Skip to main content

எடப்பாடி கையை பிடித்து கேட்ட விஜயகாந்த்! ஓ.பி.எஸ்.ஸிடம் வருத்தம் தெரிவித்த பிரேமலதா!

Published on 11/03/2019 | Edited on 11/03/2019


 

அதிமுக கூட்டணியில் இணைவதை ஜவ்வு மாதிரி இழுத்தப்படியே இருந்த தேமுதிக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கூட்டணியை இறுதி செய்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. கூட்டணியில் 4 இடங்கள் என அதிமுகவும் தேமுதிகவும்  ஒப்பந்தம் செய்து கொண்டன. 
 

இதற்காக 10-ந் தேதி இரவு, இரு கட்சிகளின் தலைவர்களும் ஹோட்டல் கிரவுன் பிளாசாவில் சந்தித்தனர். அப்போது, அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், கே.பி.முனுசாமி, தேமுதிக தரப்பில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் 40 நிமிடங்கள் தனியாக ஆலோசித்தனர். 
 

அதில், "4 இடங்கள் என்பதை 6 இடங்களாக உயர்த்தி தரலாம்" எனக் கேட்டுப்பார்த்தார் பிரேமலதா. எடப்பாடியின் கைகளைப் பற்றிக்கொண்ட விஜயகாந்த், "பிரேமா, சொல்வதை யோசிக்கலாமே?" என வார்த்தைகளை மென்று விழுங்கியபடி பேசியிருக்கிறார். அதிமுக தலைவர்களுக்கு இது சங்கடமாகத்தான் இருந்தது. 

 

vijayagath-eps


அப்போது, "உங்களுக்கு கொடுக்கக்கூடாதுங்கிறது இல்லை. ஆரம்பத்திலேயே எங்களை நீங்கள் அணுகியிருந்தால் முரண்பாடுகளே வந்திருக்காது. எங்களிடம் பேசுவதை கெளரவக் குறைச்சலாக நினைத்துக்கொண்டு பாஜக மூலமாகவே பேசியபடி இருந்தீர்கள். அதான் பிரச்சனையே! இப்போ, திமுக 20 இடங்களில் போட்டியிடுகிறது. அதே அளவுக்கு அதிமுகவும் போட்டியிட வேண்டும். அதுதான் வலிமையாகத் தெரியும். திமுகவின் எண்ணிக்கையை விட குறைவாகப் போட்டியிட்டால் அதிமுக பலகீனமாகத் தெரியும். அது மொத்த கூட்டணியையும் பாதிக்கும். அதனால், 4 இடங்களை கூடுதலாக்கினால் அதிமுக 20-க்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும்" என தெளிவாக விளக்கியிருக்கிறார். 
 

vijayagath-eps-ops


 

இதனை எல்லோரும் ஒப்புக்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேசமயம், அந்த 4 இடங்களில் 2 பொது தொகுதிகளையும், 2 தனித் தொகுதிகளையும் (ரிசர்வ்) ஒதுக்கீடு செய்ய அதிமுக தலைவர்கள் முடிவு செய்து வைத்துள்ளனர். அதற்கு பிரேமலதா, "பொதுத்தொகுதிகளில் மூன்றும், தனித்தொகுதி ஒன்றும் ஒதுக்குங்கள்" என கேட்டுக்கொள்ள, "கூட்டனியிலுள்ள கட்சிகளுக்கு பொது தொகுதிகளை பகிர்ந்தளித்திருப்பதால் அதன் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இருப்பினும் மற்றவர்களிடம் பேசுகிறோம். அவர்கள் ஒப்புக்கொண்டால் பொதுத் தொகுதியை கூடுதலாக்கித் தருவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அதே சமயம் அதற்கு வாய்ப்பில்லையெனில், எங்கள் மீது வருத்தப்படக்கூடாது" என சொன்னார் ஓபிஎஸ்!  
 

மேலும், அதிமுக கூட்டணியில் நீங்கள் இணையும் சூழலில், பத்திரிகையாளர்களிடம் அதிமுகவை விமர்சித்திருக்கக் கூடாது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என ஓபிஎஸ் சொல்ல, அதற்கு அதிமுக தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார் பிரேமலதா!
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.