Skip to main content

எம்.ஜி.ஆரின் தீவிர விஸ்வாசிக்கு அதிமுக அவைத்தலைவர் பதவி! தமிழ்மகன் உசேன் அரசியலில் கடந்து வந்த பாதை! 

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

Tamilmagan Hussein's path in politics

 

அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்ததையொட்டி நேற்று (01.12.2021) சென்னையில் நடந்த அதிமுக செயற்குழுவில் அனைத்துலக எம்ஜிஆர் மன்றச் செயலாளராக உள்ள தமிழ்மகன் உசேன் தற்காலிக அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியதோடு, கட்சியின் மற்ற நிர்வாகிகளும் அவரை வாழ்த்தினர்.

 

இந்நிலையில், நாகர்கோவில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனின் அரசியல் பயணம் குறித்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். அப்போது, ‘தமிழ்மகன் உசேன் பள்ளி, கல்லூரி படிக்கும்போதே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்துவந்தார். பின்னர் குமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராகவும் எம்.ஜி.ஆர் திமுகவில் இணைந்ததும் அதில் தன்னையும் இணைத்துக்கொண்டார் தமிழ்மகன் உசேன்.

 

பின்னர் திமுக ஆட்சியில் எம்.ஜி.ஆர். மூலம் அரசுப் பேருந்தில் ஓட்டுநர் வேலை கிடைத்தது. இந்நிலையில், தமிழ்மகன் உசேன் நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு 24 பயணிகளுடன் அரசுப் பேருந்தை ஓட்டிச்செல்லும் போது, ரோடுகளில் மக்கள் கூடி நிற்பதைப் பார்த்து, ஆட்டோ ஓட்டுநர்களிடம் என்ன விஷயம் எனக் கேட்டார். அப்போது எம்.ஜி.ஆரை திமுகவிலிருந்து நீக்கிவிட்டனர் என அவர்கள் கூறியதைக் கேட்ட தமிழ்மகன் உசேன், தான் ஓட்டிச் சென்ற அரசுப் பேருந்தை நடுரோட்டில் பயணிகளுடன் நிறுத்திவிட்டு, ஒரு வெள்ளை பேப்பரில் ‘சர்வாதிகார ஆட்சியில் அரசு பதவி வேண்டாம்’ என்று தனது ராஜினமா கடிதத்தை நடத்துனரிடம் எழுதிக் கொடுத்தார்.

 

பின்னர் அங்கிருந்து கார் மூலம் இரவு நாகர்கோவில் வந்த தமிழ்மகன் உசேன், குமரி மாவட்டத்திலுள்ள 101 எம்.ஜி.ஆர். கிளை நிர்வாகிகளை அழைத்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், திமுகவைக் கண்டித்து தமிழ்நாட்டிலே முதல் தீா்மானம் போட்டார். அதன் பிறகு இரவோடு இரவாக சென்னை சென்ற அவர், எம்.ஜி.ஆரை சந்தித்து அதிமுக தொடங்கும்வரை அவருடனே இருந்தார்.

 

எம்.ஜி.ஆர். கட்சி தொடங்குவதற்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கியமான 11 பேரில் 4வது கையெழுத்தை தமிழ்மகன் உசேன் போட்டார். அதன்பிறகு அதிமுகவின் குமரி மாவட்ட முதல் மா.செ.வாக நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், அப்போது காங்கிரஸ் கோட்டையாக இருந்த குமரி மாவட்டத்தில் பட்டித்தொட்டியெல்லாம் அதிமுகவைக் கொண்டு சென்று கிளைகள் அமைத்து எம்ஜிஆரிடம் பாராட்டையும் பெற்றார்.

 

பின்னர் எம்.ஜி.ஆர். மறைந்ததும் ஜெயலலிதாவுக்கு எதிராக ஜானகி அணியில் இணைந்தார். அதன் பிறகு ஜெயலலிதா அதிமுகவைக் கைப்பற்றியதும் ஜெயலலிதாவுடன் இணைந்து அதிமுகவில் தொடர்ந்தார். பின்னர் அதிமுகவில் ஜூனியர்கள் தலைதூக்க, சீனியர்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டனர். குமரி மாவட்டத்தில் கோலோச்சிய தளவாய் சுந்தரத்தால் பெரிதும் ஓரங்கட்டப்பட்ட தமிழ்மகன் உசேன், ஒருகட்டத்தில் அரசியல் முகமே தெரியாத அளவுக்குத் தள்ளப்பட்டார்.

 

மேலும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி இருந்தும் தமிழ்மகன் உசேன் வறுமையின் பிடிக்குத் தள்ளப்பட்டு நண்பர்கள், தெரிந்தவர்களிடம் கடன் கேட்பதும், வட்டிக்குப் பணம் வாங்கியதும், இதனால் அவர் வசித்த வீடு வங்கி ஏலத்திற்குப் போகும் நிலை வந்தது. எம்.ஜி.ஆர். காலத்தில் கோலோச்சிய அவர், ஜெயலலிதா காலத்தில் கண்ணீா் வடித்ததைப் பத்திரிகை செய்திகளில் பார்த்த ஜெயலலிதா, தமிழ்மகன் உசேனுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் பதவி, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பதவி என கொடுத்து அவரை ஆறுதல்படுத்தியதோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒன்றையும் வழங்கினார்.

 

தன்னுடைய 68 வருட அரசியல் வாழ்க்கையில் இன்று அதிமுகவின் அவைத்தலைவராக, அதுவும் தற்காலிக தலைவராகத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என தமிழ்மகன் உசேன் குறித்து நினைவுகூர்ந்தனர்.

 

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.