Skip to main content

32 ஆண்டுகள் சிறை... வழக்கும், வலிகளும் - பேரறிவாளன் கடந்து வந்த பாதை!

Published on 18/05/2022 | Edited on 19/05/2022

 

timeline rajiv gandhi case and perarivalan release

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அதிரடியாக அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புள்ளதாக கூறி பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 26  பேருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.  இதில் பேரறிவாளனுக்காக அவரது தயார் அற்புதம் அம்மாள் பல சட்டப்போராட்டங்களை நடத்திய நிலையில் பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கு கடந்து வந்த பாதையை பற்றி சுருக்கமாக பார்ப்போம்...

 

1991 ஆம் ஆண்டு - ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப்படை தாக்குதலால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

 

ஜூன் 21 1991 -  இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட சிவராசன் மற்றும் தனு ஆகியோர் அணிந்திருந்த வெடிகுண்டு பெல்டின் செயல்பாட்டிற்கு பேட்டரி வாங்கி கொடுத்ததாக கூறி தனது 19 வயதில் பேரறிவாளன் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு. அவர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் (தடா) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

ஜனவரி 28, 1998 - இச்சம்பவத்தில் தொடர்புள்ளதாக கூறி பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 26 பேருக்கும்  சென்னை தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

 

மே 11, 1999 - இந்த வழக்கின் மேல் முறையீட்டில் 19 பேர் விடுவிக்கப்பட்டு பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனையை உறுதி செய்யப்பட்டது. அத்துடன் இவ்வழக்கில் தொடர்புடைய ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 

 

அக்டோபர் 8, 1999 - பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

 

அக்டோபர் 27,1999 - தமிழக ஆளுநருக்கு இவர்கள் நால்வர் அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது. 

 

ஏப்ரல் 19, 2000 - நளினியின் தூக்கு தண்டனையை குறைக்க முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. மேலும் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி இவர்களது தண்டனையை குறைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.

 

ஆகஸ்ட் 12, 2011 - சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவர் அனுப்பிய கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததாக மத்திய அரசு கூறியது.

 

ஆகஸ்ட் 30, 2011 - முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். அதே நாளில், சென்னை உயர்நீதிமன்றம் மூவரின் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டு வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது.

 

பிப்ரவரி 18, 2014 - பேரறிவாளன் உள்ளிட்ட நால்வர் கருணை மனு மீது எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதற்கு அடுத்த நாளே பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 7 போரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.

 

பிப்ரவரி 20, 2014 - இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

 

டிசம்பர் 2015 - இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

ஆகஸ்ட் 25, 2017 - கைது செய்யப்பட்டு 15 வருடம் கழித்து முதல் முறையாக  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தந்தையைச் சந்திக்க பேரறிவாளனுக்கு தமிழக அரசு ஜாமீன் வழங்கியது.

 

செப்டம்பர் 6, 2018 - பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது முடிவெடுக்க ஆளுநருக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

 

செப்டம்பர் 9, 2018 - இவ்வழக்கில் தொடர்புடைய 7 போரையும் விடுதலை செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

 

ஜனவரி 23, 2021 - 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் முடிவு குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

 

மே 19, 2021: பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகும் அவரது ஜமீனை ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நீட்டித்து வந்தது.

 

இதையடுத்து பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட  மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று(18.5.2022) அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த 32 ஆண்டுகள் பேரறிவாளனும், அவரது தாய் அற்புதம் அம்மாளும் வழக்குகளுடன் சேர்ந்து ஏகப்பட்ட வலிகளையும் சுமந்து வந்திருக்கின்றனர். பல தடைகளையும், இன்னல்களையும் தாண்டி அற்புதம் அம்மாள் ஒரு வரலாற்று அற்புதத்தையே நடத்தி இருக்கிறார். 

 

 

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (24.04.2024) தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.