Skip to main content

அதிமுக யாருக்கு சொந்தம்? - தேர்தல் முடிவும் தொண்டனின் கண்ணீரும்..!  #4 

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

Who owns ADMK

 

“அரசியல் கட்சி நடத்துவது ஆட்சியைப் பிடிக்கத்தான், ஆட்சியைப் பிடிப்பது அதிகாரம் செலுத்தத்தான் என்ற சித்தாந்தங்களை ஒதுக்கியவர் அமரர் அண்ணா. அண்ணாயிசத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றி, அதன் மூலம் தூய்மையான ஆட்சியை, லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியை அமைத்துக் காட்டுவோம்!”  - அதிமுகவின் கொள்கையாக எம்.ஜி.ஆர். பிரகடனம் செய்த அண்ணாயிசம் இதுதான்!

 

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ‘கட்சியாவது.. கொள்கையாவது..’ என்கிற ரீதியில்தான் சகலமும் நடந்தன. தனக்கு எதிரான வலிமையான 12 வழக்குகளை ஜெயலலிதா சந்திக்க வேண்டியதாயிற்று. இந்திய நாட்டில், பதவியிலிருக்கும்போதே ஊழல் வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறை சென்ற முதல் முதலமைச்சர் என்ற பெயரெடுத்தார். “முதலமைச்சராக பதவியேற்ற முதல் 27 மாதங்களில், மாதம் 1 ரூபாய் மட்டுமே அடையாளச் சம்பளமாக பெற்று வந்தார் ஜெயலலிதா. நடிகை என்ற முறையில் அவரால் சொத்துகளை சேர்த்திருக்க முடியுமென்றாலும், அவர் பெயரிலான சொத்துகளுக்கு விளக்கம் அளிக்க, அது போதுமானதாக இல்லை. ஜெயலலிதாவோடு குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய முன்று பேரும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. அவர்களுக்கென்று ஊதியமும் இல்லை. இவர்கள், நீதியைக் குழிதோண்டிப் புதைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால்தான், வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. ஊழலை அளவின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. ஊழல்தான் ஒழுங்கீனத்தின் தாய். அது சமூக முன்னேற்றத்தை அழிக்கிறது; தகுதியற்ற ஆசைகளை வளர்க்கிறது; மனசாட்சியைக் கொல்கிறது; மனித நாகரிகத்தையே குலைக்கிறது!” என சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கடுமையாகச் சாடியிருந்தார் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.

 

Who owns ADMK

 

உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பிலும் ‘முறைகேடாக ஜெயலலிதாவும் சசிகலாவும் சேர்த்த சொத்துகளை, முறையாகச் சம்பாதித்தது போலக் காட்டுவதற்கு, போயஸ் இல்லத்தில் சதியில் ஈடுபட்டு செயல்படுத்தியுள்ளனர். இது ஆழ்ந்த சதியின் விளைவு.’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

ஆட்சி அதிகாரம் ஜெயலலிதா கையில் இருந்தபோது, ஊழல் புரிய தூண்டுகோலாக இருந்ததாலேயே, சசிகலாவுக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது உச்ச நீதிமன்றம். இந்த சசிகலாதான், தண்டனை முடிந்து விடுதலையானவுடன், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும், தனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கவில்லை என்று கோபத்தின் உச்சிக்கே சென்றார். இந்தத் தேர்தலில் முக்குலத்தோர் வாக்குகளை தினகரனின் அமமுக பிரிப்பதன் மூலம்  அதிமுக தோல்வி அடைய வேண்டும் என்ற திட்டத்தோடு, அரசியலைவிட்டு ஒதுங்குவதாக ஒப்புக்கு அறிக்கையும் விட்டார். தான் நினைத்தது நடக்கும்போது, அதிமுக என்ற கட்சி, வேறு வழியின்றி தன் பிடிக்குள் வந்துவிடும் என்பதே அவரது உள்நோக்கம்.

 

Who owns ADMK

 

டிடிவி தினகரன் மீதும், அந்நிய செலாவணி மோசடி, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர்களை மாற்றிய வழக்கு, பரணி பீச் ரிசார்ட்ஸ் வழக்குகள் பதிவாயின. வரி ஏய்ப்பு, வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடான முதலீடு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்கான ஃபெரா வழக்குகளை அவர் சந்திக்க நேரிட்டது. இரட்டை இலை சின்னம் தங்களது அணிக்கு கிடைப்பதற்காக, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி திஹார் சிறையில் கம்பி எண்ணிய அனுபவமும் தினகரனுக்கு உண்டு. இவரும்கூட, அதிமுகவை மீட்டு, அம்மா ஆட்சியை அமைப்பதே தனது நோக்கம் என்று கூறிவருகிறார்.

 

எம்.ஜி.ஆரின் அண்ணாயிச கொள்கைகளுக்கு மாறாக, கோடிக்கணக்கான ஊழல் பணத்தில் திளைத்துவிட்டு தண்டனை பெற்ற சசிகலா, எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியை, சொந்தம் கொண்டாட துடிக்கிறார். தனது சித்தி என்பதால், தினகரனும் அதற்கேற்ப காய் நகர்த்தி வருகிறார். அதிமுக என்ற கட்சியை மூலதனமாக்கி, அதிகாரத்தில் இருந்தபோது அரசியலை வைத்து, பணம் காய்ச்சி மரமாக உலுக்கி எடுத்து, சொந்தபந்தங்கள் அத்தனை பேரையும், பொருளாதார ரீதியாக அபரிமிதமான வளர்ச்சிபெறச் செய்தவர், சசிகலா. 

 

சினிமா வாய்ப்பு இல்லாமல் ஜெயலலிதா தவித்த காலக்கட்டமும் இருந்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின், அரசியலில் தீவிரம் காட்டியபோது, பொருளாதார தேவைகளுக்காக அவர் பட்ட கஷ்டத்தை உடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனால் பாருங்களேன்! தமிழக மக்கள், ‘ஷிஃப்ட்’ முறையில் மாறி மாறி முதலமைச்சராக்கிவிட, இறந்தபோது ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.913 கோடிக்கு உயர்ந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், உயர் நீதிமன்ற தீர்ப்பால் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு ஜெ.தீபாவும் தீபக்கும் நேரடி வாரிசுகள் ஆகிவிட்டனர். 

 

அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆருக்கு நேரடி வாரிசு இல்லையென்றாலும், அண்ணன் சக்ரபாணி உள்ளிட்ட தனது சொந்தங்கள் யாரையும் அரசியலுக்குள் இழுக்கவில்லை. எம்.ஜி.ஆர். வழி சொந்தங்களுக்கோ, அவருடைய மனைவி வி.என்.ஜானகி வழி சொந்தங்களுக்கோ, மலைக்கும் அளவுக்கு சொத்துகள் இல்லை. திமுக நிறுவனரான அண்ணாவுக்கும் நேரடி வாரிசு இல்லை. அக்கா மகள் சௌந்தரியின் மகன்களான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகிய நால்வரும் அண்ணாவின் தத்துப் பிள்ளைகள். நேர்மையாளரான பரிமளம், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவருடைய வாழ்க்கைச் சூழல் இருந்தது. அண்ணா குடும்பத்தினர் யாரும், அரசியல் கட்சிகளிடமிருந்தோ, ஆட்சியாளர்களிடமிருந்தோ எதையும் எதிர்பார்த்ததில்லை.

 

அண்ணா, எம்.ஜி.ஆர். குடும்ப வாரிசுகளெல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் ஒதுங்கிவிட்டனர். சசிகலா, தினகரன் போன்றோரோ, அதிமுகவைக் கைப்பற்றி, பின்னாளில் ஆட்சி பீடத்தில் அமர்வதற்காக, இத்தேர்தலில் அக்கட்சியை வீழ்த்தும் திட்டத்தைக் கையில் எடுத்து, நடத்தியும் காட்டியிருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர் ஒருவர் இப்படிச் சொன்னார், “திமுக தானாக ஒன்றும் வெற்றிபெறவில்லை. சசிகலாவும் தினகரனும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து திமுகவை வெற்றிபெற வைத்து விட்டனர். இவர்களின் சுயநலமும், அமமுக பிரிக்கப்போகும் சாதி வாக்குகளும் தேர்தலுக்கு முன்பாகவே திமுகவின் வெற்றியை உறுதி செய்தது. 

 

இந்த அடையாளமும் ஆடம்பர வாழ்க்கையும் அதிமுக என்ற கட்சிதான், பின்வழியாக இவர்களுக்கு அள்ளிக் கொடுத்தது. அதிமுகவால் வளர்ந்து, அந்தக் கட்சியை அழிக்கத் துணிந்த துரோகிகள் இவர்கள். ‘என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை’ என்றார் ஜெயலலிதா. தனக்குப் பின்னால் இருப்பவர்களைப் பார்க்காமல் சொல்லிவிட்டார். அதிமுகவை பின்னால் இருந்து குத்திய இவர்கள், இந்தத் தேர்தலில்  ‘ஜீரோ’ ஆனார்கள். ஒரு தொகுதியில்கூட, அந்தக் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பது சரியாகிவிட்டது. 

 

Who owns ADMK

 

1991 தேர்தலில் அதிமுக கூட்டணி 225 தொகுதியில் வெற்றிபெற்றது. 1996 தேர்தலிலோ, ஜெயலலிதாவே பர்கூரில் தோற்றுப்போனார். அப்போது, உடன்பிறவா சகோதரியாக சசிகலா கூடவே இருந்தார். அந்தத் தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றிபெற்றது. அப்படி ஒரு தோல்வி இந்த 2021 தேர்தலில் கிடையாது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இனி, சசிகலாவுக்கு என்ன மரியாதை கிடைத்துவிடப் போகிறது? 

 

போலிப்பாசம் காட்டும் தலைவர்கள் வருவார்கள். வந்த சுவடு தெரியாமல் போய்விடுவார்கள். எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர்செல்வமோ, சசிகலாவோ, தினகரனோ, யாரும் கட்சியை முழுமையாக சொந்தம் கொண்டாட முடியாது. இரட்டை இலையைக் கெட்டியாகப் பிடித்தபடி, வெள்ளந்தியான தொண்டர்கள் விடும் மூச்சுக்காற்றில், அதிமுக இயங்கிக்கொண்டே இருக்கும். எம்.ஜி.ஆர். ஏற்றிவைத்த ஒளிவிளக்கு ஒருநாளும் அணையாது. சுயநலமிகளால் அதை அணைத்துவிடவும் முடியாது.” என்று நா தழுதழுக்கச் சொன்னபோது, அந்தத் தொண்டனின் கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது.

 

எம்.ஜி.ஆர். சிந்திய கண்ணீரில் தோன்றிய இயக்கம் அல்லவா! இந்தத் தேர்தல் முடிவுகளும் அதிமுக உண்மைத் தொண்டர்களை அழவைத்திருக்கிறது.

 

 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.