Skip to main content

மாஜி லேப்டாப்பில் ஒளிந்திருக்கும் ரகசியம்! - சேஸ் செய்து தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!  

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

The secret hidden in the Ex Minster's laptop! - Anti-bribery department chased and lifted!

 

"பா.ஜ.க. தலைமைக்கு 500 கோடி, இங்கும் 300 கோடி கொடுத்து சரிக்கட்டியாச்சி. அதனால் அண்ணன் வீட்டுல ரெய்டுங்கிற பேச்சிக்கே இடமில்லை" என காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு திரிந்த முன்னாள் அமைச்சர் காமராஜின் பினாமிகளும், ஆதரவாளர்களும் இப்போது கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.

 

அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதான ரெய்டு வரிசையில் ஏழாவதாக சிக்கியிருக்கிறார் மாஜி உணவு மந்திரியும் திருவாரூர் அ.தி.மு.க. மா.செ.வுமான ஆர்.காமராஜ். தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 58.44 கோடி மதிப்பிற்கு சொத்து சேர்த்திருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது.

 

இதைத் தொடர்ந்து இவர் மீதும் இவரது மகன்களான இனியவன், இன்பன், மற்றும் அவரது கல்லூரி நண்பர்களான சந்திரகாசன், உதயக்குமார், லாரி காண்ட்ராக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீதும் 7-ஆம் தேதி முறைப்படி வழக்கைப் பதிவு செய்துவிட்டு மறுநாள் அதிகாலையே ரெய்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.

 

The secret hidden in the Ex Minster's laptop! - Anti-bribery department chased and lifted!

 

 

திருவாரூர் மாவட்டத்தில் 38 இடங்களிலும், சென்னையில் 6 இடங்களிலும், கோவையில் 1 இடத்திலும், திருச்சியில் 3 இடத்திலும், தஞ்சாவூரில் 4 இடத்திலும் என மொத்தம் 52 இடங்களில் 8-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர்.

 

மன்னார்குடியில் உள்ள அவர் வீட்டில் அதிகாலை 5.40 மணிக்கு துவங்கிய சோதனை, மாலை 7 மணிவரை தொடர்ந்தது. முன்னாள் அமைச்சர் காமராஜை ஒரு அறையிலும், அவரது மூத்த மகனை ஒரு அறையிலும், அவரது மனைவி லதா மகேஷ்வரியை ஒரு அறையிலும் வைத்து நீண்ட நேரம் துருவித் துருவி முதலில் விசாரணை செய்தனர். மூன்று பேரின் பதில்களும் ஒத்துப் போகவில்லையாம்.


குறிப்பாக, தஞ்சாவூரில் சுமார் ரூ.800 கோடியில் கட்டப்பட்டுவரும் மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனை குறித்த கேள்விக்கு, மூன்று பேரிடமிருந்தும் முரணான பதில்கள் வந்துள்ளன. அதேபோல அவர் வீட்டிற்குப் பின்புறம் வசிக்கும், அவரது மனைவி லதா மகேஸ்வரியின் தங்கை ஆண்டாள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தி, அதே கேள்வியை கேட்டுள்ளனர்.

 

The secret hidden in the Ex Minster's laptop! - Anti-bribery department chased and lifted!

 

மேலும், சில தகவல்களைப் போட்டு வாங்குவதற்காக, நீங்க ஓ.பி.எஸ். ஆதரவாளரா? எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரா? என்று அதிகாரிகள் ஆண்டாளிடம் கேட்க, “எங்க அக்கா வீட்டுக்காரர் காமராஜ் எங்க இருக்காரோ அங்கதான் இருப்போம்” என்று அவர் கூறியிருக்கிறார். ஆனாலும் விடாப்பிடியாக “ஓ.பி.எஸ்.ஸை காமராஜின் மகன்கள் உறவுமுறை சொல்லிக் கூப்பிடுவாங்க தானே?” என குதர்க்கமான கேள்வியையும் அதிகாரிகள் கேட்க, “அது அப்போ, இப்ப இல்லங்க” என கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட சுவாரஸ்யங்களும் ரெய்டின் போது நடந்திருக்கிறது.


மன்னார்குடி அருகே ஸ்தோத்ரியம் கிராமத்தைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டபட்டவர்தான் காமராஜ். 2001 ராஜ்யசபா எம்.பி.யாகும்வரை மன்னார்குடி சைக்கிள் கடை ஒன்றுதான் அவரது அலுவலகம். இப்போது?


மன்னார்குடியில் இருக்கும் பிரமுகர்கள் சிலரிடம் மேலும் நாம் விசாரித்தபோது, “விவசாயம் உட்பட எந்தவிதத் தொழிலும் இல்லாமல் இருபது ஆண்டுகளில் அவருக்கு இவ்வளவு கோடி சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? மன்னார்குடியில் மட்டும் 30 வீடுகள் உள்ளன. திருச்சியில் ஸ்கூல், ஆந்திராவில் சொத்து, நன்னிலத்தில் வீடு, மலேசியாவில் ஒரு நிறுவனத்தில் முதலீடு, மன்னார்குடியில் இருந்து சென்னையில் செட்டில் ஆன சேட் ஒருவர் மூலம், சென்னையில் மூலதனம், அசோக்குமார் என்பவரின் கிளினிக், சந்தப்பேட்டையில் ஒரு லட்சம் சதுர அடியில் இடம், அதோடு சுமார் 500 ஏக்கருக்கு மேல் விளைநிலம், இது தவிர முன்னாள் சேர்மன் ஒருவரது பெயரில் பேருந்துகள், தற்போது ரூ. 800 கோடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என குவித்து வைத்துள்ளார்” என்கிறார்கள் அழுத்தமாக.


தஞ்சையைச் சேர்ந்த அந்த அ.தி.மு.க. பிரமுகரோ, "எங்க ஊரில் அவர் தன் சம்பந்தி பெயரில் 800 கோடி ரூபாயில் கட்டிய, ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் மிஷனின் திறப்பு விழா வருகிற 14-ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஏற்கனவே இங்கிருக்கும் ஒரு மல்டி லெவல் மருத்துவமனை நிர்வாகத்தினர், தி.மு.க. தலைமையிடம் முறையிட்டுள்ளனர். அதனால்தான் இந்த ரெய்டு” என்று தன் யூகத்தைச் சொன்னார்.


சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் தரப்போ, வருமானத்துக்கு அதிகமாக அவர் 58 கோடி ரூபாய் சேர்த்து வைத்ததற்கான ஆதாரத்தோடுதான் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கான சப்போர்ட் டாக்குமெண்ட் ஏதாவது இருக்குமா? என்பதை அறியவே இந்த ரெய்டை நடத்தினோம். இந்த ரெய்டுத் தகவல், நாங்கள் போவதற்கு முன்பாகவே, அவருக்கு பாதுகாப்பாக இருந்த ஒரு போலீஸ் மூலம் தெரிந்துவிட்டது. அவரது வீட்டை முன்னதாகவே நோட்டமிட்ட போது, காமராஜ் வீட்டிலிருந்த லேப்டாப் ஒன்றை, அவர் வீட்டின் பின்புறமாக எடுத்துச் சென்று காமராஜின் மனைவி, தன் சகோதரியான ஆண்டாள் வீட்டில் வைத்ததை நாங்கள் பார்த்துவிட்டோம். நாங்கள் கவனித்ததை அந்த வீட்டு பெண் ஒருவர் பார்த்துவிட்டு, அந்த லேப்டாப்பை, கம்மாளத் தெருவில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் கொண்டுபோய் வைத்துவிட்டார். அதையும் கவனித்துவிட்ட நாங்கள், அதைக் கைப்பற்றிவிட்டோம். காமராஜ் அதன் பாஸ் வேர்டைக் கொடுக்க மறுத்துவிட்டார். அதில் தான் பல ஆவணங்கள் இருக்கலாம் என நம்புகிறோம். தற்போது அந்த லேப்டாப்பைக் கைப்பற்றும் முயற்சியில் காமராஜ் தரப்பு இறங்கி யிருக்கிறது” என்கிறார்கள் புன்னகையோடு.


இதுகுறித்து லோக்கல் தி.மு.க.வினரிடம் கேட்டபோது, "காமராஜுக்கு மிக நெருக்கமான, இடதுகை, வலதுகை போன்றவர்களைத் தொடவில்லை. அவர்கள்தான் ஆட்களைத் திரட்டிவந்து வாசலில் கோஷமிட்டபடி நிற்கிறார்கள். மன்னார்குடி ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் தினகர், முன்னாள் வைஸ்சேர்மன் வரலட்சுமி, நெடுவாக்கோட்டை ஆர்.எஸ். கலைவாணன். ஜவுளிக்கடை அதிபர் ஒருவர், நன்னிலம் ஒன்றியச் செயலாளர் ராம.குணசேகரன், கலியபெருமாள் என அவரது பெரும் பினாமிகள் பலரும் இப்போது தப்பியிருக்கிறார்கள்'' என்று ஒரு பட்டியலையே ஒப்பிக்கிறார்கள்.


மாஜி காமராஜோ "ரெய்டில் ஒரு ஆவணமும் சிக்கவில்லை. எனது மகன்கள் கடனுதவி பெற்றுதான், மருத்துவமனையைக் கட்டுகிறார்கள். நான் ஊழல் செய்ததாகக் கூறும் தொகையை விட அதிக அளவில் கடனில் இருக்கிறேன். இதை சட்டரீதியாகச் சந்திப்பேன்” என்றார் காட்டமாக.


“அடேங்கப்பா... இது உலக மகா நடிப்புடா சாமி” என்கிறார்கள் திருவாரூர்- மன்னார்குடி வாசிகள்.

 

 

Next Story

“கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுட்டுப் போயிருக்காரு...” - விஜய பிரபாகரன் உருக்கம்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Vijayaprabhakaran campaigned in Virudhunagar

சிவகாசியில் அஇஅதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றிய இந்தக் கூட்டத்தில், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசினார்.

“இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம்.  எங்க அப்பா கேப்டன்,  விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒருநாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம். எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுபோச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு. அப்போ இது யாரோட ஆசை, கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு ஆண்டவர் சொல்லிருக்காரு போல.

நிறைய பேர் சொன்னாங்க. விஜய பிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு? பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு . ராமானுஜபுரத்துல தான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்க தான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப் பெருமையா நினைக்கிறேன். கேப்டன் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றிருக்காரு.  என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படணும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது,  அதிமுக எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல.  ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான்,  கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதே மாதிரி  அதிமுகவுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க. எனக்கு உள்ள வரும்போது தேமுதிக, அதிமுக எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன்.

இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள் தான் ஜாஸ்தி.  இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018ல கேப்டன் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல,  அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளரா உங்க முன்னாடி பேசும் போது ரொம்ப சந்தோஷம் அடையறேன். இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு.  அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதனால அந்த வார்த்தை தெரியும்,  சிவகாசிதான் சின்ன ஜப்பான்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா.. அவ்ளோ திறமைசாலிகள் வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க.

இன்னைக்கு சைனா ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வு காண முடியும். அதிமுக - தேமுதிக கூட்டணி முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் கேப்டன் மகனா,  எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்.” எனப் பேசி சைகையால் முரசு கொட்டினார் விஜய பிரபாகரன்.

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.