Skip to main content

ஊடகங்கள் மீதான வழக்குகள் ரத்து: "எந்தெந்த வழக்குகளுக்கு பொருந்தும்..?" - அரசு குற்றவியல் வழக்கறிஞர் விளக்கம்

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

which cases on media houses will be dismissed under tn govt order

 

திமுக ஆட்சிக்கு வந்தால் பத்திரிகைகள், ஊடகங்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் மீது கடந்த அதிமுக அரசால் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து, அதற்கான உத்தரவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (29.07.2021) பிறப்பித்திருந்தார். 

 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், "2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை, அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவற்றுள்‌ தி இந்து நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 4 வழக்குகளும்‌, டைம்ஸ்‌ ஆஃப்‌ இந்தியா நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 5 வழக்குகளும்‌, எக்கனாமிக்‌ டைம்ஸ்‌ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 1 வழக்கும்‌, தினமலர்‌ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 12 வழக்குகளும்‌, ஆனந்த விகடன்‌ வார இதழின்‌ ஆசிரியர்‌ மீது 9 வழக்குகளும்‌, ஜுனியர்‌ விகடன்‌ இதழின்‌ ஆசிரியர்‌ மீது 11 வழக்குகளும்‌, நக்கீரன்‌ இதழின்‌ ஆசிரியர்‌ மீது 23 வழக்குகளும்‌ முரசொலி நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 17 வழக்குகளும்‌ தினகரன்‌ நாளிதழின்‌ ஆசிரியர்‌ மீது 4 வழக்குகளும்‌ போடப்பட்டிருந்தன. மேலும்‌, புதிய தலைமுறை தொலைக்காட்சி, நியூஸ்‌ 7 தொலைக்காட்சி, சத்யம்‌ தொலைக்காட்சி, கேப்டன்‌ தொலைக்காட்‌சி, என்‌.டி. டி.வி தொலைக்காட்சி, டைம்ஸ்‌ நவ் தொலைக்காட்சி மற்றும்‌ கலைஞர்‌ தொலைக்காட்சி ஆகியவற்றின்‌ ஆசிரியர்கள்‌ மீது தலா ஒரு வழக்கு வீதம்‌ 7 அவதூறு வழக்குகள்‌ போடப்பட்டிருந்தன.

 

திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ “பத்திரிகையாளர்கள்‌ மீது பழிவாங்கும்‌ நோக்கத்தில்‌ போடப்பட்ட அவதூறு வழக்குகள்‌ அனைத்தும்‌ திரும்பப்‌ பெறப்படும்‌” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும்‌ வகையில்‌, பத்திரிகையாளர்கள்‌ மீது போடப்பட்ட 90 வழக்குகளைத்‌ திரும்பப்‌ பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று ஆணையிட்டுள்ளார்கள்‌'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

damodharan
                                                                                              வழக்கறிஞர் ஆ. தாமோதரன்

 

இந்நிலையில், திமுக அரசின் இந்த அறிவிப்பால் எந்தெந்த வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆ. தாமோதரனிடம் கேட்டபோது,  "தமிழக அரசின் உத்தரவின் பேரில் தொடரப்படும் அவதூறு வழக்குகள் முதற்கட்டமாக, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்யப்படும். அந்த  வழக்குகள் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும்... 'அமர்வு  நீதிமன்றத்தில்  நிலுவையில் இருக்கும் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்று சில பத்திரிகைகள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி தடை கேட்கும் அல்லது வழக்கை ரத்து செய்யக் கோரிக்கை விடுக்கும். 

 

சென்னை உயர் நீதிமன்றம் வழக்கிற்குத் தடை விதித்தாலும், ரத்து செய்தாலும் கடந்தகால அரசு அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டதன் மூலம், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்ட வழக்குகள், அதுதொடர்பாக கடந்த அரசு மேல்முறையீடு செய்ய இருந்த வழக்குகள் என  அனைத்து வழக்குகளுக்குமே இந்த உத்தரவு பொருந்துவதால் அவை அனைத்தும் ரத்தாகும்" என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.