்புறம் வறுமையிலே நாங்க திண்டாடினது, ஸ்கூல்லே ஜோஸி நாயரோட பையன் என் தம்பியைக் கேலி செய்தது... நான் சண்டைக்குப் புறப்பட்டது... இதெல்லாம் நடந்து ஒரு வருஷம் கூட ஆகியிருக்காது. இன்னொரு இடியையும் அந்த சின்ன வயசிலே நான் சந்திக்க வேண்டியிருந்தது. அப்பவும் அப்படித்தான் அலறினேன்.

தூங்கிட்டிருந்த என்னை உலுக்கி எழுப்பிச்சு பெரியம்மா. அரக்கப் பரக்க விழித்தேன்.
"என்ன பெரியம்மா?''
"ஒன் ஆத்தாக்காரி ஒருத்தன்கூட ஓடிப்போயிட்டாடா?''
அப்படியே உறைஞ்சு போயிட்டேன். நெஞ்சுக்குள்ளே பூமி குலுங்குகிற அதிர்வு.
"பெரியம்மா''ன்னு அலறிட்டேன்.
பெரியம்மா விவரிச்சாங்க. இருக்கிற துணிமணி, பண்ட பாத்திரத்தோட கொஞ்சநஞ்சமிருந்த பணத்தையும் தூக்கிட்டு தன் கள்ளக்காதலன் கூட அம்மா ஓடிடுச்சாம்!

 


அப்படியே அப்பாவோட பாணி! ரெண்டு பேருமா எங்கிருந்துதான் ஜோடி சேர்ந்தாங்களோ? உலகத்திலே யாருக்காவது கிடைப்பாங்களா சார், இப்படி ஒரு அம்மாவும் அப்பாவும்? எச்சிலைக் கடிச்சு விழுங்கினேன். தம்பி மோகன் நடந்த விபரம் தெரியாததால் வாயில் விரல்போட்டு தூங்கிக்கிட்டிருந்தான்.

"யாரு கூட ஓடிச்சு?''ன்னேன். கசப்பு என் மனசைக் கசக்கினது. பெரியம்மா அமைதியா சொல்லிச்சு.
"ஜோஸி நாயர்கூட''

நொறுங்கிப்போனேன். பெட்ரோல் கிணத்தில வெடிகுண்டு விழுந்தது மாதிரி குலைஞ்சு போயிட்டேன். மெள்ள மெள்ள அழ ஆரம்பிச்சேன். விசும்பல் வளர்ந்து பெரிசான அழுகையா மாற பெரியம்மா ஆறுதலா தடவிக்கொடுத்தாங்க.

"அழாதடா... நாதான் இருக்கேனில்ல. அப்புறமென்ன?''
அப்புறமும் என் அழுகை நின்ற பாடில்லை.
"ச்ச்ச்! கண்ணை துடைச்சிக்கயேன் ராசா! நாதான் இருக்கேனில்லே. ஏன் கவலைப்படறே?'' -பெரியம்மா.
"அதுக்கில்ல பெரியம்மா..... எனக்காச்சும் இது பழகிப்போச்சு. ஜோஸி நாயரோட மகன் பாவமில்ல? அப்பா ஓடிப்போனது அவனுக்கு இதானே மொத தடவை... எவ்வளவு கஷ்டப்படுவான் அவன்?'' அலறினேன்.

என் எதிர்காலம் திசை திரும்பியது.  

 

எந்த திசையில்? அடுத்த வெள்ளி (11-மே-2018) சொல்கிறேன்... 


முந்தைய பகுதி...

 

auto sankar 1

 

 

 

 

 

 

 

 

 

 

 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

இருவரின் பகை; நடுங்க வைத்த 17 கொலைகள்! 

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

madurai rowdyism in 20 years

 

செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி வெள்ளைக்காளி தாயார் ஜெயக்கொடி, மனைவி திவ்யா ஆகிய இருவரும் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெயக்கொடியும், திவ்யாவும், காவல் துறையினர் வெள்ளைக்காளியை பொய்ப் புகார் கூறி என்கவுண்டர் செய்யத் திட்டமிடுகிறார்கள். மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்படி அழைத்துச்செல்லும்போது தப்ப முயன்றதாகக் கூறி போலீசார் என்கவுண்டர் செய்யவிருப்பதாகக் கூறினார்கள். அத்தோடு அவரைக் காப்பாற்ற வேண்டுமென நீதிமன்றத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.

 

இவர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு 15 நாட்களுக்குப் முன் (செப்.4) பெங்களுரிலுள்ள கம்மனஹள்ளி சுக்சாகர் ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த வி.கே.குருசாமி என்பவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த வி.கே. குருசாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளைக்காளியின் குடும்பத்தினர் திருச்சியில் பேட்டி கொடுக்கும்வரை தீவிர சிகிச்சையில்தான் இருந்தார் குருசாமி.

 

யார் இந்த வெள்ளைக்காளி, வி.கே. குருசாமி? இவர்களுக்குள் என்ன பகை?


காவல்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே குருசாமியும், ராஜபாண்டியும். பிழைப்புக்காக மதுரை வந்தவர்கள். மதுரையிலேயே செட்டிலாகி விட்டார்கள். வி.கே.குருசாமி தி.மு.க.வில் சேர்ந்து மதுரை மாநகராட்சி மண்டல தலைவராகவும், ராஜபாண்டி அ.தி.மு.க.வில் சேர்ந்து மாநகராட்சி மண்டல தலைவராகவும் உயர்ந்தார்.

 

madurai rowdyism in 20 years
வி.கே. குருசாமி

 

கடந்த 2003-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபாண்டி ஆதரவாளரான சின்னமுனுசாமி என்பவர் வி.கே.குருசாமிக்கு பெரும் குடைச்சலாக இருந்துள்ளார். எனவே கீரைத்துறையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பிரச்சனை பண்ணி, அதைப் பெரிதாக்கி சின்னமுனுசாமியை அக்டோபர் 30-ஆம் தேதி வி.கே,குருசாமியும் அவருடைய ஆட்களான பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமுர்த்தி, வழுக்கை முனுசு, கணுக்கண் முனியசாமி ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், சின்ன முனுசாமியின் தம்பி காளீஸ்வரன் என்ற வெள்ளைக்காளி, தன் அண்ணனைக் கொன்ற வி.கே.குருசாமியின் குடும்பத்தையே கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். இதற்கிடையில் வி.கே.குருசாமி ஆதரவாளரான வழுக்கை முனுசை, ராஜபாண்டி ஆதரவாளரான சப்பாணி முருகன் கொலை செய்கிறார்.

 

madurai rowdyism in 20 years
ராஜபாண்டி

 

இதற்கடுத்து இருதரப்பிலும் மாறி மாறி கொலைகள் நடந்தன. 2008-ஆம் ஆண்டு, வி.கே குருசாமி தரப்பில் மாரிமுத்து, ராமமூர்த்தி, 2013-ல் குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியைக் கொன்றனர்.

 

2015-ஆம் ஆண்டு ராஜபாண்டி ஆதரவாளரான மொட்டை மாரியை குருசாமி தரப்பினர் போட்டுத்தள்ளினார்கள். 2016-ல் வி.கே.குருசாமியின் மருமகன் காட்டுராஜாவை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் வெட்டிக் கொலைசெய்தனர்.

 

2017-ல் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராஜபாண்டியின் மகன் தொப்பி என்ற முனியசாமியை சாம்பலே கிடைக்காதவாறு எரித்துக்கொன்றனர். அதைத் தொடர்ந்து வி.கே.குருசாமி ஆதரவாளரான சடையாண்டியை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் கொலைசெய்தனர். இந்த வழக்கில் 2018-ஆம் ஆண்டு மதுரை சிக்கந்தர்சாவடியில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை போலீசார் சுட்டுக் கொலைசெய்தனர். இதில் வெள்ளைக்காளி தப்பிவிட்டார். வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் வி.கே.குருசாமி வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தையே கொலை செய்ய முயல, வீட்டைப் பூட்டி போலீசாருக்கு தகவல் சொல்ல, போலீசார் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ரவுடிகளை வெளியேற்றி சிலரை கைதும் செய்தனர்.

 

madurai rowdyism in 20 years
வெள்ளைக்காளி

 

குருசாமி மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் வெளியேவந்த குருசாமியும் மகன் மணிகண்டனும் ராஜபாண்டி தரப்பை எதிர்க்க ஆளில்லாததால் சென்னை, பெங்களூரு என்று தலைமறைவாக வாழத்தொடங்கினார்கள்.

 

பல்வேறு வழக்குகள் இருப்பதால் அதில் ஆஜராவதற்கு அடிக்கடி மதுரை வரும் குருசாமி, வழக்கம்போல் கடந்த செப்.2-ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி, 3-ஆம் தேதி மதுரையிலிருந்து விமானம் மூலமாக பெங்களூரு சென்றுள்ளார். அதற்கு அடுத்த நாள்தான் அவரை இரண்டு காரில் பின்தொடர்ந்த ராஜபாண்டி தரப்பினர் பெங்களுரில் வைத்து கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணம் வெள்ளைக்காளியும் அவருடைய கூட்டாளிகளும்தான் என்று சொல்லப்படுகிறது.

 

கடந்த 20 ஆண்டுகளில் குருசாமி தரப்பில் 10 பேரும், ராஜபாண்டி தரப்பில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜ பாண்டி இறந்துவிட்டார். இதனால், குருசாமியை பழி வாங்கும் பணியை தற்போது புழல் சிறையிலுள்ள வெள்ளைக்காளி முன்னெடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வெள்ளைக்காளியை என்கவுன்ட்டரில் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவரது தாயும் மனைவியும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துவருகின்றனர். அதன் ஒரு அம்சமாகத்தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஆகியவை நடந்தன.

 

"வருடக்கணக்கில் தொடரும் பழிக்குப் பழி தொடர் கொலைகளின் பின்னணியில் யார் இருப்பது என்று பார்த்து, அந்தக் கும்பலை சிறையில் தள்ள வேண்டும், அமைதி திரும்ப வேண்டும்' என்கிறார்கள் மதுரைவாசிகள்.