Skip to main content

எங்கு ஆரம்பித்து எங்கு முடிந்தது.. புதிய வேளாண் சட்டங்கள்! 

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

Where it started and where it ended .. New agricultural laws!

 

ஒன்றிய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி புதிய மூன்று வேளாண் சட்டங்களை அறிமுகம் செய்தது. அதன்பிறகு அவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தும், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று பிரதமர் மோடி, அந்த மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என அறிவித்திருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்த நேரத்தில் அந்த சட்டங்களை அறிமுகப்படுத்தியது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டம், அதனைத் தொடர்ந்து மோடியின் திரும்பப் பெறும் அறிவிப்பு வரை ஒரு மீள் பார்வையிடுவோம். 

 

ஜூன் 5. 2020: மத்திய அரசு மூன்று புதிய வேளாண் மசோதாக்களை அறிமுகம் செய்தது.


செப்.14. 2020: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்


செப். 17. 2020: மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.


செப் 20. 2020: மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.


செப். 24. 2020: மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் மூன்று நாட்கள் ரயில் மறியலை அறிவித்தனர்.


செப். 25. 2020: அகில இந்திய கிஸான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பின் பெயரில் இந்தியா முழுக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


செப். 26. 2020: பாஜக கூட்டணியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது.


செப் 27. 2020: மூன்று புதிய வேளாண் சட்டங்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மேலும், புதிய வேளாண் சட்டம் அமலுக்கு வந்தது என அரசிதழில் தெரிவிக்கப்பட்டது.


நவ. 25. 2020: பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் சங்கத்தினர் ‘டெல்லி சலோ’ எனும் டெல்லி நோக்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால், கரோனா தொற்றின் காரணமாக டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது.


நவ. 26. 2020: டெல்லியை நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயிகள் ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போலீஸார் கலைக்க முயன்றனர்.


நவ. 28. 2020: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவசாயிகள் டெல்லியின் எல்லைகளை விட்டு வெளியேறி, புராரியில் போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்றவுடன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அறிவித்தார். ஆனால், விவசாயிகள் அதனை நிராகரித்தனர்.


டிச. 3. 2020: மத்திய அரசு, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தியது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.


டிச. 5. 2020: இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதுவும் தோல்வியில் முடிந்தது.


டிச. 8. 2020: டெல்லியில் போராடிவந்த விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைத்தனர். இதற்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.


டிச. 9. 2020: புதிய வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்ததை விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நிராகரித்தனர்.


டிச. 11. 2020: பாரதிய கிஸான் சங்கம் இந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியது.


டிச. 13. 2020: மத்திய அமைச்சர் ரவி சங்கர், விவசாயிகள் போராட்டத்தில் சில சமூகவிரோதிகளின் குழு இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.


டிச. 30. 2020: ஆறாம் கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. அதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன.


ஜன. 4. 2021: ஏழாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் தீர்க்கமாக தெரிவித்தனர். ஆனால், மத்திய அரசு தரப்பில் அது முடியாது எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.


ஜன. 7. 2021: புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு எதிரான மனுக்களை ஜனவரி 11ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.


ஜன. 11. 2021: விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கையாண்ட விதத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.


ஜன. 12. 2021: உச்ச நீதிமன்றம் புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு இடைகால தடை விதித்தது. மேலும், சட்டத்தை ஆராயவும் திருத்தங்களை மேற்கொள்ளவும் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது.


ஜன. 26. 2021: குடியரசுத் தினத்தன்று, விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில், விவசாயிகள் செங்ககோட்டையினுள் நுழைந்தனர். மேலும், சிலர் செங்கோட்டையின் மீது விவசாயிகள் சங்கக் கொடியையும் ஏற்றினர். இதில், விவசாயிகளுக்கும் போலீஸாருக்குமிடையே மோதல் நடந்தது. இதில், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.


ஜன. 29. 2021: புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை வருடத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், வேளாண் சட்டம் குறித்து ஆராய்ந்து திருத்தங்களை மேற்கொள்ள குழு அமைப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், அதனை விவசாயிகள் ஏற்கொள்ளவில்லை.


பிப். 2. 2021: பாப் பாடகி ரிஹானா, காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். போராட்டம் தொடர்பான டூல் கிட் என்ற ஆவணம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.


பிப். 5. 2021: டூல் கிட் விவகாரம் தொடர்பாக விவசாயிகள் சங்க போராட்டத்தில் டெல்லி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


பிப். 6. 2021: விவசாயிகள், பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை நாடு தழுவிய மூன்று மணிநேர சாலை மறியலில் ஈடுபட்டனர்.


பிப். 14. 2021: டூல் கிட விவகாரத்தில் காலநிலை ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டார்.


பிப். 23. 2021: திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்.


மார்ச். 6. 2021: டெல்லி எல்லையில் விவசாயிகள் தங்கள் போராட்டாத்தின் 100வது நாளை நிறைவு செய்தனர்.


மார்ச். 8. 2021: விவசாயிகள் போராட்டத்தின் சிங்கு எல்லை பகுதியில் துப்பாகி சூடு நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


ஏப்ரல். 15. 2021: விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கடிதம் எழுதினார்.


மே. 27. 2021: போராட்டத்தின் 6 மாதங்கள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் விவசாயிகள் 'கறுப்பு தினமாக' அனுசரித்தனர்.


ஜூன். 5. 2021: புதிய வேளாண் சட்டங்களை அறிமுகம் செய்து ஒரு வருடமானதை எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜூன். 26. 2021: புதிய வேளாண் சட்டங்கள் எதிர்த்து போராட்டத்தின் ஏழாம் மாதம் அடைந்ததை அடுத்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தினர்.


ஜூலை. 22. 2021: போராட்டத்தில் ஈடுபட்ட 200 விவசாயிகள் இணைந்து பாராளுமன்ற கட்டடத்திற்கு அருகில் கிஸான் சன்சாத் என "மழைக்கால கூட்டத்தொடரை" தொடங்கினர்.


ஆகஸ்ட். 7. 2021: 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள கிசான் சன்சாத் நிகழ்ச்சிக்கு செல்ல முடிவு செய்தனர்.


செப். 5. 2021: உத்தரப் பிரதேச தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சவால் விடும் வகையில், முசாபர்நகரில் விவசாயத் தலைவர்கள் பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


அக். 3. 2021: லக்கிம்பூரில் விவசாயிகள் மீது மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதிய சம்பவம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலால் எட்டு பேர் உயிரிழந்தனர்.



அக். 22. 2021: விவசாயிகள் போராட்டம் சட்டத்திற்கு எதிரானது இல்லை எனத் தெரிவித்தது நீதிமன்றம். மேலும், விவசாயிகள் போராட்டம் மக்களை பாதிக்கக்கூடாது எனத் தெரிவித்தது.


அக். 29. 2021: விவசாயிகள் போராடி வந்த இடமான காசியாபூரில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை டெல்லி போலீஸார் அப்புறப்படுத்தினர்.


நவ. 19. 2021: பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர். 

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்பப்படும் மன்மோகன் சிங்கின் வீடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 24/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது