Skip to main content

“இரண்டு நாட்கள் உணவு கொடுக்கலாம்னு நெனச்சோம் ஆனால்...” -செங்கல்பட்டு சேவை இளைஞர்கள்

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
chengalpattu

 

கிட்டதட்ட நான்கு மாத ஊரடங்கு யாரும் எதிர்பார்க்காத ஒன்று. நாட்டின் பொருளாதாரத்தையும், தனிமனித பொருளாதாரத்தையும் இது அசைத்துப்போட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும். உணவுக்கு வழியில்லாமல், சொந்த ஊர்களுக்கு செல்ல வழியில்லாமல் நடுத்தெருவில் நின்றவர்கள் ஏராளம். நோய் வந்து இறக்கும் முன், பசியால் இறந்துவிடுவோம் என்று அலறியவர்கள் பலர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிலர் தன்னார்வலர்களாகவும், தன்னார்வ அமைப்புகளாகவும் செயல்பட்டு அப்படிப்பட்ட மக்களின் பசியை தங்களால் முடிந்த அளவு தீர்த்து வருகின்றனர். அப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கிட்டதட்ட 30,000 பேருக்கு உணவளித்த ஒரு தன்னார்வ குழுவின் முன்னெடுப்பாளர் நிர்மல், நம்முடன் பகிர்ந்துகொண்ட கருத்துகள்...

 

மார்ச் 25 முதல் ஜூலை 5 வரை கிட்டதட்ட 30,000 பேருக்கு உணவு கொடுத்திருக்கிங்க, இந்த முயற்சி எங்க ஆரம்பித்தது?

என்னிடம் இருந்த 6,000 ரூபாய், என் நண்பர் ரீகன் கொடுத்த 15 கிலோ அரிசி இதை வச்சுதான் நாங்கள் இதை செய்ய ஆரம்பிச்சோம். தேவையான காய்கறிகளை வாங்கி, வீட்டிலேயே சமச்சு, இரண்டு நாட்களுக்கு மட்டும் கொடுக்கலாம்னு நினைச்சுதான் இதை தொடங்கினோம்... தொடக்கத்தில் மறைமலை நகரிலுள்ள சர்ச் பாதிரியார், என்னை உணவு கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தினார். அந்த பணியை 10 நாட்கள் செய்தேன். அதன்பிறகுதான் சரி, நாமே இதை செய்து கொடுக்கலாம்னு முடிவெடுத்து செய்தோம்.

 

chengalpattu

 

அதற்கு அடுத்த நாள் ரீகன் 3,000 ரூபாய் கொடுத்தார். மேலும் இதை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததால், அதன் மூலமும் அரிசி, எண்ணெய், பணம் என அவர்களால் என்ன உதவிகள் செய்ய முடியுமோ அதை செய்தார்கள். இப்படித்தான் மார்ச் 25ம் தேதி தொடங்கிய பயணம் அவ்வளவு நாட்கள் நீடித்தது. கிட்டதட்ட இதில் 20 பேரோட உழைப்பு இருக்கு. 

 

எந்தெந்த பகுதிகளில் நீங்கள் உணவுகளை கொடுத்தீங்க? 

நாங்கள் சமைத்து கொடுக்கிறோம் என தெரிந்தபோது, உணவில்லாதவர்கள் சிலர் 5 மணிக்கே இங்கு வந்துவிடுவார்கள். அதன்பிறகு நாங்கள் சமைத்து அவங்களுக்கு உணவுகளை கொடுப்போம். பிறகு நாங்கள் அதை பேக் செய்து ஹாஸ்பிடல், போலிஸ் ஸ்டேசன், பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கொடுத்தோம். மொத்தமாக செங்கல்பட்டு பைபாஸ் முதல், ஹாஸ்பிடல் வரை கொடுத்தோம். செங்கல்பட்டு ஹாஸ்பிடல்ல மட்டும் கிட்டதட்ட 1000 பேர் தங்கி இருந்தாங்க, பஸ் வசதி இல்லாததால அவங்கள்ல சிலருக்கும் கொடுத்தோம். 

 

இந்த ஊரடங்கு நாம எதிர்பாக்காத ஒன்றுதான், இந்த நேரத்துல அவர்களோட நிலை எப்படிப்பட்டதா இருந்தது?

அவங்க நிலை மோசமாதான் இருந்தது. வீடு இருக்கவங்களுக்கு பணம் இல்லை, பணம் இருக்குறவங்களுக்கு உணவு இல்லை, அதைவிட கொடுமை இந்த இரண்டுமே இல்லாம, ஊருக்கு போக பஸ்ஸும் இல்லாம, சாலைகள்லயே தங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானவங்களோட நிலைதான். சரியான பாத்ரூம் வசதி இல்லை, தங்க இடம் இல்லை இப்படி நிறைய சொல்லலாம். சிலர் எங்களை தேடியே வருவார்கள் இன்னைக்கு சாப்பாடு கொடுப்பீங்களானு. அவங்களோட நிலைமை ரொம்ப கஷ்டமானதுதான். நிறைய பேரு கொஞ்சம் அரிசி கொடுங்க, நாங்க சமச்சுக்கிறோம்னு கேட்டாங்க, அப்படியும் சிலருக்கு கொடுத்தோம். காய்கறி கொடுப்போம். மார்க்கெட்ல இருந்த நிறைய பேர் இதுக்காக ஹெல்ப் பண்ணாங்க.

 

chengalpattu

 

இரண்டு நாள் கொடுக்கலாம்னு ஆரம்பிச்சது, இத்தனை நாட்கள் தொடர்ந்தே பெரிய விஷயம் எனக்கு, நிறைய பேர் கையெடுத்து கும்பிட்டாங்க. அதுமட்டுமில்லாம என்னுடைய நண்பன் ரீகன் கிட்டதட்ட 53 நாட்கள் சமைச்சாரு. தினமும் 35 கிலோ அளவு இருக்க உணவ, இது சாதாரண விஷயம் இல்லை. நாங்க கூட இருந்து ஹெல்ப் பண்ணிருந்தாலும்கூட அவரோட உழைப்பு அதிகமானது.

 

 

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

குடிநீர் ட்ரம்மில் மிதந்த எலி; ஹோட்டலில் சாப்பிட சென்றவர்கள் அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
A rat floated in a drinking water drum; Those who went to eat at the hotel were shocked

உணவகங்களில் சுகாதாரத் தூய்மைகளை கடைபிடிக்காததால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பாக அவ்வப்போது புகார்கள் எழுவது வாடிக்கையாகி வருகிறது. சிறு உணவகங்கள் முதல் பெரிய உணவகங்களில் கூட உணவு பொருட்களை அலட்சியமாக கையாளுதல், உணவு பொருட்களின் தரம் மற்றும் கடைகளில் சுகாதாரம் இன்மை குறித்து புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டில் சிறிய உணவகம் ஒன்றில் குடிப்பதற்காக வைக்கப்பட்ட தண்ணீர் பேர்லரில் எலி செத்து மிதந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் 'சாஜ் டீ ஸ்டால்' என்ற சிறிய உணவகம் இயங்கி வருகிறது. இந்த கடைக்கு சிலர் உணவு சாப்பிட சென்ற நிலையில் தண்ணீர் வைக்காததால் பேரலிலிருந்து தண்ணீரை எடுத்து குடிக்கும்படி ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து தண்ணீர் நிரப்பி வைத்திருந்த டிரம்மை பார்த்தபோது அதில் எலி ஒன்று செத்து மிதந்தது வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக செல்போனில் அதை படம் பிடித்த வாடிக்கையாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 'லட்சுமிபுரம் சாஜ் ஹோட்டலில் எலி செத்து மிதந்த தண்ணீரை நாங்கள் குடித்திருக்கிறோம். ஒரு வாரமாக செத்து கிடந்து இருக்கிறது போல. பசிக்கு நாங்கள் சாப்பிட வந்த இடத்தில் குடிநீர் ட்ரம்மில் எலி கிடந்ததை கூட பார்க்காமல் உள்ளனர் ஹோட்டல் நிர்வாகத்தினர். உணவுத்துறை அதிகாரிகள் இதுபோன்ற ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.