Skip to main content

"தலைவர் படம்தான் எங்களுக்கு தீபாவளியே!" - சி.ஆர்.சரஸ்வதி  

Published on 06/11/2018 | Edited on 06/11/2018

விவாதங்களில் எத்தனை பேர் இருந்தாலும் இவரது குரல் தனியே ஒலிக்கும். அதிமுகவில் இருந்த போதும், இப்பொழுது அமமுகவில் இருக்கும்போதும் சுழன்று சுழன்று கூட்டங்கள், பேட்டிகள், விவாதங்கள் என சுற்றி வருகிறார் அமமுக செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி. தீபாவளியை முன்னிட்டு அவரிடம் ஒரு நான்-பொலிட்டிக்கல் பேட்டி எடுத்தோம்...

 

c.r.saraswathy



பொதுவாக தீபாவளியை எப்படி கொண்டாடுவீங்க?

பொதுவாக தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுவோம். தீபாவளியை விட பொங்கல் பண்டிகையை எனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் கிராமத்தில்தான் கொண்டாடுவோம்.

இப்போதெல்லாம் டிவி, செல்போனில் படம் பார்க்கிறோம். நாங்க சின்ன வயதாக இருக்கும்போது, சினிமாவுக்கு அழைத்துச் செல்ல மாட்டார்கள். வீட்டில் அடம் பிடித்து, குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்கள் ரிலீஸாகும்போது அதை பார்த்தே ஆகனுமுன்னு அழுது புரளுவேன், பிறகு அழைத்துச் செல்வார்கள். தலைவர் எம்ஜிஆர் படத்தைப் பார்க்க பெரும் கூட்டமே திரளும். அதுதான் எங்களுக்கு தீபாவளி. பிறகு அந்தப் படம் வெற்றி பெற்ற பின்னர் எங்களுக்கு இன்னொரு தீபாவளின்னு கொண்டாடுவோம்.
சினிமாவுக்கு வந்த பிறகு நான் நடிச்ச படங்கள் தீபாவளிக்கு வருதுன்னு சந்தோஷப்படுவேன். வெற்றி பெற்ற பின்னர் கூட நடிசவங்களோட சந்தோஷத்தை பகிர்ந்துகொள்வேன்.

அதிமுகவில் இணைந்த பிறகு வருடம்தோறும் தீபாவளிக்கு அம்மாவை (ஜெயலலிதா) இல்லத்திற்கு சென்று சந்தித்து புத்தகங்களை பரிசாக அளிப்பேன். பொதுவாக அனைவரும் புத்தாண்டு அன்றுதான் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால் நான் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிப்பேன். அதற்கு அவர் 'நன்றி கடிதம்' அனுப்புவார். வாழ்த்து தெரிவித்த அனைவருக்குமே நன்றி தெரிவித்து கடிதம் அனுப்புவார்.

இப்போது அவரது மறைவுக்குப் பிறகு தீபாவளியை நான் கொண்டாடுவதில்லை. எங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு போராட்டக் களத்தில் உள்ளது. எங்களது போராட்டம் வெற்றி பெற்ற பிறகுதான் எங்களுக்கு தீபாவளி, பொங்கல் பண்டிகையெல்லாம். எங்களது போராட்டம் வெற்றி பெற்று அடுத்த வருடம் தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவோம்.

உங்கள் சினிமா வாழ்க்கை பற்றி...

'எங்க சின்ன ராசா'தான் நான் நடிச்ச முதல் படம். அதில் தொடங்கி தமிழ், தெலுங்கு எல்லாம் சேர்த்து 85 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். முழு நேர அரசியலுக்கு வந்த பின் நடிப்பதை நிறுத்திவிட்டேன்.

 

c,r,saraswathi enga chinna rasa



நடிக்க வாய்ப்பு வரவில்லையா? வேண்டாம் என்று விட்டுவிட்டீர்களா?

ஏதாவது ஒன்றில்தான் டிராவல் பண்ண முடியும். எங்கேயாவது ஷூட்டிங்கில் இருக்கும்போது, கூட்டத்திற்கு நேரம் ஆகுது வரவில்லையா என்பார்கள். கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும்போது, ஏதாவது விவாத்தில் கலந்து கொண்டிருக்கும்போது ஷூட்டிங் நேரத்திற்கு வரவேண்டாமா என்பார்கள். எதற்கு இதெல்லாம்... அதான் முழு நேர அரசியல் என்று முடிவு எடுத்துவிட்டேன்.

பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். வருடத்தில் ஒரு நாள் கிடைக்கும் மகிழ்ச்சியில் இப்படி கட்டுப்பாடு விதிப்பது சரியா என்று பலரும் கேட்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?

குழந்தைகளை நினைச்சாதான் கஷ்டமாக இருக்கிறது. மாசில்லாத சுற்றுச்சூழலை பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமை. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதேநேரத்தில் மாசில்லா தீபாவளியை கொண்டாடுவோம் என்று நீதிமன்றம், சமூக ஆர்வலர்கள் சொன்னதற்கு பின்னர் நிறைய மாறி இருக்கிறது. தற்போது அதிக ஒலி எழுப்பும் வெடிகளை பொதுமக்கள் வெடிப்பதில்லை. முன்னரெல்லாம் விடிய விடிய வெடிப்பார்கள். அதுபோன்றெல்லாம் இப்போது இல்லை. 10 மணிக்கு மேல் யாரும் வெடிப்பது இல்லை. மேலும் அதிக புகை, ஒலி வரக்கூடிய பட்டாசுகளை தயாரிப்பதும் இல்லை, அதுபோன்ற பட்டாசுகளை பொதுமக்கள் வாங்குவதும் குறைந்துவிட்டது.

தீபாவளிக்கு மட்டுமா பட்டாசுகளை பயன்படுத்துகிறார்கள்? நல்லது கெட்டது, திருவிழா உள்பட எல்லாவற்றிக்கும் பட்டாசுகளை வெடிக்கிறார்கள். இந்த விசயத்தைப் பொறுத்தவரை தமிழக அரசு தன்னோட வாதத்தை சரியாக எடுத்து வைக்கவில்லை. சிவகாசியில் இந்தத் தொழிலை நம்பி பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருப்பதை நினைத்து பார்த்திருக்கலாம்.

 

 


 

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.

Next Story

“ஓ.பி.எஸ்-ஐயும், தினகரனையும் பாஜக மிரட்டி போட்டியிட வைத்துள்ளது” - முதல்வர் ஸ்டாலின்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
mk stalin BJP has threatened OPS and Dinakaran to contest

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்,  திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் இருவரையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அ.தி.மு.க.வும் - பா.ம.க.வும் அன்றைக்குக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. அதுதான் உண்மை. இந்த இரண்டு துரோகத்தையும் மனதாரச் செய்த கட்சிகள்தான் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும். இந்தச் சட்டங்களை ஆதரித்து, ஓட்டுப் போட்ட பா.ம.க. இப்போது பா.ஜ.க.வுடன் அமைத்திருப்பது சந்தர்ப்பவாதக் கூட்டணி. மருத்துவர் அய்யா ராமதாசு நிலைமையைப் பார்த்து அவர்கள் கட்சிக்காரர்களே தலைகுனிந்து நிற்கிறார்கள். இதற்கு மேல் அவரை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அடுத்து, தேனி தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற வேட்பாளராக ஒருவர் நிற்கிறார். யார்? தினகரன். இதே பா.ஜ.க.வைப் பற்றி அவர் என்ன சொல்லி இருந்தார்? “பா.ஜ.க. கூட்டணியில் சேர்வது தற்கொலை செய்வதற்குச் சமம். யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவார்களா?” என்று கேட்டவர். இப்போது என்ன தெரிந்தே கிணற்றில் விழ வந்திருக்கிறாரா? என்பதுதான் தேனிக்காரர்கள் கேட்க வேண்டிய கேள்வி.

அதுமட்டுமல்ல, இன்னும் பேசியிருக்கிறார். 'டெல்லியில் வேண்டும் என்றால் பெரிய கட்சியாக, ஆளும் கட்சியாக பா.ஜ.க. இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு என்ன இருக்கிறது? நோட்டாவுடன் போட்டி போடக் கூடிய கட்சிதான் பா.ஜ.க.” என்று சொன்னவர்தான் இந்தத் தினகரன். அவரைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டும். இன்று நோட்டாவுடன் போட்டி போடத் தேனிக்கு வந்திருக்கிறீர்களா? இல்லை உங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வந்திருக்கிறீர்களா? நான் சென்ற கூட்டங்களில் சொன்னது போன்று, மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்தமாகி வெளியே வந்துவிடுவார்கள்.

“மேட் இன் பி.ஜே.பி.” வாசிங் மெஷின் அது. மேட் இன் ஜப்பான், மேட் இன் அமரிக்கா, மேட் இன் இங்கிலாந்து மெஷின் இது. அந்தக் கட்சியில் கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த வாஷிங் மெஷின் வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.1995-96ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து 62 இலட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாகப் பெற்று, இங்கிலாந்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்ததாக, அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியவர்தான் இந்த தினகரன். ‘ஃபெரா’ போன்ற சொற்களைத், தமிழ்நாட்டில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை தினகரனுக்குத்தான் உண்டு. இந்த வழக்கை 30 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அபராதமாக விதித்தது. இப்போது புரிகிறதா? ஏன் இவர் பா.ஜ.க.வுக்குச் சென்றார் என்று.

mk stalin BJP has threatened OPS and Dinakaran to contest

அதுமட்டுமல்ல, அம்மையார் மறையும்வரை, போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாமல் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்தவர் தினகரன். காரணம் என்ன? அம்மையார் சொத்துக் குவிப்பு வழக்கோடு தன்னுடைய வழக்கைச் சேர்த்தால், தனக்கும் தண்டனை கிடைத்துவிடும். அதனால் இரண்டு வழக்கையும் தனியாக நடத்த வேண்டும் என்று அம்மையார் ஜெயலலிதாவின் வக்கீலையே மிரட்டியதால் விரட்டப்பட்டவர். கடைசியாக, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தினகரன்தான், இப்போது வழக்குகளுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும். தேனி மக்களே ஏமாந்துவிடாதீர்கள். கடந்த முறை பன்னீர்செல்வம் மகனிடம் ஏமாந்துவிட்டீர்கள். இந்த முறை, சசிகலா குடும்பத்திடம் ஏமாந்துவிடாதீர்கள். ஓ.பி.எஸ் நிலைமை என்ன? இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரை இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரை அவமானப்படுத்த, அவரை மிரட்டி இராமநாதபுரத்தில் நிற்க வைத்திருக்கிறது பா.ஜ.க. தலைமை. தினகரனை மிரட்டித் தேனியில் நிற்க வைத்திருக்கிறார்கள். இப்படி, பா.ஜ.க.வின் தொங்கு சதைகளான பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் என்று யாராக இருந்தாலும், பா.ஜ.க.வுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுங்கள். பா.ஜ.க.வுக்கு சொந்த செல்வாக்கு இல்லாததால் பன்னீர்செல்வம், தினகரன் போன்ற வாடகை மனிதர்களை வைத்து, தேர்தலைச் சந்திக்கிறது. ‘B-டீம்’-ஆகப் பழனிசாமியின் அ.தி.மு.க.வைக் குத்தகைக்கு எடுத்து, தனியாக நிற்க வைத்திருக்கிறது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல், கீ கொடுத்த பொம்மைபோல் அ.தி.மு.க.வை ஆட்டுவிக்கிறது பா.ஜ.க.

இவர்களை மொத்தமாகத் தோற்கடிக்க வேண்டாமா? தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட்டத்திற்கும் துரோகம் இழைக்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் மற்றும் பா.ம.க. ஆகிய அடிமைக் கூட்டத்திற்கும், திண்டுக்கல், தேனி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அதற்கு, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சச்சிதானந்தம் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும். தமிழ்நாட்டைக் காக்கட்டும். நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்” என்று கூறினார்.