Skip to main content

அந்த 13 உயிர்கள்... –தமிழகமும் தாய்லாந்தும்!!!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

தாய்லாந்து நாட்டில் குகைக்குள் சிக்கிய 13 சிறுவர்களையும் அவர்களுடைய பயிற்சியாளரையும் மீட்க அந்த நாட்டு அரசு மேற்கொண்ட சர்வதேச அளவிலான முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் மீட்கப்படும்வரை நிலவிய பதற்றம் நமக்கு ஆச்சரியத்தை அளித்தது.

 

thailand


 

 

 

13 உயிர்களுக்கு இவ்வளவு மதிப்பா என்று நமக்கே வியப்பாக இருக்கிறது. இதற்கு காரணம் சமீபத்தில்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் குறிபார்த்து சுடுபவர்களால் 13 பேரை தமிழக அரசு சுட்டுக் கொன்றது. அவர்கள்போக, 100க்கு மேற்பட்டோர் குறிதவறி குண்டு பாய்ந்ததால் காயமடைந்திருந்தனர். பலருக்கு கைகளும் கால்களும் துண்டிக்கப்பட்டன.

 

சுட்டுக் கொன்ற அரசாங்கமே, கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாயும், காயம்பட்டவர்களுக்கு அவர்களுடைய காயத்துக்கு தகுந்தபடியான தொகையையும் இழப்பீடாக அளித்துவிட்டு தனது வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டது.

 

okchi


 

அதற்கு கொஞ்சநாட்கள் முந்தி, ஒக்கி என்ற புயல் தாக்கியதில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் 661 பேர் காணாமல் போனதாக இந்திய அரசாங்கமே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. காணாமல் போனவர்கள், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கணிசமான இழப்பீட்டுத் தொகையை வழங்கிவிட்டு, அரசுகள் அடுத்தகட்ட கொள்ளையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.

 

இந்தியாவில் குறிப்பாக உயிர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சாதிக்கு தகுந்தபடி வேறுபடும் என்பது எதார்த்தமான உண்மை. டெல்லியில் நிர்பயா என்ற பெண் ஓடும் பேருந்தில் நள்ளிரவில் பலரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இறந்தபோது இந்தியாவே கொந்தளித்தது. அந்தப் பெண்ணைப்பற்றிய பின்னணியை வெளியிடாமல் மறைத்து, அத்தனை மீடியாக்களும் அரசுக்கு எதிராக ஓலமிட்டன. குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு தண்டனை விரைவாக வழங்கப்பட்டது.

 

 

 

சென்னை கோடம்பாக்கம் மின்சார ரயில்நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் பட்டப்பகலில் கொல்லப்பட்டபோதும் இப்படித்தான் கொந்தளித்தது. அந்தப் பெண்ணைப்பற்றிய பின்னணித் தகவல்களை வெளியிட அரசாங்கமே தடைவிதித்தது. கொன்றவனைப் பற்றிய தகவல்களையும் மறைத்தது. ராம்குமார் என்பவனை கைது செய்து அவனை கடைசிவரை செய்தியாளர்களிடம் பேசவிடாமல், சிறையிலிருந்து பிணையில் வெளிவரும் நிலையில் நிரந்தரமாக பேசவிடாமலே செய்துவிட்டார்கள்.

 

ஆனால், காதலித்தார்கள் என்பதற்காகவே சாதியின் பேரால் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டாலும், வீடுபுகுந்து சிறுமி என்றும் பார்க்காமல் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டாலும், கால்மேல் கால் போட்டு அமர்ந்தார்கள் என்பதற்காகவே மூன்றுபேரை வெட்டிக் கொன்றாலும் எந்தவித சலனமும் இல்லாமல் கடந்து போவதைப் பார்த்து பழகியவர்களுக்கு தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட நிகழ்வு வியப்பையே ஏற்படுத்தும்.

 

thailand


 

கடந்த ஜூன் 23 ஆம் தேதி தாய்லாந்து கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த 13 சிறுவர்களும் அவர்களுடைய பயிற்சியாளரும் தாம்லுவாங் என்ற நீளமான குகைக்குள் சாகசப் பயணம் மேற்கொண்டனர். 4 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் பலத்தமழை பெய்து குகையில் நீர் நிரம்பிவிட்டது. வெளியில் வரமுடியாத அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்.

 

அவர்களைக் காணாமல் தேடிய அரசு, அவர்களைக் கண்டுபிடித்து மீட்க உடனடியாக சர்வதேச உதவியை நாடியது. அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் உதவிக்கரம் நீட்டின. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் குகைக்குள் சென்று சிறுவர்களும், பயிற்சியாளரும் உயிரோடு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், உணவு மற்றும் உயிர்க்காப்பு பொருட்கள் வழங்கப்பட்டன.

 

thailand


 

குகையில் மழைநீர் அதிகரித்துவிடாமல் இருப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த கிர்லோஷ்கர் மோட்டார் நிறுவனம் ராட்சத பம்ப்புகளை கொடுத்து நீரை வெளியேற்றிக் கொண்டே இருந்தது. இதனிடையே, சிறுவர்களுக்கு சுவாசிக்க ஆகிசிஜன் சிலிண்டரைக் கொடுத்துவிட்டு திரும்பும்போது தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர் சமன் குனன் உயிரிழந்தார்.

 

ஒருவழியாக சிறுவர்களை மீட்பதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டு, கடந்த ஞாயிறன்று தொடங்கியது. முதல் நாள் 4 சிறுவர்களும், திங்கள்கிழமை 4 சிறுவர்களும், மீதமிருந்த 4 சிறுவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் செவ்வாய்க்கிழமையும் மீட்கப்பட்டனர்.

 

சிறுவர்கள் காணாமல் போய் 9 நாட்கள் அவர்களைத் தேடும்பணி நீடித்தது. அப்போதுதான், தாம்லுவாங் குகை முன் சிறுவர்கள் சென்ற சைக்கிள்கள் நிற்பதை பார்த்த சிலர் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்துதான் சிறுவர்கள் குகைக்குள் சிக்கியிருக்கலாம் என்று தெரியவந்தது.

 

 

 

மனித உயிர்களின் மதிப்பறிந்த தாய்லாந்து அரசு அந்த உயிர்களைக் காப்பாற்ற கவுரவம் பார்க்காமல் சர்வதேச உதவியை நாடியது.

 

ஆனால், ஒக்கி புயலில் காணாமல் போன தனது நாட்டு மீனவர்கள் நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றுவதில் இந்தியக் கப்பற்படை வேண்டுமென்றே மெத்தனம் காட்டியது என்று கன்னியாகுமரி மீனவர்கள் குமுறியதை கேட்க முடிந்தது. கடலோரப்பகுதிகளில் இருந்து தங்களை வெளியேற்றுவதே இந்திய அரசின் நோக்கமாக இருக்கிறது என்று குற்றம்சாட்டியதும் கடல் அலையில் மோதி கரைந்துவிட்டது.

 

உயிரைக்கொல்லும் திட்டங்களுக்கு சாதகமாக மக்களுடைய உயிரை எடுக்கவும் தயங்காத அரசுகள், தாய்லாந்து அரசிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

 

 

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால்  உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவிற்கு உட்பட்ட லச்சியான் என்ற கிராமத்தில் விவசாயத்திற்கு 30 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது.  மேலும் இந்த ஆழ்துளை கிணற்றின் மூடாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தான் சுமார் 1.5 வயது குழந்தை ஒன்று இந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குழந்தையை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவரை உயிருடன் மீட்கப்பட பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். குழந்தையை மீட்கும் பணி சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

அதே சமயம் மருத்துவக் குழுவும், ஆம்புலன்ஸ் வாகனமும் சம்பவ இடத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெளியான முதற்கட்ட தகவலின் படி, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் பெயர் சாத்விக் என்பதும், குழந்தையின் தந்தை ஆழ்துளை கிணற்றை தோண்டி மூடாமல் விட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.