Skip to main content

"விவசாயம் செய்து தோடு, மூக்குத்தியை மீட்க பார்ப்பார்களா, இல்லை கலெக்டரிடம் புகார் கொடுப்பார்களா..?" - விசிக செல்லதுரை காட்டம்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

dfgj

 

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதன் ஒருபகுதியாக லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் ஏறியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதை தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை உ.பி. அரசுக்கு எதிராக தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செல்லதுரையிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

வேளாண் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. இந்த வழக்கு விசாரணையில் பதிலளித்த மத்திய அரசு, இன்னும் மூன்று மாதங்களுக்கு இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்திருக்கிறது. இந்நிலையில், இந்தக் கருத்தை எடுத்துக்கொண்டு பாஜக தரப்பு, விவசாயிகள் ஏன் போராடுகிறீர்கள் என்று தொடர்ந்து கேட்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

அவர்கள் (விவசாயிகள்) இந்திய பிரதமரிடம் பேச வேண்டும் என்றுதான் இத்தனை நாட்களாக காத்துக்கிடக்கிறார்கள். வாங்க, வந்து அவர்களோடு நின்று பேசுங்கள். மக்களுக்காகத்தான் நீதிமன்றம், மக்களுக்காகத்தான் அரசு. எத்தனையோ சட்டங்கள் இயற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மக்கள் போராட்டத்தின் காரணமாக அவை எல்லாம் மாற்றப்படவில்லையா? இவர்கள் ஏன் மாற்றுதல் என்ற பேச்சையே பேசக்கூடாது என்கிறார்கள். அது என்ன மூன்று மாதம் மட்டும் நிறுத்தி வைப்பது, மொத்தமாக இந்த சட்டத்தையே வாபஸ் வாங்குங்கள். 

 

விவசாயிகள்தான் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன் என்கிறார்கள். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து தயாராகத்தான் இருக்கிறோம் என்று மத்திய அரசு தரப்பு தொடர்ந்து கூறிவருகிறார்களே? 

விவசாயிகள் தொடர்ந்து பேசினார்கள், இவர்கள் யாரும் விவசாயிகளின் பேச்சைக் காது கொடுத்து கேட்க தயாரில்லை.  இந்த சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருக்கிறது என்று தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் கேட்பதற்கு ஆளில்லை. குறிப்பாக விலை நிர்ணயம் செய்ய உரிமையில்லை என்று விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைக் கூறுகிறார்கள். ஆனால் இதுதொடர்பான புகார்களை ஆட்சியர்களிடம் தெரிவிக்கலாம் என்று கருத்து சொல்கிறார்கள். அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் விவசாயம் செய்து அடகு வைத்திருக்கும், மூக்குத்தி, தோட்டை மீட்க நினைப்பார்களா, ஆட்சியரிடம் சென்று புகார் கொடுப்பார்களா? அந்த வேலையை இவர்கள் பார்த்தால், விவசாயத்தை யாரு, அரசாங்கம் பார்க்குமா? இது அனைத்தும் விவசாயிகளை ஏமாற்றும் போக்காகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது.  

 

இதெல்லாம் பெரும் முதலாளிகளிடம் சாத்தியப்படும். பயிரை விளைவித்து, குடோனில் அடைத்து வைத்து, தங்களுக்குத் தேவையான விலை கிடைக்கும் வரையில் முறையிடுவார்கள், இல்லை என்றால் நீதிமன்றம் சென்றாவது உரிய விலையைப் பெறுவார்கள். ஆனால், பாமர விவசாயிகளுக்கு அது சாத்தியப்படுமா என்று பார்க்க வேண்டும். இவர்கள் போராடும் விவசாயிகளையே வண்டியை ஏற்றி தாக்குகிறார்கள். விவசாயிகளின் குறைகளைக் கேட்ட அவர்கள் எப்படி செயல்படுவார்கள். அதிகாரிகள் இவர்களை ஒருபொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த விவசாய விரோத மூன்று சட்டங்களைக் கண்டிப்பாக மத்திய அரசு நீக்க வேண்டும்.

 

 

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.