Skip to main content

"தரையில் தவழ்ந்து பதவி வாங்கும் போது சின்னம்மாவிடம் இந்த பஞ்ச் டயலாக்கை கூறியிருக்கலாமே.."!! - தேனி கர்ணன் கேள்வி

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

hk


சேலத்தில் சசிகலா தொடர்பான கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி,  "அதிமுகவில் சசிகலா என்ற பேச்சுக்கே இடமில்லை, வீட்டில் சும்மா இருக்க முடியாமல் அங்கே இங்கே அவர்கள் செல்கிறார்கள், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது, சூரியனைப் பார்த்து... உங்களுக்கே புரியும், நான் சொல்லத் தேவையில்லை" என்று காட்டமாகப் பதிலளித்தார்.

 

இவரின் இந்த கருத்துக்குக் கட்சி கடந்து பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாகப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் எந்த பதவியிலிருந்தாலும் நிதானம் குறையாமல் மரியாதையாகப் பேச வேண்டும் என்று மறைமுகமாக எடப்பாடிக்குக் குட்டு வைத்தார். இந்நிலையில் இது தொடர்பாக சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணனிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம்..

 

சசிகலா தொடர்பான நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு...

 

"அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் எதையும் நிதானமாகப் பேசக்கூடியவர், டிடிவி கூறியது போல் யோசித்துத்தான் பேசுவார், அதிமுகவில் எடப்பாடி, அண்ணன் ஓபிஎஸ் இணைப்புக்குப் பிறகு பழைய மாதிரியே பிரச்சனைகள், மனஸ்தாபங்கள் தொடர்ந்து இருந்து வந்தது. இந்த இணைப்புக்குப் பிறகு நடைபெற்ற எந்த தேர்தலிலாவது அதிமுக வெற்றி பெற்றுள்ளதா, அனைத்து தேர்தலிலும் தோல்வியே கிடைத்தது, 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் படுதோல்வி, தேனியில் மட்டும் அண்ணன் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் வெற்றி பெற்றார். இந்த இரட்டை தலைமை என்பது ஒரு தோல்வி பாதை என்பதை அதிமுக பலமுறை உணர்ந்துள்ளது. இந்த இரண்டை தலைமையைக் கட்சித் தொண்டர்கள் யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அப்பட்டமான உண்மை, இதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அவ்வாறு மறுத்தால் அவர்கள் ஆதாயத்துக்காகப் பொய் கூறுகிறார்கள் என்று பொருளே அன்றி அதைத்தவிர வேறு எதுவுமில்லை.

 

சட்டமன்ற தேர்தலைப் பார்த்தீர்கள் என்றால், திமுகவை விரும்பாத மக்கள் கூட அந்த கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம், கட்சியின் தலைமை சரியில்லை, தொண்டர்கள் சோர்ந்து போய் இருக்கிறார்கள், அதைச் சரிசெய்யத் தலைமை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை, அதன் வெளிப்பாடே தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கிறது. அதனால் தான் கடந்த கால தேர்தலில் கட்சியின் வியூகம் சரியில்லை என்று அண்ணன் ஓபிஎஸ் தொடர்ந்து கூறிக்கொண்டு இருக்கிறார். அதனால் தான் அண்ணன் ஓபிஎஸ் செல்லும் இடங்களில் சின்னம்மாவைக் கட்சியில் சேருங்கள், தலைமை ஒரு உத்தரவு போட்டால் கடைசி தொண்டன் வரை கேட்கும் வகையில் அப்போதுதான் கட்சி நல்ல வழியில் செல்லும் என்று அவரிடம் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

 

இன்றைக்குச் செய்தியாளர்கள் சின்னம்மா தொடர்பாக எடப்பாடியிடம் கேள்வி கேட்டால், அவரிடம் தவழ்ந்து தவழ்ந்து பதவி பெற்ற அவர், சூரியனைப் பார்த்து ஏதோ ஒன்று... நீங்களே எழுதிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார், எடப்பாடியின் இந்த பேச்சை அவரின் சமூகம் சார்ந்த மக்களே மன்னிக்க மாட்டார்கள், அவர்கள் உழைப்பாளிகள், இவரின் பேச்சை மதிக்கமாட்டார்கள். எடப்பாடி நிச்சயம் இதற்கெல்லாம் வருத்தப்படுவார், அதற்கான காலநேரம் விரைவில் வரும்" என்றார். 

 

 

 

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.