Skip to main content

சைலண்ட் மோடில் அ.தி.மு.க! -ஸ்டாலினை கவனிக்கும் டெல்லி!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021
dddd

 

இந்த சட்டமன்றத் தேர்தல் தி.மு.க.வுக்கு வாழ்வா-சாவா எனச் சொல்லப்பட்ட நிலையில், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ஒரு அக்னிப்பரிட்சையாகவே அமைந்திருந்தது. 30 ஆண்டுகள் அ.தி.மு.க.வை நிர்வகித்த ஜெ.வும், அவருக்குத் துணையாக இருந்த சசிகலாவும் இல்லாமல் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், அதன் வழக்கமான தேர்தல் நடைமுறைகளில் பல மாற்றங்கள் தெரிந்தன. அதற்கேற்ப பிளஸ்களும் மைனஸ்களும் அங்கங்கே களத்தில் தென்பட்டது என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமையைச் சேர்ந்தவர்கள்.

 

மற்ற மாவட்டங்களைவிட சென்னைக்குட்பட்ட தொகுதிகளில் வாக்கு சதவிகிதம் குறைந்து போனதற்கு முக்கிய காரணம், அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பல தொகுதிகளில் தேர்தல் திருவிழாவில் பங்கேற்க விருப்பம் காட்டாமல் இருந்ததுதான். இரட்டை இலையின் நிரந்தர வாக்காளர்களை வாக்குச்சாவடிக்குக் கொண்டுவருவதில் அ.தி.மு.க. சுணக்கமாக இருந்தது. உதயநிதி போட்டியிட்ட சேப்பாக்கத்தில் அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நின்ற பா.ம.க வேட்பாளருக்கு பூத்திலும் பூத் ஸ்லிப் கொடுக்கவும், அ.தி.மு.க சைடில் போதிய ஆள் பலம் இல்லை. அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட எல்.ராஜேந்திரன் தரப்பு, அ.தி.மு.க.வை விட ஆர்வமாக வேலை பார்த்தது. எழும்பூரில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இரட்டை இலையில் நின்ற ஜான்பாண்டியனுக்கு ஆளுந்தரப்பு ஆர்வம் காட்டவில்லை.

 

இதுபோலவே வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அ.தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க.வும் சோர்வுடனேயே செயல்பட்டன. கிராமப்புறங்களில் வழக்கமாக களைகட்டும் இலைத் தரப்பு, இந்த மாவட்டங்களில் டல்லடிக்க, பா.ம.க சைடில், சோளிங்கர் உள்ளிட்ட மாம்பழம் போட்டியிடும் தொகுதிகளில் ஓரளவு வேகம் தெரிந்தது. அ.தி.மு.க தரப்பின் சோர்வு... காஞ்சிபுரம், செங்கல்பட்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் மத்தியில் காணப்பட்டது.

 

காஞ்சி மாவட்டத்தில் பகல் 12 மணிவரைதான் அ.தி.மு.க. ஆக்டிவாக இருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் எப்போதும் சாதகமாக அமையும் பொன்னேரி தொகுதியில் அ.தி.மு.க.வினர் களத்தில் இல்லை. அதே நிலவரம்தான் திருத்தணி, கும்மிடிப்பூண்டி தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள், கட்சிக்காரர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் சிரமப்பட்டார்கள்'' என்கிறார்கள் அந்த மாவட்ட ர.ர.க்கள்.


அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரான வைத்தியலிங்கம், ஒரத்தநாடு தொகுதியில் அவரது ஆட்களைவிட அ.ம.மு.க. வேட்பாளர் சேகரின் ஆட்கள் படுஸ்பீடாக இருந்தார்கள். திருவையாறு தொகுதியில் அ.ம.மு.க.வின் வேலு கார்த்திகேயன், அங்கு போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரைவிட வேகம் காட்டினார். தாமரை இலைத் தண்ணீர்போல இந்தத் தொகுதியில் அ.தி.மு.கவும், பா.ஜ.க.வும் இருந்தன. பல இடங்களில், கட்சியினர் பூத் ஸ்லிப் கொடுக்கும் பகுதியில் அ.தி.மு.க. கொடிக்குப் பக்கத்தில் பா.ஜ.க. கொடி கட்டப்படுவதை ர.ர.க்கள் விரும்பவில்லை. "தனியா கொடி கட்டிக்குங்க' என்று பக்குவமாக சொல்லி, காவிக் கொடியைத் தவிர்த்தனர்.

 

இந்த நிலவரங்கள் குறித்து, மாநில உளவுத்துறை போலீசார் ஆட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியபடி இருந்தனர். அ.தி.மு.க.வின் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய ரிப்போர்ட்டுகளால் கரூர் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை, தனது ஐ.பி.எஸ் சர்வீஸ் மாநிலமான கர்நாடகத்திலிருந்து ஆட்களைக் கூட்டிவந்திருந்தார். கிருஷ்ணராயபுரம் எப்போதுமே அ.தி.மு.கவுக்கு சாதகமான தொகுதி. ஆனால், அங்கும் தி.மு.க.வின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அ.தி.மு.க. பின்தங்கியது. திருவரங்கம், லால்குடி தொகுதிகளில் ஈடுகொடுத்தது.

 

அ.தி.மு.கவின் தொகுதி பொறுப்பாளர்கள்-அமைச்சர்கள் என முக்கிய பங்காற்றிய வைத்தியலிங்கம், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், காமராஜ் போன்ற வி.ஐ.பி.க்கள் தங்களது தொகுதிகளை விட்டு வெளியே கவனம் செலுத்த முடியாத அளவிற்கு தி.மு.க. தரப்பு தேர்தல் வியூகத்தில் லாக் செய்திருந்தது. தங்களின் பொறுப்பில் இருந்த மற்ற தொகுதிகளை அவர்களால் பார்க்க முடியவில்லை. இப்படி பல இடங்களில் அ.தி.மு.க. பழைய தெம்புடன் இல்லை என்கிறார்கள் தேர்தல் களத்தில் நீண்ட அனுபவம் கொண்ட ர.ர.க்கள்.

 

தற்போதைய களத்தை உணர்ந்த அ.தி.மு.க.வினரோ, "இது போன்ற சோர்வையெல்லாம் தொகுதிகளில் பாய்ந்த பணம் மாற்றி விட்டது' என்கின்றனர். ஒரு கிராமத்தில் மூன்று கிளை இருக்கிற தென்றால், அந்த கிளை நிர்வாகிகளுக்கு ஆளுக்கு ஐந்தாயிரம் என மூன்று முறை வந்து சேர்கிறது. அதுபோக வாக்குகளுக்குப் பணம் என அவர்களிடம் விநியோகிக்க பணம் தரப்பட்டது. அதனால் அவர்கள் உற்சாகமாகிவிட்டனர்'' என்கிறார் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. தலைவர் ஒருவர்.

 

"அதிருப்தி என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வினர் சோர்வாக இல்லை' என்கிறார்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர்.

 

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் வெறித்தனமாகச் செயல்பட்டார்கள். தி.மு.க.வினர்தான் நாம் வெற்றிபெறுவோம் என மெத்தனமாகச் செயல்பட்டார்கள் என்கிறார்கள் அம்மாவட்ட ர.ர.க்கள்.

 

கொங்கு மண்டலமான ஈரோடு, கோவை மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் சுணக்கமாக இல்லை என்கிறார்கள் அம்மாவட்ட ர.ர.க்கள். அங்கே இதற்கு முன்பு இருந்ததைவிட தி.மு.க தரப்பு காட்டிய வேகமும் தேர்தல் களத்தை பரபரப்பாக்கியது.

 

சேலம், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க.வினர், கடைசி ஒருவாரத்தில் ரொம்பவே சோர்ந்துவிட்டார்கள். தலித், முஸ்லிம் வாக்குகள் தி.மு.க.வுக்கு முழுமையாக ஆதரவாக இருந்ததும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தி.மு.க.வுக்கு சாதகமாக இருந்ததும் அ.தி.மு.க.வினரை சோர்வடைய வைத்தது. ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.கவின் சித்ராவை மக்கள் நான்கு முறை முற்றுகையிட்டனர் என்கிற நிலை, அவர்களது சோர்வை அதிகப்படுத்தியது.

 

சில இடங்களில் அ.தி.மு.க.வைப் போல தி.மு.கவும் பண விநியோகத்தில் ஈடுபட்டது.. பண விநியோகம் வாக்குகளைப் பெற்றுத்தரும் என்கிற ஃபார்முலாவை இரண்டு கட்சிகளுமே அறிந்திருந் தாலும், கள நிலவரம் சாதகமாக இருந்தால்தான் அது முழுமையான பலன் தரும் என்பதையும் கழகத் தினர் உணர்ந்திருந்தனர். பல இடங்களில் ஓட்டுக்கு 500 என அ.தி.மு.க. கொடுக்க, தி.மு.க. தரப்பில் ஓட்டுக்கு 300 கொடுத்தது. சில தி.மு.க. வேட்பாளர் கள் 100 ரூபாய் அதிகமாக வாக்காளர்களுக்குத் தந்த னர். அ.தி.மு.க அமைச்சர்கள் தொகுதியில் 1000, 2000, தங்க காசு, கிராம சங்கத்துக்கு நிதி என அசத்தினார்கள்.

 

""எடப்பாடி தொகுதி மூன்று கட்டமாக பண விநியோகம் மேற்கொள்ளும் சூழல் உருவாகும் அளவிற்கு போட்டி கடுமையானதாகவே இருந்தது' என்கிறார்கள் சேலம் மாவட்ட அ.தி.மு.க. தலைவர்கள்.

 

""சென்னை முதல் சேலம் வரை சுணக்கம் காட்டிய ர.ர.க்கள், விழுப்புரம் முதல் ராமேசுவரம் வரை வேகம் காட்டினார்கள். இடையில் திருச்சி, தஞ்சை என ஸ்பீடு பிரேக்கர்கள் அ.தி.மு.க. வேகத் துக்கு தடை ஏற்படுத்தியதுதான் அ.தி.மு.க. களப் பணியின் நிலவரம்'' என்கிறார்கள் அ.தி.மு.க. தலை வர்கள். மற்ற மாவட்டங்களில் இரண்டு கட்சிகளின் களப்பணியும் தொகுதிகளுக்கு ஏற்றாற்போல ஏற்ற இறக்கமாக இருந்துள்ளன.

 

கலைஞரும் ஜெயலலிதா வும் தலைமை வகிக்காத இந்த தேர்தல் களத்தில், தி.மு.கவும் அ.தி.மு.கவும் தனியார் கார்ப்ப ரேட் நிறுவனங்களை வியூக வகுப்பாளர்களாக நியமித்திருந்தன. அந்த நிறுவனங்களும், அர சின் உளவுத்துறையும், வாக்குப் பதிவின் போக்கினைத் தங்கள் தலைமைக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தன. முக்கிய பிரமுகர் கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட் டோரும் இத்தகைய நிலவரத்தை அறிந்தபடியே இருந்தனர்.

 

காலையிலேயே வாக்களிக்க வந்த நடிகர் அஜித், கறுப்பு-சிவப்பு கலந்த மாஸ்க் அணிந்து வந்ததும், நடிகர் விஜய் கறுப்பு-சிவப்பு நிற சைக்கிளை ஓட்டியபடி வந்து ஓட்டுப் போட்டு விட்டு, டூவீலரின் பின்சீட்டில் உட்கார்ந்து வீட்டுக்குத் திரும்பியதும்கூட மீடியாக்களால் பர பரப்பான செய்தியாயின. "இந்த வருடம் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக வாக்களித்தேன்' என ஜெயம்ரவி யதார்த்தமாக சொன்னதும், "சாதி-மதம் கடந்து வாக்களிக்க வேண்டும் என்பதுதான் எப்போதும் என் நிலைப்பாடு' என விஜய்சேதுபதி சொன்னதும் பரபரப்பாயின.

 

இதுபோன்ற பிரபலங்களின் குறியீடுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் ரிப்போர்ட்டுகள் கட்சித் தலைமைகளுக்குப் போய்க் கொண்டிருந்தன. தி.மு.க கூட்டணியில் மு.க.ஸ்டா லின், ப.சிதம்பரம், திருமாவளவன், வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் தங்கள் கூட்டணி பெரும் வெற்றி பெறும் என வாக்களிப்புக்குப் பிறகு நம்பிக்கையுடன் பேட்டி அளித்தனர்.

 

"அனைவரும் வாக்களிக்கவேண்டும்' என்று பொதுவாகச் சொன்னார் சிலுவம்பாளையத்தில் வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அ.தி.மு.க தரப்பு சைலண்ட் மோடில் இருந்த நிலையில், ஏப்ரல் 6 இரவில் மத்திய உளவுத்துறை ரிப் போர்ட் டெல்லிக்குச் சென்றது. மறுநாள், வாக்குப் பதிவு 72.78% என உறுதியான நிலையில், "ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுங்கள். கவனித்துக் கொள்ளுங்கள்' என டெல்லியிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டையில் உள்ள அதிகாரிகளின் சமிக்ஞைகள் பலவற்றை உணர்த்துகின்றன.

 

 

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.