Skip to main content

'தலைவர்' ஸ்டாலின் இவற்றையெல்லாம் சாதிப்பாரா? 

Published on 28/08/2018 | Edited on 28/08/2018

'தளபதி' இன்று 'தலைவர்' ஆகியிருக்கிறார். திமுகவினர் கொண்டாட்டமாயிருக்கின்றனர். எளிதில் கிடைத்துவிடவில்லை, என்றாலும் இதை விடப் பெரிய சவால்கள் வெளியே இருக்கின்றன. கட்சியில் மூத்த, முக்கிய தலைவர்களின் அன்பைப் பெற்றுவிட்டார். திமுக தொண்டர்களின் விருப்பமும் அவர்தான். அழகிரி பிரச்சனை தொடர்ந்தாலும் அது கட்சிக்குள் பெரிதாக எதிரொலிக்காது என்பது தெரிகிறது. பிற கட்சிகளுடனான உறவு, தேசிய கட்சிகள் தொடர்பு என திமுகவிற்கான அனைத்து செயல்பாடுகளையும் சில ஆண்டுகளாக முழுமையாக முன்னெடுப்பதனால் அந்த சவால்களும் அவருக்குப் பழக்கமானவையே. இவற்றையெல்லாம் தவிர்த்து மக்கள் மேடையில்தான் உண்மையான சவால்கள் அவருக்கிருக்கின்றன.

 

mkstalin



தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்களுள் ஒருவராக ஸ்டாலின் இருக்கிறார். மக்கள் அன்பைப்  பெற்ற கட்சித் தலைமையும் இல்லை, மதிக்கத்தக்க வகையில் ஆட்சியுமில்லை என்று அ.தி.மு.க இருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக மக்கள் நினைப்பவர்களில் முதலில் இருப்பவர் ஸ்டாலின். சமூக நீதி போராட்டங்கள், இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் ஆகியவற்றை பார்த்திராத இன்றைய தலைமுறையின் பார்வையில் ஸ்டாலின் யார்? இந்தத் தலைமுறையின் ஆதரவைப் பெறும் பயணத்தில் ஸ்டாலினுக்கு உள்ள சவால்கள் என்ன?

 

  • 1967ல் இந்திய துணைக் கண்டம் முழுவதும் தன் ஆளுமையைக் கொண்டிருந்த காங்கிரசை, தமிழகத்தில் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய போது, திமுக தமிழகம் தேடிய மாற்றமாக இருந்தது. காங்கிரசின் பண்ணையார்கள், பணக்காரர்களை நடுங்க வைத்த பாட்டாளிகளாக இருந்தனர் திமுகவின் மாவட்ட செயலாளர்களும் நிர்வாகிகளும். ஆனால், இந்தத் தலைமுறை பார்க்கும் திமுகவின் மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளுமோ கல்லூரிகளுக்கு சொந்தக்காரர்கள், தொழிலதிபர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள். சாதாரண மக்களுக்கான கட்சியாக, பெரும் பின்புலன் இல்லாத இளைஞர்களும் செயல்படக்கூடிய கட்சியாக திமுக இருக்கிறதா என்பதையும், மக்களுக்கு நெருக்கமாக திமுக நிர்வாகிகள் இருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்து, இளைஞர்களிடம் அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

     
  • 2006-11 கடைசியாக தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த காலகட்டம். 2ஜி ஊழல் வழக்கு, இலங்கையில் இறுதி யுத்தம் உச்சத்தில் இருந்த பொழுது எதிர்பார்த்த வேகத்தில், தீவிரத்தில் செயல்படவில்லை என்ற பெயர், மாவட்டங்களில் அமைச்சர்கள் மீதான நில அபகரிப்பு, தொழில் அராஜக புகார்கள், திருமங்கலம் ஃபார்முலா என இவைதான் திமுகவின் கடைசி ஆட்சி புதிய வாக்காளர்களிடம் விட்டுச் சென்ற தடங்கள். மெச்சத்தக்க ஆட்சியைத் தராத அதிமுகவையே மீண்டும் மீண்டும் அரியணையில் ஏற்ற இவையும் காரணம் என்பதை மறுக்க முடியாது. அதிமுக அரசு இவற்றையெல்லாம் தாண்டும் அளவுக்கு ஆட்சி செய்து வந்தாலும் இந்தத் தடயங்களை எல்லாம்  மாற்றி புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பதும் ஒரு சவாலே.

     mk and mks

     
  • இன்றைய நிலையில் திமுகவில் புதிதாய் சேரும் ஒரு சாதாரண இளைஞர் எந்த அளவுக்கு கட்சிக்குள் வளர முடியும் என்பது ஒரு கேள்வியே. அந்த அளவு கெட்டி தட்டிப் போய் இருக்கின்றன திமுகவின் அதிகாரச் சுவர்கள். தலைமை அளவில் வாரிசு அரசியல் என்ற விமர்சனம் ஒரு பக்கமென்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் அது இருப்பதை கட்சியின் தொண்டர்களே மறுக்க மாட்டார்கள். ஜனநாயக முறைப்படி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும்  கட்சி என்ற பேர் இருந்தாலும்  பெரும்பாலான மாவட்டங்களில் பன்னெடுங்காலமாக மாவட்ட செயலாளர்கள் மாற்றமே இல்லாமல் இருப்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அவர்களுக்கு அடுத்து இப்பொழுதே வாரிசுகள் வரிசையாக இருக்கின்றனர். ஸ்டாலின், பதினான்கு வயதில் கட்சிப் பணியைத் தொடங்கி, 23 வயதில் சிறை சென்றவர். அவர் மேல் இருக்கும் அதே பார்வை உதயநிதி மேல் இருக்காது. ஸ்டாலின் பிறந்தநாளன்று  தன் பேரனுடன் வந்து பெரியார் சமாதிக்கு மரியாதை செலுத்தியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்றாலும், தலைமையிலிருந்து அடிமட்டம் வரை வாரிசு அரசியல் என்ற உணர்வைப் போக்குவது பெரும் சவால். 

     
  • சுற்றுப்புறச்சூழல், ஆறுகள் அழிவு, மலைகள் ஆக்ரமிப்பு என இயற்கை வளங்களை அழிப்பதில் தமிழகம் பின்தங்கிவிடவில்லை. ஆற்று மணலிலிருந்து இப்பொழுது எம்-சாண்ட் வரை எதிலுமே திமுக காரர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. இன்றைய இளைஞர்கள், இயற்கை விவசாயம், ஏரி,  குளங்கள் மீட்பு, மீத்தேன், நியூட்ரினோ எதிர்ப்பு என பலவகைகளில் சுற்றுச் சூழலை மீட்டெடுக்க முயல்கின்றனர். அதைப் பற்றி பேசுகின்றனர். அந்த வகையில் ஏரிகளை ஆக்கிரமிக்காமல், ஆறுகளை சுரண்டாமல் காக்கும், காடுகளை அழிக்காமல் வளர்க்கும் கட்சியாக திமுக மக்கள் மனதில் பதிய வேண்டுமென்பது ஒரு சவால்தான்.

     
  • இந்தி எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு என எதிர்ப்புகளை மட்டுமே எதிர்பார்ப்பவர்கள் அல்ல இன்றைய இளைஞர்கள். மாநிலத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முக்கியம்தான். அதைவிட முக்கியமாகக் கருதப்படும் பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு தலைமுறையில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், முன்னேறுவோம் என்றெண்ணி பெருகிப் போன  பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து இன்று வேலை வாய்ப்பில்லாமல் தவிக்கிறார்கள். தமிழகத்துக்கு வருவதாக இருந்த புதிய நிறுவனங்களோ நெல்லூருக்கும் விஜயவாடாவுக்கும் சென்றுவிட்டன. சுற்றுச்சூழலிலும் கீழே சென்று, தொழில்துறையிலும் கீழே செல்லும் தமிழ்நாட்டை மீட்க முறையான விவரமான  திட்டங்கள் வேண்டும்.

     mks

     
  • ஒரு பக்கம் சீமான், திருமுருகன் காந்தி என போராட்ட களத்திலும் மறுபக்கம் ரஜினி, கமல், விஜய் என நட்சத்திர வெளிச்சத்திலும் இளைஞர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதையெல்லாம் தாண்டி அரசியல் சிந்தனை உள்ள இளைஞர்களை ஈர்க்க இன்னும் வீரியமான செயல்பாடுகள் தேவை. ஜல்லிக்கட்டு, நீட் என இளைஞர்கள் களத்துக்கு வந்துவிட்ட காலகட்டம் இது.சமீபமாக சீறினாலும், இடையில் பல தருணங்களிலும், 'பாயிண்ட் வரட்டும், பாயிண்ட் வரட்டும்' என்று பேசாமல் இருந்தது ஏமாற்றமே. முந்தைய தலைமுறை போல எந்தத் தயக்கமும் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசுவது, பன்னீர்செல்வத்துடன் ஒரே மேசையில் உணவருந்துவது என்று அரசியல் நாகரீகத்தில் அடுத்த கட்டத்தை எட்டியிருந்தாலும், அது வெறுமனே அதிகாரத்தில் இருபவர்களுக்கிடையேயான நல்லிணக்கமாக சுருங்கி விடாமல் மக்கள் பிரச்சனைகளில் எந்த அளவுக்கு பயன்படும் என்பதும் முக்கியம். 'நமக்கு நாமே' பயணத்தில் இளமைத் தோற்றம், சட்டசபையில் ஆவேசம் என எல்லாவற்றையும் மீம்ஸ் போடும் இந்தத் தலைமுறையின் பெரும்பான்மையை ஈர்ப்பது ஒரு பெரிய சவாலே.


பல சவால்களை பல விதங்களில் எதிர்கொண்டுதான் திமுக எனும் பேரியக்கத்தின் தலைவராகியிருக்கிறார் தளபதி ஸ்டாலின். அவற்றை விட சற்று கடினமான  இந்த சவால்களை வென்று திமுகவை வெற்றிக்கரை சேர்ப்பாரா? பார்ப்போம்.         


 

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.