Skip to main content

‘நெகட்டிவிட்டி எல்லாம் தள்ளி வை..’ அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்தான பார்வையை மாற்றிய செல்வங்கள்! 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரைத் தாக்குவது போன்றும், பள்ளி டேபிள், பெஞ்சுகளை உடைப்பது போன்றும் காணொளிகள் சமீபத்தில் வெளியாகி தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

இந்நிகழ்வுகள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "ஆசிரியரிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்வதை நினைத்தால் வேதனையாக உள்ளது. இது போன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது, துறை அமைச்சராக மட்டுமில்லாமல் இரண்டு குழந்தைகளின் தந்தையாக நான் வேதனைப்படுகிறேன்


ஆசிரியர்கள் கோபத்தில் திட்டுவதைக் கூட இப்போதெல்லாம் மாணவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு காலத்தில் அடித்துத் தான் மாணவர்களை வளர்த்தார்கள். ஆனால், இப்போது அதெல்லாம் நடப்பதில்லை. ஒரு மாணவரை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே அடித்தார்கள். ஆனால், இப்போது எந்தவொரு ஆசிரியரும் மாணவர்களை அடிப்பதில்லை. எடுத்துச் சொல்லித் தான் புரிய வைக்கிறார்கள்.


அதையும் தாண்டி வரம்பு மீறி சிலர் நடந்து கொள்ளும் போது, அவர்களைத் திருத்த வேண்டிய கட்டாயத்தில் சில தண்டனைகளைக் கொடுக்க வேண்டி உள்ளது. தவறு செய்தால் தண்டை கிடைக்கும் என்பதை இந்த வயதிலேயே உணர வைக்கவே தண்டனை வழங்கப்படுகிறது. இப்போது கூட மாணவர்கள் இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர். 


இதைப் பாடமாக எடுத்துக் கொண்டு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் வகுப்புகளில் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தான் எங்கள் பொறுப்பு, அதை நாங்கள் நிச்சயம் செய்வோம். மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார். 

 

அதேபோல், தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஒரு காணொளியை வெளியிட்டார் அதில் அவர், “இரண்டு காணொளிகளை பார்த்தேன். அரசுப் பள்ளி மாணவர்கள், ஒரு ஆசிரியரை ஒரு குறிப்பிட்ட மாணவர் தாக்க முற்படுகிறார். அதேபோல், மற்றொரு இடத்தில், அரசுப் பள்ளி மாணவர்கள் அந்த வகுப்பறையில் இருக்கும் டேபிள், பெஞ்சு உள்ளிட்டவற்றை சிரமப்பட்டு உடைக்க முற்படுகிறார்கள். பாரதியார் சொல்வதுபோல், “நெஞ்சு பொறுக்குதில்லையே” எனும் சூழ்நிலையில் தான் இந்த வீடியோவை பதிவு செய்கிறேன். 


நானும் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். நம் பெற்றோர்கள் நம்மை ஏன் அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளனர் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களிடம் பெரிய வருமானமோ, சொத்தோ இல்லை. உங்க அப்பா அம்மாவிற்கு சொத்து இல்லை. ஆனால், உங்களுக்கு நிறைய சொத்துகள் உள்ளன. நீங்கள் படிக்கும் அரசுப் பள்ளி, அங்கிருக்கும் விளையாட்டு மைதானம், அந்த வகுப்பறை, அங்கிருக்கும் டேபிள், பெஞ்சு, அங்கிருக்கும் ஆசிரியர் இது தான். உங்கள் சொத்து. 

 

நாங்க படிக்கும் போது பள்ளியில் டேபிள், பெஞ்சு எதும் கிடையாது. கீழே தரையில் அமர்ந்துதான் படித்தேன். இவற்றையெல்லாம் அரசு உங்களுக்கு வசதி செய்து கொடுத்து இருக்கிறது. அதனைத் தான் நீங்கள் உடைக்கிறீர்கள். 

 

இந்த ஆசிரியர்கள்தான் நமக்கும், கணிதம், அறிவியல், கணிணி, மூவாயிரம் ஆண்டு வரலாறு, மனித சரித்திரம் உள்ளிட்டவற்றை கற்பிப்பார்கள். இவர்கள் தான் நமக்கு மிகப் பெரிய சொத்து. அப்படி இருக்கும்போது, அறிவையும், செயல்திறனையும், நல்ல மனப்பான்மையையும் கற்றுக்கொள்ள வேண்டிய இந்த நேரத்தில், இதுபோன்ற வன்முறை செயல்களை ஏன் செய்கிறீர்கள். 

 

இந்தச் செயல்கள், நம் வீட்டிற்கே நாம் தீவைப்பது போன்றும், நம் கை, கால்களை நாமே வெட்டுவது போன்றும் உள்ளது. உங்கள் ஆதாரங்களை நீங்களே சேதப்படுத்திக் கொள்கிறீர்கள். இனி இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள். பள்ளிக்கூடத்திற்கு வருவது என்பது ஒரு மிகப்பெரிய நோக்கத்தோடு வருகிறோம். இங்குதான் நீங்கள் முழு மனிதராக, சிந்தனையாளராக வளரவேண்டிய ஆற்றல் படைத்தவராக மாறவேண்டிய ஒரு பயிற்சி இடம் தான் பள்ளிக்கூடம். ஆகவே அந்த இடத்திற்கு மிகவும் மரியாதை தரவேண்டும். ஆசிரியர் பெருமக்களை மிகவும் உயர்வாக எண்ண வேண்டும். உங்கள் மனங்கள் மாறவேண்டும். பள்ளிக்கூடங்களில் இது போன்ற வன்முறை சம்பங்கள் என்பது மிகப் பெரிய குற்றம். ஆகவே இதுபோன்ற குற்றங்களை மீண்டும் செய்யாதீர்கள்.” என்று தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், திருச்சி லால்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு கணினி பிரிவில் படிக்கும் 38 மாணவர்கள், அவர்களின் சேமிப்புத் தொகையைக் கொண்டு தங்களின் வகுப்பறையை சுத்தம் செய்து, சுவர்களுக்கு வர்ணம் பூசி புதுபொலிவுறச் செய்துள்ளனர். இதில் ஐந்து மாணவர்கள் மிகவும் ஆர்வமாகவும், மொத்த நிகழ்வையும் முன்னெடுத்து சென்றதாகவும், அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர் நம்மிடம் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும், இந்த மாணவர்களுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. சமீபத்தில் வெளியான மேற்குறிப்பிட்ட வீடியோக்களால் அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்தான ஒரு பார்வையை, இந்த மாணவர்களின் செயல் மாற்றும் வகையில் அமைந்துள்ளது. 

 

 

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.