Skip to main content

"தலைப்பு எல்லாம் இல்லீங்க.." வாங்க, வந்து படிச்சி சிரிச்சிட்டு போங்க!!

Published on 31/12/2021 | Edited on 24/03/2022

 

ghj

 

அரசியல்வாதிகள், சினிமா துறையினரின் பேச்சுக்கள் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது. சில சமயம் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டோ அல்லது வேண்டுமென்றோ கூறும் சில வார்த்தைகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், சில நேரங்களில் சிரிப்பை வரவைப்பதாகவும் ஒரு சேர அமைந்த நிகழ்வுகள் ஏராளம். அரசியல்வாதிகளின் வைரல் பேச்சுக்களை வகைப்படுத்த வேண்டுமென்றால் அதை முன்னாள் பிரதமர் நேருவில் ஆரம்பித்து அமைச்சர் கே.என் நேருவில் முடிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அந்த அளவுக்கு அவர்கள் கொடுத்த கண்டெண்டுகள் காலத்தால் அழியாது. குறிப்பாக அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ராமதாஸ், சீமான் என பலரும் அந்த வைரல் கண்டெண்டுகளில் தங்களையும் இணைத்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகளில் அரசியல், சினிமா துறையில் இருப்பவர்கள் எதார்த்தமாக பேசிய வார்த்தைகள் அடுத்த நாள் நாளிதழ்களில் தலைப்பு செய்தியான வரலாற்றை மீண்டும் ஒருமுறை நினைவு கூறுவோம்.

 

ரகத

 

அந்த வகையில் அளவற்ற புகழுக்கும், அதிரடியான சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் தமிழர்கள் குறித்து சாதாரணமாக பேசிய ஒரு வார்த்தை பெரிய சர்ச்சையை கிளப்பி தமிழகம் முழுவதும் வைரலானது. 57ம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் பொதுமக்கள் பேராட்டத்தில் ஈடுபட்டு வர, அது நேருவின் காதுகளுக்கு சென்றுள்ளது. எல்லா மாநிலங்களிலும் எந்த சச்சரவுகளும் இல்லாத நிலையில் தமிழகத்தில் என்ன போராட்டம் வேண்டி கிடக்கிறது எனக் கூறி "நான்சென்ஸ்" என்ற தொனியில் கருத்து தெரிவித்தார். இந்த ஒற்றை வார்த்தை இந்தி திணிப்புக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தை விட அதிக கோபத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியது. அடுத்த சில வாரங்களில் தமிழகம் வந்த அவருக்கு விமான நிலையத்திலேயே கருப்புகொடி காட்டப்பட்டு, காரைவிட்டு இறங்காமலேயே ஆளுநர் மாளிகைக்கு சென்றார் நேரு. அந்த வகையில் "நான்சென்ஸ்" என்ற ஒரு வார்த்தை நேருவின் அரசியல் வாழ்க்கைக்கு நியூசென்ஸ் ஆனது.

 

ுபர

 

ஒருமுறை இந்து என்றால் திருடன் என்று ஒரு அகராதியில் கூறப்பட்டுள்ளதாக கலைஞர் பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா முழுவதும் சங்பரிவார் அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. தமிழகத்தில் போராட்டங்களும் நடந்தன. அப்பொழுது வட மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் கலைஞரின் தலையை சீவி விடுவேன் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்கள் உங்களின் தலையை சீவி விடுவதாக சாமியார் ஒருவர் கூறியுள்ளாரே, அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டனர். " நானே என் தலையை சீவி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது, அவருக்குத்தான் ஒரு வாய்ப்பை கொடுத்து பார்ப்போமே" என்றார். அவரின் இந்த வைரல் வார்த்தை அடுத்த சில நாட்களில் கலைஞருக்கு எதிரான அனைத்து போராட்டங்களை நீர்த்துப் போக செய்தது. அந்த வகையில் "சீவி விடுவோம்" என்ற அசாதாரண பேச்சை சீவி விடுங்களேன் என்ற கலைஞரின் ஒற்றை வார்த்தை மங்கிப் போக செய்தது.

 

as

 

"ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது" இந்த வார்த்தையை 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவை பார்த்து யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத நிலையில், பட விழா ஒன்றில் வெளிப்படையாக கூறி ஜெயாவுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார் ரஜினி. அந்த வகையில் ரஜினிகாந்தின் இந்த பேச்சு 25 ஆண்டுகளை கடந்து இன்றளவும் முதலிடத்தில் இருக்கும் ஒரு வைரல் சம்பவம்தான். இந்த வார்த்தையை அவர் கூறிய அடுத்த எட்டே ஆண்டுகளில் அதே ஜெயலலிதாவை தைரியலட்சுமி என்று கூறி ஜெயலலிதாவையே ஆச்சரியப்படுத்தினார் ரஜினி என்பதும் வரலாறு!

 

பரக

 

திராவிட இயக்க முதுபெரும் தலைவர், முன்னாள் அமைச்சர் க. அன்பழகன், எதற்குமே அதிகம் அலட்டிக்கொள்ளாத அவரை சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேசிய விதம் திமுகவினருக்கு கோபத்தை வரவைத்தது. ஒரு குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக பேசிய ஜெயலலிதா " உங்கள் தொழில் பாடம் சொல்லிக் கொடுப்பதுதானே " என்ற ரீதியில் அன்பழகனை ஓரக்கண்ணால் பார்க்க, நாற்காலியில் இருந்து பொறுமையாக எழுந்த அவர்,  " பாடம் சொல்லிக் கொடுப்பது தான் என் முந்தைய தொழில் என்பது நாட்டுக்கே தெரியும், நீங்கள் என்ன தொழில் செய்து இங்கே வந்தீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும் " என்று கூறிவிட்டு அமர்ந்தார் அன்பழகன். ஜெயலலிதா மட்டுமல்ல, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்க சில மணி நேரங்கள் ஆனது. அந்த வகையில் போகிற போக்கில் அசால்டாக அன்பழகன் கூறிய அந்த வார்த்தை இன்றளவும் பரபரப்பை கூட்டும் ஒன்றாகவே இருக்கிறது. 

 

ிபு

 

1977ம் ஆண்டு முதல் முறையாக எம்ஜிஆர் ஆட்சியை பிடித்த  காலகட்டம் அது. சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் முந்தைய திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த திமுக தலைவர் கலைஞர், " எங்களுக்கு ஆட்சி அதிகாரம் புதிதல்ல, நாங்கள் சாப்பிட்டு போட்ட எச்சில் இலைதான் அது" என்றார் கோபத்தோடு. தனக்கே உரிய புன்னைகையுடன் எழுந்த எம்ஜிஆர், " நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்று கணக்கு பார்க்கத்தானே நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம்" என்றார். எதையும் எதிர்கொள்ளும் திமுக மூத்த உறுப்பினர்கள் எம்ஜிஆரின் வார்த்தை தாக்குதலுக்கு பதிலளிக்க முடியாமல் அமைதியானார்கள். 

 

ஏஓ

 

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்முறையாக நாடாளுமன்ற மேலவைவைக்கு சென்ற நேரம் அது, " இந்தியை விரும்பாத மக்களிடம்  எதற்காக திணிக்க முற்படுகிறீர்கள் என்று காங்கிரஸ் கட்சியை பார்த்து அவர் கேள்வி எழுப்ப, அங்கிருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், நாட்டில் அதிக மக்கள் பேசும் மொழியை நீங்கள் ஏற்றுக்கொள்ள எதற்காக தயங்குகிறீர்கள்? என்று எதிர்கேள்வி எழுப்பினார். " கோடிக்கணக்கான எண்ணிக்கையில் இந்தியாவில் காக்கை இருக்கும் போது ஆயிரக்கணக்கில் இருக்கும் மயிலை எதற்காக தேசிய பறவையாக அறிவித்தீர்கள்? என்றார் கோபமாக! நாடாளுமன்றம் ஒருநிமிடம் ஆடி அடங்கியது. அன்று நாடாளுமன்றத்தில் அண்ணா கூறிய அந்த வார்த்தை சாதாரணமாக அவருக்கு தோன்றியிருக்கலாம், ஆனால் தமிழர்களின் மொழியுணர்வை இந்தியாவுக்கே வெளிப்படுத்துகின்ற வரலாற்று சம்பவமாக அதுமாறிப்போனது. 

 

ோே்

 

இது எல்லாம் ஏதோ ஒரு நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக பேசப்பட்டது என்றால், கட்சி கூட்டத்தில் பேசியது எல்லாம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்த வரலாற்று சம்பவங்கள் கூட சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அந்த ட்ரெண்டிங் வார்த்தைகளுக்கு சொந்தகாரர் சாட்சாத் மருத்துவர் ராமதாஸ். வட மாவட்டத்தில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ராமதாஸ், ஆண்ட பரம்பரை பற்றி கட்சியினருக்கு சில மணித்துளிகள் வகுப்பெடுத்த அவர், ஆண்ட பரம்பரை எப்படி இருப்பார்கள் என்று பிராட்டிக்கல் வகுப்பு எடுத்தபோதுதான் சர்ச்சையில் சிக்கினார். முதலில் அந்த வீடியோவை பார்த்த யாருக்கும், என்ன வீடியோவுக்கு பின்னால் யாரோ மிமிக்ரி செய்வது போன்று இருக்கிறதே என்றுதான் நினைக்க தோன்றும். ஆனால், சில முறை அந்த வீடியோ உற்று நோக்கினால்தான் அவர் தோளை மேலும் கீழுமாக ஆட்டி " உம்...உஉம்..ஊம்ம்" என்று கட்சியினருக்கு வகுப்பெடுப்பது நமக்கு தெரியவரும். நல்ல வேளை புஷ்பா படத்தில் " உம்.. சொல்றியா.. ஊஹூம் சொல்றியா" பாடல் ராமதாஸ் அவர்கள் பேசி ஒருமாதம் கழித்து வெளியானது. இல்லையென்றால் ஆண்ட்ரியா குரல் எல்லாம் அம்மஜல்லிக்கு தேறாது மருத்துவரின் "உம்..உஉம்..உஉம்" குரலுக்கு முன்பு!

 

jlk

 

எப்போதாவது அரசியல் தலைவர்கள் வைரலாக பேசுவார்கள் என்று நாம் நினைத்தால் அது சீமான் விஷயத்தில் பொய்யாகத்தான் போகும். விஷயம் வைரலாகும், அலுவலகத்துக்கு லீவு போட்டுவிட்டு இணையவாசிகள் நம்மை செய்வார்கள் என்று தெரிந்தாலும் "ஓட்டு போட்டா போடு இல்லனா போ.." என்ற அவரின் கோல்டன் வார்த்தையை போல அசால்டாக எதையும் கடந்து செல்லும் வல்லமை அவருக்குண்டு. அந்த வகையில் ஆமை கறியில் துவங்கி, கறி இட்லி, ஏ.கே 57, ஆணவக் கொலைக்கு பதிலாக குடிப்பெருமை கொலை என அவர் போட்ட அணுகுண்டுகள் எல்லாம் இரண்டாம் உலகப்போரில் போடப்பட்ட அணு ஆயுதத்தை விட அதிரடியானது. இதில் புதிய உச்சம் என்றால் சில தினங்களுக்கு முன்பு கூட்டம் ஒன்றில்  பேசி வந்த அவர், யாரும் எதிர்பாராத வகையில் காலணியை தூக்கிக்காட்டி பழம்தின்று கொட்டைபோட்ட பல மூத்த அரசியல்வாதிகளையே ஆட வைத்தார். என்ன தலைவரே இப்படி செய்யலாமா என்று கேட்டவர்களை " என் செருப்பு, நான் காட்டினேன் உங்களுக்கு என்ன வந்தது" என்று கேட்டதோடு கூட விட்டிருக்கலாம்,  நான் பழைய சீமானாக இருந்திருந்தால் அடித்தே இருப்பேன் என்று கூறி கேட்போருக்கு மாரடைப்பு வரவைக்கும் அளவுக்கு வித்தைக்காரராகவே இன்றளவும் இருந்து வருகிறார். 

 

u

 

இதெல்லாம் ஒரு வகை என்றால் ஒரே ஒரு செங்கல்லை எடுத்துக்காட்டி ஒட்டுமொத்த தமிழகத்தையும் தன் பக்கம் பார்க்க வைத்தார் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக மதுரையில் பேசிய அவர் உங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை நேரில்  காட்டுகிறேன் என்று கூறி எய்ம்ஸ் என்று எழுதிய ஒன்றை செங்கல்லை தூக்கிக்காட்டி இந்திய அளவில் வைரலானார் உதயநிதி ஸ்டாலின். அந்த வகையில் 'கத்துக்குட்டி' என்று சொன்னவர்களின் வாயாலேயே உதயநிதியை 'கெத்துகுட்டி' என்று சொல்லவைக்க காரணமானது இந்த ஒற்றைச் செங்கல்!

 

 

jkl

 

இந்த ஆண்டை இன்னும் சில நாட்களில் கடந்துவிடலாம் என்று காலண்டரை பார்த்துகொண்டிருந்தால் தொக்காக வந்து மாட்டினார் அன்னபூரணி அம்மா. நாற்காலியில் அமர்ந்தவாறே ஆட்டோவில் செல்வது எப்படி என்று பாடம் நடத்தாமல் விட்டதுதான் நமக்கு ஒரே ஒரு ஆறுதல். அன்னபூரிணியின் ஆட்டம் எதுவரை செல்லும் என்பது அந்த ஆதிபராசக்தி அம்மனுக்குத்தான் வெளிச்சம். 

 

ghj

 

இதற்கிடையே அதிமுக செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, பாஜகவில் பல மத்திய அமைச்சர்கள், சில பாஜக மாநில முதல்வர்களின் வைரல் பேச்சுக்களை எல்லாம் கூற வேண்டும் என்றால் வைரல் பேச்சுக்கள் 2021 என்று "இயர் புக்" போடும் அளவுக்கு நீண்டுவிடும். அந்த வகையில் இதோ கண்ணுக்கெட்டிய தூரத்தில் புதிய ஆண்டு பிறக்கும் நிலையில் ஆட்டோவில் வாலண்டியராக ஏறி அமர்ந்தார் பாடகர் சித் ஸ்ரீராம். என்னை விட்டுவிட்டு என்ன வைரல் நியூஸ் என்று கேட்பதை போல் அகதளம் செய்திருப்பார் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை! இப்படி ஒரு பாடகர் அப்பவே கிடைத்திருந்தால் கர்ணனைக் கொல்ல பஞ்சபாண்டவர்கள் அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருக்க வேண்டாமே என்று இசை ரசிகர்களை வாயாறா கூறவைத்துவிட்டு இந்த ஆண்டையும் முடித்துவைத்துள்ளார் சித் ஸ்ரீராம்!


 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.