Skip to main content

இவ்வளவு ரூபாயா..? விழி பிதுங்கும் வாடிக்கையாளர்கள்..! - உஷாரா இருங்க பொதுமக்களே..!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

ddd

 

பொதுவாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை அண்மைக்காலமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது என பொதுமக்கள் கவலையடைந்து வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தினருக்குப் பெரும் சிரமத்தைக் கொடுத்துள்ளது. இந்த விலை உயர்வு, 'அன்றாடம் வேலைக்குச் செல்வதற்கே கூடுதல் செலவாகிறதே' என்ற மலைப்பை நடுத்தர மக்களின் மனதில் வேரூன்றவைத்துவிட்டது. இந்த விலை உயர்வால் ஷேர் ஆட்டோ, ஆட்டோ, கார் என அனைத்துக் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. 

 

ஏற்கனவே கரோனா ஊரடங்கில் வேலையிழப்பு, குறைந்த வருமானம் போன்றவற்றால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வெளியூரில் இருந்து வந்து தங்கி பணியாற்றுபவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வும், அதன் நீட்சியாக ஏற்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும் மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளன.  

 

ddd

 

கரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் சாப்பிடும் சென்னையில் உள்ள பிரபலமான உணவகங்களில் மினி டிஃபன் 45 ரூபாயில் இருந்து 55 ரூபாய் வரை இருந்தது. தற்போது அதே உணவகங்களில் மினி டிஃபன் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வைக் கண்டு சாப்பிட வந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

 

அதே ஒரு இட்லி, ஒரு மினி தோசை, ஒரு கரண்டி பொங்கல், ஒரு மினி வடை, ஒரு சின்ன கப்பில் கேசரி, ஒரு மினி காஃபி. வேறு எதுவும் இல்லை. இதற்காக ஏன் 45 ரூபாய் ஏற்றினார்கள் என்று சாப்பிட வந்தவர்கள் புலம்பிக்கொண்டே சென்றனர். 

 

ddd

 

ஹோட்டல்களில் சாப்பாடு மட்டுமல்ல, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் போக்குவரத்துக் கட்டணங்கள், பருப்பு, எண்ணெய் போன்ற மளிகைப் பொருட்கள், அத்தியாவசியமாகப் பயன்படும் மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆனால், வாங்கும் சக்திதான் மக்களுக்கு இன்னும் உயரவில்லை. 

 

அதிமுக அரசோ பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்குமாறு கடும் கண்டனமோ, எதிர்ப்போ மத்திய அரசுக்குத் தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சியான திமுகவோ பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ஐந்து ரூபாய், நான்கு ரூபாய் குறைப்பதாகச் சொல்கிறார்களே தவிர, அவர்களும் மத்திய அரசு திரும்பிப் பார்க்கும் அளவுக்குக் கடும் கண்டனமோ, எதிர்ப்போ காட்டவில்லை எனப் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

 

ddd

 

பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போதும், உணவங்களில் சாப்பிடும்போதும் எப்படி உஷாராக இருப்பது? பெட்ரோல், டீசல் வேறு வழியில்லை, எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்தான் போட்டாக வேண்டும். அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டரும் வாங்கித்தான் ஆகவேண்டும். ஆனால், முடிந்த அளவுக்கு வாகன இயக்கத்தைக் குறைத்துக்கொள்வது நமது பர்ஸ் பஞ்சர் ஆவதை சற்றே தள்ளிப்போடக்கூடும். அதேபோல, மளிகைப் பொருட்களைப் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட குறைந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய பல மளிகைக் கடைகளும் உள்ளன. அக்கம் பக்கத்தில் விசாரித்து அதுபோன்ற கடைகளிலோ மொத்த விநியோகம் செய்யும் இடங்களிலோ வாங்கலாம். 

 

cnc

 

பிராண்டட் பொருட்கள்தான் பெரும்பாலும் அதிக விலை கொண்டவை. எனவே, பிராண்டட் பொருட்கள்தான் சிறந்தது என்ற எண்ணத்தை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, பிராண்டட் இல்லாத பொருட்கள் எவ்வளவோ தரமானவையாகவே இருக்கின்றன, அவற்றை வாங்கலாம். அதைப்போலவே நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்து சிறிய, அதேநேரம் சுவையான உணவங்களில் உணவு உண்ணலாம். மெஸ் போன்று சிலர் நடத்துகின்றனர். அதிலும் உணவு வகைகள் குறைந்த விலைக்கு விற்பனையாகின்றன. உடலுக்கும் கேடு குறைவு. 

 

இப்போதைய சூழலில், மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ, திறமையாக வாங்கும் வித்தையை நாம் கற்றுக்கொண்டால் இன்றைய இந்த நிலையை நம்மால் ஓரளவு சுலபமாகக் கடந்துவிட முடியும் என நம்பலாம்.

 

 

 

Next Story

மகனை கொன்று சூட்கேஸில் எடுத்துச் சென்ற பெண் தொழிலதிபர்; பதற வைக்கும் ஹோட்டல் அறை கொலை சம்பவம்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Shocking hotel room incident

நான்கு வயது மகனை பெற்ற தாயே கொலை செய்து சூட்கேஸில் வைத்து உடலை பெங்களூருக்கு எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுசனா சேத் (39). சென்னையில் பள்ளி படிப்பை முடித்த இவர், கொல்கத்தாவில் முதுகலை படிப்பை தொடர்ந்ததோடு, அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு துறையில் பணியாற்றி வந்தார். உலக அளவில் செயற்கை நுண்ணறிவு துறையில் பணியாற்றும் சிறந்த 100 பெண்களின் பட்டியலில் இடம் பெற்றவர் .

பெங்களூருவில் ஏஐ லேப் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை நிறுவி நடத்தி வந்தார். கடந்த ஆறாம் தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு தன்னுடைய நான்கு வயது மகனுடன் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார் சுசனா சேத். இந்நிலையில் நேற்று ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு அவசரமாக பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையை பராமரிப்பு செய்த ஹோட்டல் நிர்வாகத்தினர் அறையை சுத்தம் செய்தபோது அங்கு ரத்தக்கரை இருந்ததை கண்டு அதிர்ந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஹோட்டல் அறைக்கு வரும் பொழுது நான்கு வயது மகனுடன் வந்த சுசனா சேத் செல்லும்போது தனியாக சென்றதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான விவரங்களை காவல் நிலையத்திலும் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ஹோட்டலில் இருந்து கிளம்பிய சுசனா சேத்தை செயலி மூலம் பின் தொடர்ந்தனர். அதேபோல் ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் ஹோட்டலுக்கு மகனுடன் வந்த சுசனா சேத் செல்லும் பொழுது தனியாக சென்றது உறுதியானது.

மேலும் ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய போது, சுசனா சேத் பெங்களூர் செல்ல ஒரு வாடகை கார் வேண்டும் என ஹோட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு விமான டிக்கெட் மிகவும் குறைவு தான் எனவே முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர் ஹோட்டல் ஊழியர்கள். ஆனால் நான் காரில் தான் பயணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார் சுசனா சேத். அதன்படி வாடகை காரில் கையில் தூக்க முடியாமல் சூட்கேஸ் ஒன்றை சுசனா சேத் எடுத்து சென்றுள்ளார்.

உடனடியாக அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு போலீசார் உங்களுடைய மகன் எங்கே விசாரித்தனர். அதற்கு சுசனா சேத் மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்றதாக தெரிவித்து ஒரு முகவரியை சொல்லியுள்ளார். முகவரியை சென்று பார்த்த பொழுது அது போலி முகவரி என்று தெரியவந்தது. இதனால் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறார் என்பது தெரிய வந்தது. அவர் செல்போன் மூலம் ட்ராக் செய்ததில் கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

Shocking hotel room incident

தொடர்ந்து காரின் டிரைவரை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு செல்போன் மூலமே போலீசார் அறிவுறுத்தினர். இதனால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு கார் சென்றது. காரை சோதனை செய்தபோது காரில் இருந்த பெரிய சூட்கேஸில் சுசனா சேத்துவின் மகன் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சுசனா சேத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரே தன்னுடைய மகனை கொன்று விட்டு உடலை சூட்கேஸில் வைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

kjl


தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பெரிய வணிக வளாகங்கள், கோயில்கள், கடற்கரைகள் முதலியவை நோய்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளி, கல்லூரிகளும் கடந்த சில நாட்களாக திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இதற்கிடையே திரையரங்குளில் 50 சதவீத பார்வையாளர்கள், பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. கரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மேலும் சில கட்டுப்பாடுகளை வழங்கக்கோரி அரசிடம் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசனை செய்த தமிழக அரசு இன்று மதியம் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மால்கள், வணிக வளாகங்கள், உணவகங்களில் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.