Skip to main content

திருடு போகிறதா தமிழர் கடல்? - மத்திய அரசின் 'சாகர்மாலா' பற்றி சீமான், திருமுருகன் காந்தி!   

Published on 22/02/2018 | Edited on 23/02/2018

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில்(2003) முன்மொழியப்பட்ட திட்டம் இந்த சாகர்மாலா திட்டம். இந்தத்  திட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டில் உள்ள 7500 கிமீ நீளமுள்ள கடற்கரையையும் 14,500 கிமீ நீளமுள்ள உள்நாட்டு நீர்வழிகளையும் ஒன்றாக இணைத்து சரக்கு போக்குவரத்திற்கானதாக மட்டும் மாற்றுவதே. முதல்கட்டமாக 1000 கோடி செலவில் இந்தியாவிலுள்ள 12 துறைமுங்கள் மற்றும் 1,208  தீவுகளை சரக்கு போக்குவரத்திற்கு ஏற்றவாறு நவீனப்படுத்துவது, 189 கலங்கரை விளக்கங்களை நவீனப்படுத்துவது தொடங்கும். நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில் துறைமுகங்களுக்கும் பங்குண்டு. இதன் அடிப்படையில் பார்க்கும்பொழுது  சீனாவில் 24 விழுக்காடும், நெதர்லாந்து 42 விழுக்காடும், அமெரிக்கா 7 விழுக்காடும் அந்தந்த நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் துறைமுக வர்த்தகம் பங்களித்துள்ளது. ஆனால், இந்தியாவில் துறைமுகங்களின் மூலமான பொருளதார பங்களிப்பு வெறும் 3 விழுக்காடே, துறைமுகங்கள் மூலமான பொருளாதார பங்களிப்பை அதிகப்படுத்துவதே இந்த திட்டம் என மத்திய அரசால் விவரிக்கப்படுகிறது.

 

Sagar Mala Project


ஆனால் இவ்வளவு வளர்ச்சிகள் இருந்தாலும் தமிழத்திலுள்ள 7 கடற்கரை மாவட்டங்களில் மீன்பிடி தொழிலை ஆதாரமாகக்   கொண்டுள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுவர். மற்றும் கார்ப்ரேட் வர்த்தகம் தலைத்தோங்கும் என்று தமிழ் ஆர்வளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். காரணம் மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் அறிக்கையிலே இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என ஒரு உரையையும் அளித்துள்ளது. அதாவது 7 கடற்கரை மாவட்டங்களில் உள்ள மீனவர்களில் 18 விழுக்காடு மக்கள் கடற்கரையை வாழ்விடமாக கொண்டுள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் பறிக்கப்படும், இடைவிடாத போக்குவரத்து மாசினால் மீன்வளம் பாதிக்கப்படும் என்பதையே 'கிரிட்டிகல் ஸ்டேக் ஹோல்டர்ஸ்' என்று நாசுக்காக சொல்கிறது மத்திய அரசு. இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுக்கும் 'நாம் தமிழர் கட்சி' தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் 'மே பதினேழு' இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரிடம் இந்தத் திட்டம் குறித்துக் கேட்டோம். 

சீமான் 
 

Seeman Sagar Mala



7000 கிமீ கடல்வழிச்சாலை, 14500 கிமீ உள்நாட்டு நீர்வழிச்சாலை, இதை ஒன்றிணைப்பதுதான் இந்த சாகர் மாலா திட்டத்தின் நோக்கம் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை நோக்கம் என்னவென்றால் ஏற்றுமதி இறக்குமதி. என்ன ஏற்றுமதி? இங்குள்ள  நிலக்கரி, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஈத்தேன், ஆற்றுமணல், மலைமணல் போன்ற  வளங்களைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்வது. வெங்காயம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை விளைவிக்க போதுமான வளம், நிலம் இருந்தும் அதை விளைவிக்க முடியாமல் இறக்குமதி செய்வது. இலங்கையில் திரிகோணமலையை சீனா 900 ஆண்டுகளுக்கு 9,500 கோடி லீசுக்கு எடுத்துவிட்டது. அதேபோல் தனுஷ்கோடியை  மக்கள்  வாழ வாய்ப்பற்ற இடம் என அறிவித்து ராணுவ முகாம் அமைக்கிறது மத்திய அரசு. அணு உலை அமைப்பதல்ல அணு பூங்கா அமைப்பதுதான் மத்திய அரசின் நோக்கம். அதேபோல் கடலூர் நாகபட்டினம் சுற்றியுள்ள 45 கிராமங்களை பெட்ரோலிய மண்டங்களாக அறிவித்துள்ள அரசு அதைச்சுற்றியும்  இராணுவமுகாம் அமைக்கும்.  எல்லாம் இராணுவ மயமான பிறகு மக்களால் கிளர்ச்சியே செய்யமுடியாத, உரிமையை கேட்டுபெறமுடியாத நிலையை உருவாக்குவதே நோக்கம். இதுதான் நடக்கும் என கணிக்கமுடிகின்ற இந்த சூழ்நிலையில இதை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு கொண்டுபோய் எச்சரிக்கை உணர்வை உருவாக்கவேண்டும். அடிமை இந்தியாவில் போராட ஒரு காந்தி, ஒரு பகத்சிங், ஒரு சுபாஷ் சந்திரபோஸ் உருவாக முடிந்தது. ஆனால் விடுதலை இந்தியாவில் அது கடினம். கருவிலேயே அழித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட போக்கு நடந்துவருகிறது.

'சாகர்மாலா திட்டத்தினால்  துறைமுகம் சார்ந்த மீன் பதப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் மற்றும் துறைமுகம் சாராத மாற்று வேலைவாய்ப்பு பயிற்சிகள், விவசாயம் செய்வது, கைவிணைப் பொருட்கள் செய்வது போன்ற பயிற்சிகள். மீனை ஏற்றுவது இறக்குவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்' என்று மத்திய அரசு கூறுகிறது. அப்போ இவர்களுடைய நோக்கம்  ஆழ்கடலுக்குள் மீனவன் மீன் பிடிக்க செல்லக்கூடாது, கூட்டிணைவு (corporate) நிறுவனங்கள் கையில் கொடுத்திட வேண்டும். விளைநிலத்தை விட்டு வேளாண்குடிமக்களை வெளியேற்ற வேண்டும், கடல் பரப்பை விட்டு மீனவனை வெளியேற்றவேண்டும், பொறுப்புகளை  எல்லாம் கார்ப்ரேட் எனும் கூட்டிணைவு நிறுவனங்களுக்கு  தாரைவாக்க வேண்டும் என்பதே நோக்கம். இந்த சாகர் மாலா திட்டம் என்பதே மண்ணில் உள்ள வளங்களை கொள்ளையடிக்கும் ஒரு பெரும்முயற்சி எனவேதான் இதை எதிர்க்கிறோம்.

திருமுருகன் காந்தி

 

Thirumurugan gandhi Sagar Mala

 

காடுகளில் இருந்து எப்படி பழங்குடிகள் வெளியேற்றப்படுகின்றார்களோ, விவசாய நிலங்களிலிருந்து எப்படி விவசாயிகள் வெளியேற்றப்படுகிறார்களோ அதுபோல மீனவர்களை கடலிலிருந்து வெளியேற்றும் வழிமுறையே இந்தத் திட்டத்தின் அடிப்படை கொள்கை. மீனவர்களின் கடல், மீனவர்களுடைய கடற்கரை மற்றும் வாழும் நிலப்பரப்பு போன்றவைகளை கையகப்படுத்தி கார்ப்ரேட்டிடம் ஒப்படைப்பதே இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தில் மேம்படுத்தப்படும் துறைமுகம் வெறும் வணிக துறைமுகம் மட்டுமல்ல அது பின்னாளில் ராணுவ துறைமுகமாகவும்  மாற்றப்படும்.

திரிகோணமலை துறைமுகத்தின் அருகில் உள்ள சம்பூரில் அனல்மின்நிலையம் அமைக்க கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை இந்திய அரசு கையகப்படுத்தி அங்கு வாழ்ந்து வந்த பூர்வீக குடிகளை வெளியேற்றியது. அந்தப் பகுதியை பாதுகாக்க இராணுவத்தை நிறுத்தியது. இப்படி இருக்க திரிகோணமலையை அமெரிக்காவினுடைய கப்பல் படை பாதுகாப்புத் தளமாக மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை போடுவதற்காகவும் அந்த துறைமுகத்தை பயன்படுத்துவதற்காகவுமே  இனப்படுகொலை அங்கு நடத்தப்பட்டது. இதுதான் அதன் அடிப்படை.

எண்ணூரிலிருந்து ஆரம்பித்து தமிழ்நாட்டின் கடைசி கடற்கரை  கிராமமான நீராடிவரை பல்வேறு துறைமுகங்கள் வரப்போகின்றன. அந்த துறைமுகங்கள் அனல்மின்நிலைய துறைமுகங்களாக, சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான துறைமுகமாக அல்லது ராணுவ பயன்பாட்டிற்கான துறைமுகமாக இருக்கும். அப்பொழுது அப்பகுதியில் உள்ள பூர்விக குடிமக்களை முற்றிலும் அகற்றப்படும் சூழ்நிலை வரும்.

அப்படி வெளியேற்றப்பட்ட மீனவர்களை மறுவாழ்விற்க்கு கொண்டுவருவது, மீனவர்களை மாற்று தொழிலுக்கு பயிற்றுவிப்பது என மத்திய அரசு சொல்கிறதே, அதற்கு ஒதுக்கப்பட்ட பணம் வெறும் 4000 கோடிதான், அந்த 4000 கோடியும் ஒட்டுமொத்த 7000கிமீ  கடற்கரையிலுள்ள ஒட்டுமொத்த  மீனவனுக்கானது. அப்பொழுது  தமிழ்நாட்டு மீனவனுக்கு எவ்வளவு இருக்குமென நன்கு யோசித்துப் பாருங்கள். இதிலுள்ள சதியை மனதில் கொள்ளுங்கள்.  இந்த துறைமுகங்கள் தனியார் மயமாகப்போகின்றன. சுற்றி தனியார் தொழிற்சாலைகள் வரப்போகிறது. எனவே கடல்மாசடைந்து மீன் வளம் குறையும்.

ஒரு நாட்டின் துறைமுகங்கள்தான் நாட்டின் பொருளாதாரத்தை முடிவுசெய்யும் இடம், அப்படிபட்ட துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தனியார் கார்ப்ரேட் கைகளில் இயக்கப்படும்போது  பொருளாதாரமும் அவன் சார்ந்து நிற்கப்போகிறது. அதனால் அங்கு நமக்கு கூலிவேலைதான் கொடுக்கப்படும், அடிமை இந்தியாவில் இருந்தது  போல.

சந்திப்பு : அருண்பாண்டியன் 
  

 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.