Skip to main content

ஆட்சி இருக்கையை எங்கு தவற விடுகிறது பா.ம.க.?

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

Where does the PMK miss the ruling seat?

 

ஒரு அரசு நிகழ்ச்சி, ஒரு அரசியல் நிகழ்ச்சி. சில மணிநேர இடைவெளியில் நடந்த இந்த இரண்டும், இருவேறு விதமான கருத்துகளையும், இரு தலைவர்களின் வெவ்வேறு இலக்குகளையும் நமக்கு புலப்படுத்திக் காட்டுகிறது.

 

கோவையில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஓட்டுப் போடாத மக்களுக்கும் சேர்ந்து பணியாற்றுவதுதான் என் லட்சியம்; என் அரசு கடைசிவரை இதை கடைப்பிடிக்கும்” என்று பேசினார்.

 

திண்டிவனத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டிவனம், செஞ்சி, மயிலம், வானுார் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், “செஞ்சி நமது கோட்டை.. ஆனால் கோட்டைவிட்டு உட்கார்ந்திருக்கிறோம். தேர்தலில் போட்டியிடக் கூட ஆள் இல்லை என்கிறீர்கள். வேட்பாளர்கள் இருந்தாலும், அவர்களுக்கு வேலை செய்யாமல் எதிர்க் கட்சிக்கு வேலை செய்கிறீர்கள். வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்யுங்கள். சமூகவலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளுங்கள்” என்று பேசினார். அதிலும், சில இடங்களில் கடும் காட்டமாகவும் பேசியிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் சொற்களின் உச்சரிப்பும், குரல் அழுத்தமும், கட்சிதான் அனைத்தும் என காத்திருக்கும் தொண்டர்களுக்கு மனதின் ஓரத்தில் ஒரு நெருடலை உருவாக்கலாம். அந்த வகையில்தான் அப்பேச்சு அமைந்திருந்தது.

 

அதேபோல், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “துரோகிகள் கட்சியை விட்டு வெளியேறிவிடுங்கள். மானம், சூடு, சொரணை உள்ள வன்னியன் மாறி ஓட்டுப் போடுவானா? என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் போய் அன்புமணி ராமதாஸ் உட்கார வேண்டும்” என பேசினார்.

 

இப்படி மூன்று தசாப்தங்களாக அரசு அரியணையை எட்டிப்பிடிக்க முயன்றுவரும் பாமகவை, அதன் இலக்கை அடையவிடாமல் தடுப்பது என்ன..? பாமக கவனிக்க தவறியதும், கவனிக்க மறுப்பதும் என்ன..? "கட்சியில் வேட்பாளர்கள் கூட இல்லையா" என நிர்வாகிகளிடம் தலைவர் காட்டமாக கேட்குமளவுக்கு அக்கட்சியை கொண்டு சென்றது எது..? 

 

பாமகவின் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனங்களில் ஒன்று அது ஒரு சமூகத்திற்கான கட்சி என்பது. ஆனால், அதே கட்சிதான் ஏழுமலை எனும் தலித்தை கட்சியின் பொதுச் செயலாளராகவும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ஆக்கியது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் சிலைகளை நிறுவியதற்கு காரணமாக இருந்தார். இப்படி தங்கள் மீதான சாதிய ரீதியிலான பிம்பங்களை உடைத்தெறிய அக்கட்சி தொடர்ந்து முனைந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. ஆனாலும், பொது ஜனத்திற்கான கட்சி என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள பாமக எடுத்த முயற்சிகளையும் கடந்து, அது சமூகத்தின் ஒரு சாராருக்கான கட்சிதானோ என்ற சந்தேகத்தை அவ்வப்போது நிகழும் சில அழுத்தமான சம்பவங்கள் மக்களுக்கு எழுப்பிக்கொண்டேதான் இருந்து வந்திருக்கிறது எனலாம்.  

 

பெரியாரின் இயக்க அரசியலிலிருந்து, வாக்கு அரசியலுக்கு அண்ணா தனது பாதையை மாற்றியபோது ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று முழங்கினார். தி.க.விற்கும், தி.மு.க.விற்குமான ஒரு பெரும் வித்தியாசம் அது. ஒரு தலைமையின் கீழ் நாங்கள் இயங்குகிறோம், இந்தத் தலைமை எங்களை வழிநடத்தட்டுமென மக்களும், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் முடிவு எடுக்கும்போது, அந்த இயக்கமும், அதனை வழிநடத்தும் தலைமையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகத்திற்காகவும் இயங்க வேண்டும் என்பது அவசியமாகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று அது செயல்படுதல் வேண்டும்.

 

வாக்கு அரசியலுக்கு வந்த திமுகவும், அதிமுகவும் அதனைத் தான் செய்தன. அதுவே ஆளும் இருக்கைக்கான பாதையை அக்கட்சிகளுக்கு அமைத்துக்கொடுத்தது. ஒரு விஷயமோ, ஒரு கூட்டமோ இறுதிவரையில் மாறாமல், அது நமக்கானதாகவே இருக்கும் எனக் கருதி செயலாற்றுவது என்பது மாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத மனநிலையையே வெளிப்படுத்துவதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

கட்சியைத் துவக்கி 30 ஆண்டுகள் கடந்து தொடர்ந்து செயலாற்றி வரும் எந்த ஒரு தலைவருக்கும் இருக்கும் அடிப்படையான ஆதங்கம்தான் தலைமை இடத்திற்கு வர முடியவில்லையே என்பது. ஆனால், ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டுமே குறிவைத்து நகர்ந்து செல்லும்போது அது மற்ற சாரார் மனதில் ஒருவித பாதுகாப்பின்மையை உருவாக்கும். இங்குதான் அண்ணா தனது கட்சிக்காரர்களை தம்பிகளாக்கி, தம்பிகளுக்கு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ரகசியத்தை கற்றுக்கொடுத்து ஆட்சி அதிகாரத்தை திமுக வசமாக்குகிறார். அதன் நீட்சியையே இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வெளிப்படுத்துகிறார் எனலாம்.

 

குறிப்பாக ராமதாஸ், “தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி நாம் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால், தேர்தலில் போட்டியிட ஆள் இல்லை என கட்சியினர் சொல்கின்றனர்” என்று சொல்லி வேதனைப்படுகிறார். ஆனால், மாற்றம் வேண்டி பல இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் ஏன் பாமகவின் பக்கம் வர மறுக்கிறார்கள், அவர்களை எப்படி தங்கள் பக்கம் ஈர்ப்பது என பாமக சிந்தித்து பார்க்க வேண்டியது அவர்களுக்கு காலத்தின் கட்டாயமாகியுள்ளது. 

 

பாமக துவங்கிய காலத்தில் பெரும் மக்கள் திரளை அந்தக் கட்சியின் பக்கம் ஈர்த்தது, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் போராட்டமும், கள அரசியலும்தான். ஆனால், இன்று அன்புமணியின் கள போராட்டமும், அரசியலும் கேள்விக்குள்ளாக்கும் தருணத்தில் இருக்கிறது. 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியிலிருந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரின் மாநிலங்களவை செயல்பாடுகளும், வருகை பதிவும் அவரின் அரசியல் தீவிரத்தை பெரும் விமர்சனத்துக்குள்ளாக்கி வருகிறது.

 

நம் பள்ளியில், கல்லூரியில், பணியிடத்தில் நமது இருக்கையின் மறு இருக்கையில் இருப்பவன் சக மனிதன் என இந்தத் தலைமுறையின் பெரும் பங்கினர் மாறிவர. அதனை முழுதாக ஏற்காமல், ‘நாடகக் காதல்’, ‘மானம், சூடு, சொரணை உள்ள வன்னியன் மாறி ஓட்டுப் போடுவானா’ என்பன போன்ற சொல்லாடல்களை கட்சியின் மையமாக வைத்து நகர்த்த நினைப்பதும், 1987ல் நடந்த இட ஒதுக்கீடு போராட்டம், மதுவுக்கு எதிரான போராட்டம், 2020ம் ஆண்டு நடந்த இட ஒதுக்கீடு போராட்டமின்றி, மற்ற மக்கள் பிரச்சனைக்காக வீதிகளில் இறங்கி நின்று அது எந்த அளவிற்கு சென்றுள்ளது, அது எங்கு தடைப்பட்டுள்ளது என்பனவற்றை ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் சுயபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நேரம் இது எனலாம்.

 

 

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.