Skip to main content

மராட்டிய மாநிலத்தின் தலைநிமிர் தமிழர்! -கல்வியாளர் புனே பாலசுப்பிரமணியம் மறைந்தார்!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021
sri balaji college pune balasubramanian

 

புனே பாலாஜி சொசைட்டி பல்கலைக் கழகத்தின் வேந்தரும் கொடைவள்ளலுமான கர்னல் பாலசுப்பிரமணியன் இன்று காலை உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.

 

மன்னார்குடி அருகே கண்டிதம்பேட்டை கிராமத்தில் பிறந்த பாலசுப்பிரமணியன், வறுமையோடு போராடியப்டியே தனது வியர்வைத் துளிகளால் வளர்ந்தவர். இந்திய ராணுவத்தில் சாதாரண வீரராக சேர்ந்து, கடமை உணர்வாலும் பொறுப்புணர்வாலும் உயர்ந்து நின்றதால், இந்தியாவிலேயே முதன் முதலாக, குடியரசுத் தலைவரால் நேரடியாக  கர்னலாக நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர் பாலசுப்பிரமணியன். 


இடையிலேயே விருப்ப ஓய்வுபெற்று, ராணுவத்தினரின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் நோக்கத்தோடு ஸ்ரீபாலாஜி சொசைட்டி என்னும் கல்வி நிறுவனத்தைப் புனேயில் தொடங்கிய அவர், தனது கடுமையான உழைப்பால் அதைப்பெரும் கல்விக் குழுமமாக வளர்த்தெடுத்தார். விடுமுறையே இல்லாத அவரது கல்விக்குழுமம் அண்மையில் பல்கலைக் கழகமாக மாறியது. உயரங்களில் சஞ்சரித்த போதும் சொந்த ஊரை மறக்காமல் அங்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்தளித்திருக்கிறார்.  

 

நம் நக்கீரன் ஆசிரியர் மீது பேரன்புகொண்ட அவர், நக்கீரன் குடும்பத்தில் ஒருவராகவே மாறி, நக்கீரனின்  நலனில் அக்கறையும் ஆர்வம் காட்டிவந்தார். சிறந்த கவிஞர்கள் வளரவேண்டும் என்ற எண்ணத்தில், நக்கீரன் குழும இலக்கிய இதழான ‘இனிய உதயம்’ இதழில் கல்லூரி மாணவர்களுக்காக கவிதைப் போட்டிகளை ஓராண்டு  நடத்தி, முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயையும், ஏனைய பரிசாக பல ஆயிரக்கணக்கான ரூபாய்களையும் பரிசாக  வழங்கி, இளம் கவிஞர்களுக்கு உற்சாகம் கொடுத்து,  இலக்கிய உலகின் பெருங்கவனத்தைப் பெற்றவர்  பாலசுப்பிரமணியன்.  

 

நக்கீரன் ஆசிரியரின் அன்பான அழைப்பை ஏற்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை விழாவில் கவிப்பேரசு வைரமுத்துவோடு கலந்துகொண்டு சிறப்பித்த அவர், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே  கம்பீரமான உரையை நிகழ்த்தி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டார். அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட  பாலசுப்பிரமணியன், உடல்நலக்குறைவால் இன்று திடீரென இயற்கை எய்தினார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்கு நாளை காலை  புனேயில் நடக்க இருக்கிறது.

 

கர்னல் பாலசுப்பிரமணியனுக்கு திலகவதி என்ற மனைவியும்,n பரந்தாமன், பரமானந்தம் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். 

 

மராட்டிய மாநிலம் ஒரு தலைநிமிர் தமிழரை இழந்துவிட்டது.

-நாடன்

 

Next Story

ஹிந்து மாணவிகளுடன் பேசிய இஸ்லாமிய மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Incident happened to the Muslim student who spoke with the Hindu girls

மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியில் சாவித்ரிபாய் புலே என்ற பிரபல பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும், 19 வயது இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ஹிந்து மாணவிகளுடன் பேசியதாகவும், மதத்தின் பேரில் பிரச்சாரம் செய்ததாகவும் கூறி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அந்த மாணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், போலீசார் விசாரணையில், ‘பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவர் சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாட்டு பிரிவில் படித்து வருகிறார். அவர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் சுமார் ஒன்பது மாதங்களாக தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் ஏப்ரல் 7ஆம் தேதி மதியம் 2 மணியளவில், தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் கேண்டீனில் மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.

அப்போது, 6 மாணவர்கள் அந்த கேண்டீனுக்கு மூன்று இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அங்கு வந்தவர்கள், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவரிடம் ஆதார் அட்டை கேட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது, அவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும், மதம் தொடர்பாக தவறாகப் பேசி அவரைத் தாக்கியுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.