Skip to main content

எதிர்க்கட்சி தலைவர் மீது அவதூறு, ஊழல் வழக்கு கூட போடுவார்கள்... ஆனால் ஆதாரம் இல்லாமல் கொலை வழக்கு போட முடியுமா..? தேனி கர்ணன் கேள்வி!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

fg

 

தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில், சில வாரங்களுக்கு முன் தாமாகவே முன்வந்து பேச துவங்கிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு வழக்கில் என்னை சிக்க வைக்க முயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டினார். அரசு தரப்பில் இருந்தோ அல்லது காவல்துறை தரப்பில் இருந்தோ இந்த மாதிரியான செய்திகள் எதுவும் கூறப்படாத நிலையில், தாமாகவே எடப்பாடி பழனிசாமி இப்படி கூறியது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது. அதன் பிறகு கொடநாடு வழக்கு தொடர்பாக அதிமுக தரப்பு உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு விசாரணைக்குத் தடை கேட்டுப் பார்த்து தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளை சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணனிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. அதிமுகவினரும் இதுதொடர்பாக என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இந்த வழக்கு விசாரணைக்குத் தடை கேட்டு அதிமுக தரப்பு உச்ச நீதிமன்றம்வரை சென்றது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொடநாடு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதுதொடர்பாக உங்களின் கருத்து என்ன? 

 

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்த அனுபவ் ரவி அதிமுகவில் சிறிய அளவிலான பொறுப்பில் இருக்கிறார். அவர் ஏன் இந்த வழக்கை நடத்தக்கூடாது என்று தொடர்ந்து போராடுகிறார் என்ற கேள்வி அனைவருக்குமே எழுகிறது. சென்னை அளவுக்கு வந்திருந்தாலும் பரவாயில்லை, சுப்ரீம் கோர்ட் போயுள்ளார் என்றால், இதை நாம் எளிதாக கடந்து செல்ல இயலாது. அவருக்கு இதில் என்ன சம்பந்தம் இருக்கிறது. அவர் ஒரு சாட்சி; அவர் குற்றவாளி இல்லை. மறுபடியும் உன்னை விசாரித்தால் நீ ஏற்கனவே கூறியதைச் சொல்லிவிட்டு ஓடிவிட வேண்டியதுதானே. இவ்வளவு பணத்தை செலவழித்து இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று சொல்ல ரவி அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. 

 

30, 40 லட்சம் பணம் செலவழித்தாவது இந்த வழக்கை தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவருக்குப் பின்னால் இருந்து இவரை இயக்குவது எடப்பாடி பழனிசாமிதான். எந்த வழக்கிலாவது சாட்சி வழக்கை நடத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் செல்வானா? எடப்பாடி பழனிசாமி தரப்பு எனக்கு சம்பந்தமில்லை என்று கூறுவதெல்லாம் வடிகட்டிய பொய். சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் மற்றும் கொடநாடு வழக்கு ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் பேசுகிறார். உடனே எடப்பாடி பழனிசாமி எழுந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார். இவர் ஏன் பதற வேண்டும். நான் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என்று அவராகவே வெளியே வருவது இதன் மூலம் தெரிகிறது.

 

எந்த விசாரணைக்கும் தாயார் என்றுதானே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுகிறார்கள்?  

 

அப்புறம் எதற்காக இவ்வளவு பதற்றம். முதல்வர் மு.க. ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி தரப்பின் பெயரை சட்டமன்றத்தில் கூறி உங்கள் மீது வழக்கு போடுவோம் என்று எப்போதாவது கூறினாரா? நீங்களாகவே எழுந்து சட்டப்பேரவையில் என்னை வழக்கில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள் என்று ஏன் கூற வேண்டும். எதற்காக உங்கள் முகத்தில் இவ்வளவு பதற்றம், பயம். தவறு இல்லை என்றால் வழக்கை சந்திக்க வேண்டியதுதானே. ஏன் ஓடி ஒளிய வேண்டும். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது அவதூறு வழக்கு ஏன், ஊழல் வழக்கு கூட போடுவார்கள், ஆனால் கொலை, கொள்ளை வழக்கு எல்லாம் ஆதாரம் இல்லாமல் யாராலும் போட இயலாது. அப்படி இருக்கையில் இவர்களின் பதற்றம் நமக்கு வேறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

 

எங்கள் ஆட்சியிலேயே இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிந்துவிட்டதாக அவர்கள் கூறுகிறார்களே?

 

இவர்கள் என்ன விசாரணை செய்தார்கள், நூற்றுக்கணக்கான சாட்சிகளைப் பதிவுசெய்துவிட்டு, இதுவரை எத்தனை சாட்சிகளிடம் விசாரணை செய்துள்ளீர்கள். பாதி பேரிடம் கூட விசாரணை முழுமையடையவில்லை. 40, 50 பேரிடம் மட்டுமே விசாரணை செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் இவர்கள் என்ன விசாரணை செய்திருப்பார்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் வருவது இயற்கையான ஒன்றுதானே. குற்றம்சாட்டப்பட்டவர் தன் தரப்பு வாதங்களை எடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதி கொடுக்கும். அதைத்தான் சயான் கேட்கிறார். எனக்கு என்னுடைய செல்ஃபோன் வேண்டும், பாதுகாப்பு வேண்டும் என்று தொடர்ந்து அவர் கேட்கிறார். இதில் திமுக எங்கே வந்தது. எதற்காக திமுக மீது எடப்பாடி பழனிசாமி பழி சுமத்துகிறார். அதையும் தாண்டி தற்போதும் இந்த வழக்கை தமிழக காவல்துறைதான் விசாரணை செய்துவருகிறது. எனவே முந்தைய ஆட்சியில் இருந்த காவல்துறை அதிகாரிகளை இவர்கள் காட்டி கொடுக்க மாட்டார்கள். எனவே இந்த வழக்கு முறையாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 

 

 

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

கொடநாடு பங்களாவில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
C.b.C.I.D search in KodaNadu Bungalow

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர்  ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. முருகவேல் நியமிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர், கொடநாடு பங்களாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தடயங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் நீதிமன்றத்தின் சார்பில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடயவியல் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கொடநாடு பங்களாவிற்கு ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கொடநாடு பங்களாவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மாதவன் தலைமையில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. முருகவேல், புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மின் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என 20 பேர் கொண்ட குழுவினர் இன்று (07.03.2024) நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது கொடநாடு பங்களாவில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை (08.03.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.