Skip to main content

நிதானமாகப் பேசுங்கள் என்றால் அமைச்சர் சண்முகத்துக்கு ஏன் கோபம் வருகிறது..? - தேனி கர்ணன் கேள்வி!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021
k


சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.வி சண்முகம் தினகரனை பற்றி கடுமையான வார்த்தைகளில் பேசியிருந்தார். அடிக்கடி சர்ச்சை பேச்சுகளில் சிக்கி கண்டனத்துக்குள்ளாகி வரும் அமைச்சர் சண்முகம், தற்போது தினகரன் குறித்து கடுமையான சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக நம்முடைய கேள்விக்கு தேனி கர்ணனின் பதில் வருமாறு, 

 

தமிழக சட்ட அமைச்சர் நேற்று டிடிவி தினகரனின் அறிக்கைக்குப் பதில் அளித்துப் பேசியிருந்தார். தினகரன் தேவையில்லாத கருத்துகளைத் தெரிவிப்பதாகவும் கூறிய அவர், தினகரன் குறித்து அன்பார்லிமெண்டரி வார்த்தைகளைப் பயன்படுத்தி அவரை தாக்கியுள்ளார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

சட்ட அமைச்சர் சண்முகம் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட சமுதாயத்தை தாக்குகின்ற மாதிரியும், தனிப்பட்ட நபர்களை விமர்சனம் செய்கின்ற நோக்கிலும்தான் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். சின்னம்மா மருத்துவமனையில் இருந்து தமிழகம் திரும்ப இருந்த நிலையில், சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்துக்குச் சென்று புகார் கொடுக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்கள். அமைச்சர்கள் முதலில் டிஜிபி அலுவலகம் செல்லலாமா? இதற்கு முன்பு அந்த மாதிரியான முன்மாதிரிகள் இருக்கின்றதா? இவர்கள் தங்களுடைய பதவியின் தன்மை புரியாதவர்களாக இருக்கிறார்கள். அந்த பேட்டியில் அமைச்சர் சசிகலா உள்ளிட்டோரை இவர்கள் எல்லாம் குற்றப்பரம்பரையைச் சார்ந்தவர்கள். கொள்ளை அடிப்பதுதான் இவர்களின் நோக்கம் என்று ஆவேசமாகத் தெரிவித்தார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. 

 

தமிழகத்தின் சட்ட அமைச்சராக அவர் இருக்கிறார். எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியவேண்டும். அமைச்சராக இருக்கக் கூடியவர்கள் கட்டாயம், சாதி ரீதியாகப் பேசக் கூடாது. ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு அமைச்சர் பேசியுள்ளார். எந்த ஒரு மதத்தையும் தவறாகப் பேசக்கூடாது. இதை ,அவர் பதவி ஏற்கும் போது உறுதி மொழியாக எடுத்திருப்பார். அப்படி இருக்கையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை குற்றப்பரம்பரை என்றும், அவர்கள் கொள்ளை அடிப்பதுதான் தொழிலாக வைத்துள்ளார்கள் என்றும் அவதூறாகப் பேசியுள்ளார். கோடிக்கணக்கான மக்கள் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்களாக தென் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் இவர் அவமதித்துள்ளார். குற்றப்பரம்பரை என்றால் என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள அமைச்சர் முதலில் வரலாறு படிக்க வேண்டும். எதனால் குற்றப்பரம்பரை என்று இவர்களுக்கு பட்டம் சூட்டப்பட்டது என்பதை இவர் புரட்டிப் பார்க்க வேண்டும். பிரிட்டீஸ் ஆட்சிக் காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடியவர்கள்தான் குற்றப்பரம்பரை என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் 64 சாதிகளை உள்ளடக்கியவர்கள். 

 

இவர்களை வழக்குப் போட்டு ஒன்றும் செய்யமுடியாது என்று கருதிய வெள்ளையர்கள், குற்றப்பரம்பரை சட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அதன்படி இந்தப் பிரிவு மக்கள் காலையிலும், மாலையிலும் காவல் நிலையம் சென்று கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனை விதித்தார்கள். இது ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் அல்லாமல், 64 சாதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இது எதைப் பற்றியும் அமைச்சர் படிக்காமல் நாட்டுக்காகப் போராடிய ஒரு சமூகத்தை திருடர்களாக, கொள்ளையர்களாக சித்தரித்துள்ளார். தற்போது டிடிவி தினகரன் என்ன பேசியுள்ளார். எதைப் பேசினாலும் நிதானமாகப் பேசுங்கள் என்றுதானே தெரிவித்துள்ளார். இதில் என்ன தவறு இருக்கிறது. எல்லோரும் சொல்வது தானே? நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அவர் ஊத்திக் கொடுத்தார், அதானே உங்கள் குலத்தொழில் என்று பேசுகிறீர்கள். இதை யார் சொல்லி நீங்கள் பேசுகிறார்கள். இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்" என்றார்.

 

 

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.