Skip to main content

'நான் சங்கியா..?" கோபத்தில் காலணியை கழட்டிய சீமான்!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

fdg


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்கள் எப்போதும் தடாலடி கருத்துகளைக் கொண்டதாகவே இதுவரை இருந்திருக்கிறது. அதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் தற்போது சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் அவர் பேசியிருப்பது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியையும், ஆளுங்கட்சியினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், தன்னைக் குறிப்பிட்ட கட்சியினர் சங்கி என்று அழைப்பதற்கும், பி டீம் கட்சி என்று கூறுவதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "அரசுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக நம் தம்பிகளைத் தற்போது கைது செய்துவருகிறார்கள். இந்தக் கைதில் கூட நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? துரைமுருகனை கைது செய்தார்கள், எவனும் வாய் திறக்கவில்லை.

 

4 மாதம் பிணை கூட தராமல் இருந்தார்கள். அரசு தரப்பு வழக்கறிஞர் ஒவ்வொன்றாகக் குறைகூறி நீதிமன்றத்தில் வாதம் செய்தார். ஆனால் இது, மாரிதாஸை கைது செய்தபோது எங்கே போனது? 4 நாட்களிலேயே வழக்கை உடைத்து வெளியே வந்தாரே, அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்த்து வாய் திறக்கவில்லையே. இதிலிருந்து தெரியவில்லையா, யார் உண்மையான சங்கி என்று. நானாடா சங்கி? சங்கிப் பசங்களா, யாரைப் பார்த்து யார் சங்கி என்று சொல்றீங்க? (காலணியைக் கையில் எடுத்து காட்டுகிறார்). அமைதியாக இருக்கும் என்னை வெறிபிடிக்க வைத்துவிடாதீர்கள். நானும் கோபத்தை அடக்கி, அடக்கி, அடக்கி எவ்வளவோ முயன்று பார்க்கிறேன், என்னால் முடியவில்லை. என் மனைவி என்னை மறுபடியும் கராத்தே கிளாஸ்க்கு போகச் சொல்கிறாள். 

 

என்னைப் பற்றி பேசவில்லை என்றால் இவர்களுக்கு எந்த வீட்டிலும் கஞ்சி ஊத்த மாட்டார்கள். அதற்காக எதையாவது எப்போதும் உளறிக்கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான் புலி என்பதால் உங்களை எல்லாம் ஒரே அடியாகப் போட வேண்டும். ஆனால் உங்களை எல்லாம் அடித்துப் பார்க்கவா என்னைப் பெத்து வளர்த்திருக்கிறார்கள். என்னைத் திட்டி பிழைப்பு ஓட்ட வேண்டும் என்றால் செய்யுங்கள், சந்தோஷமாக இருங்கள். எனக்கு இது பழகிவிட்டது. தம்பிகள் எல்லாம் என்னைப் பற்றி அடுத்தவர்கள் தவறாகப் பேசினால் கொதிக்கிறார்கள். ஆரம்பத்தில் எனக்கும் அந்தக் கொதிப்பு இருந்தது. இத்தனை ஆண்டுகளில் அது வெகுவாக குறைந்துவிட்டது.

 

உங்களுக்கும் இன்னும் பத்து ஆண்டுகளில் அது புரிய ஆரம்பித்துவிடும். நீங்களே அப்போது இதைக் கடந்து போவீர்கள். அண்ணனைத் திட்டிவிட்டார்கள் என்று கோவப்பட்டு 400 பேர் கூட பார்க்காத வீடியோவை 40 ஆயிரம் பேர் பார்க்க வைக்கிறதும் நீங்கள்தான்! எதுவாக இருந்தாலும் என் முகம் இருக்கிறது. நான் அந்த செய்தியிலேயே இல்லையே, என் படத்தை எதற்கு வைத்தார்கள் என்ற குழப்பம் நம்மை ஆட்டிப் பிடிக்கிறது. விஷத்திலும் போடுறான், ரசத்திலும் என் போட்டோவ போடுறான், ஒரு மண்ணும் புரிய மாட்டேங்கிறது. தொலைந்து போறான் என்று விட்டுவிட வேண்டியதுதான்" என்றார்.

 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்