Skip to main content

அமைதி, அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதி... இன்று என்ன நாள் தெரியுமா???

Published on 26/04/2018 | Edited on 27/04/2018

மனிதர்கள் ஒரு சோகமான நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்றால் அவர்கள் முதலில் தேடுவது மன அமைதியைதான். ஏனெனில், அப்போதுதான் அவர்களால் நின்று நிதானமாக யோசிக்க முடியும். சிலருக்கு அமைதியுடன் சேர்ந்த நல்ல மெல்லிசையை கேட்டும் அவர்கள் சோகத்தை அதன்மூலம் தீர்த்துக்கொள்வர். ஆனால், ஒருவர் சோகமாக இருக்கும்பொழுதோ, குழப்பத்தில் இருக்கும்பொழுதோ இந்த தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த வீதிகளில் செல்லும்போது பார்க்கும், உணரும் கேட்கும் அனைத்துமே மாசு அடைந்திருக்கிறது என்று உணர்வார்கள். அப்படியென்றால் அந்த சூழலில் நமக்கு ஏது மன அமைதி. காதுகளின் திறன் இயற்கையான அந்த மெல்லிய சத்தங்களை கேட்பதற்கும், எப்பொழுதாவது அடித்து பெய்யும் மழை மற்றும் இடி போன்ற சத்தங்களை கேட்பதற்கும் தான். அதற்கு மேல் கொஞ்சம் எப்பொழுதாவது கேட்கலாம். ஆனால், தற்போது இந்த உலகத்தில் நாம் கேட்பதெல்லாம் அவ்வாறா இருக்கிறது.

sound

தற்போது மனிதன் பயன்படுத்தும் முக்கியமான கருவியாக இருப்பது இயர்போன். அதாவது "செவிட்டு மெஷின்" என்று மூத்தவர்கள் கேலி செய்வார்களே அது போன்றுதான் இருக்கும். செவிட்டு மெஷின் என்பது காதின் கேட்கும் திறனை அதிகரிக்க பயன்படுகிறது. ஆனால், இந்த இயர்போன் நம் காதின் கேட்கும் திறனை கொஞ்சம், கொஞ்சமாக குறைக்கிறது அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இயர்போன் பயன்படுத்துவதால், அடுத்தவருக்கு எந்தவித இடைஞ்சல்களும் இல்லை என்று கர்வமாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால், எதிர்காலங்களில் காதுகளின் திறன் கேள்விக்குறிதான். இது மட்டுமல்லாமல், 2.1, 5.1, டோல்பி என்று இன்னும் நிறைய வகையான ஸ்பீக்கர்கள் பயன்படுத்துகிறோம். இன்னும் பல இருக்கின்றன. வெளியே சென்றால், சாலைகளில் வண்டிகளின் இரைச்சல், தலையை உயர்த்தினால் விமானத்தின் இரைச்சல், கண்ணுக்கெட்டிய தூரம்வரை தொழிற்சாலைகள், வாகனங்களின் இரைச்சல், கீழே குனிந்தால் மோட்டார் முதல் பெரிய, பெரிய ட்ரில்லிங் மெஷின்கள் போன்றவற்றிலிருந்து இருந்துவரும் இரைச்சல் என்று பட்டியலிட்டு கொண்டே இருக்கலாம்.

 

இந்த நிலம், நீர், ஆகாயம், காற்று இயற்கை மாசு அடைவது போன்று, ஒலியும் மாசடைகிறது. மனிதனுக்கு மன நிம்மதியென்ற ஒன்றை இல்லாமல் செய்துவிடுகிறது. தலைவலி, இதய நோய், மற்றும் மூளை நரம்புகளில் இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என் ஏராளமாக உள்ளன. இது அனைத்தும் சேர்ந்து மனிதனுக்கு பல பிரச்சனைகளை  கொண்டுவருகிறதென்றால், விலங்குகளுக்கு இன்னும் பெரிய, பெரிய ஆபத்துகளையெல்லாம் அளிக்கிறது. விலங்குகள் இனப்பெருக்க காலங்களில், சில இயற்கையான சத்தங்களை கேட்டுக்கொண்டுதான் இனப்பெருக்கத்திற்கே ஆயத்தம் ஆகுமாம். மேலும் சொல்லப்போனால், மனிதனுக்கு கூட அதிகமான பிரச்சனையாக காது கேட்கும் திறன்தான் குறையும். ஆனால், விலங்குகளுக்கு அதன் வாழ்வாதாரமே அழிக்கப்படுகிறது.   

 

sound

 

உலகமெங்கும் ஒலி மாசுவின் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏப்ரல் 26 தேதியை விழிப்புணர்வு நாளாக பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் இரைச்சல்களை குறைக்க தொழிநுட்பங்களை மாற்றி அமைத்து வருகின்றனர். முக்கியமாக வாகனங்களின் சத்தத்தை குறைக்க பல விதமான கருவிகளை கொண்டு முயற்சிசெய்கின்றனர். தொழிற்சாலைகளிலும் கருவிகள் பொருத்தியாக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. இருந்தாலும் இரைச்சல்கள் இருக்கத்தான் செய்கிறது. நமக்கு நாமே விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டால்தான் இதனைக் குறைக்க முடியும். இக்காலத்தில் கண்டிப்பாக இரைச்சல்களை ஒழிக்க முடியாது. அதை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் இந்த அரசியல்வாதிகள் பிரச்சாரத்தையும், விழாக்காலங்களில் அனைத்து புனிதத் தளங்களிலும் கொண்டாட்டமாக போடும் பாடல் ஒலியையும் ஒழிக்க வேண்டும். இயர்போன் பயன்படுத்துவதனால், சமூகத்துக்கு ஊறு இல்லை. ஆனால் தனி ஒருவனுக்கு அது மாசு நிறைந்ததுதான். இனியாவது வால்யூம் குறைவாக வைத்துக் கேட்க ஆரம்பிப்போம். இரைச்சலை தடுப்போம்.

 

 

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

'உயிருக்கும் ரிஸ்க்; நீர் நிலைக்கும் கேடு' - எல்லை மீறும் இன்ஸ்டா ரீல் அடிக்டர்ஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Living Risk; Insta-reels that defy water levels

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

காவல்நிலையத்தின் வாயில்களில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல்நிலையத்திலிருந்து வெளியே வருவதுபோல ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட இன்ஸ்டா ரீல் வெளியிடும் இளைஞர்கள் அவ்வப்போது கைதாகும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மதுரையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. மதுரை வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நண்பர்கள் உதவியுடன் வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த நெருப்பிற்கு நடுவில் அந்த இளைஞர் குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.