Skip to main content

திட்டம்போட்டு காய் நகர்த்தும் சசிகலா! தினகரனுடன் கைக்கோர்க்கும் எடப்பாடி!

Published on 22/07/2021 | Edited on 23/07/2021
ddd

சிறையிலிருந்து சசி வெளியே வரும்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. கிட்டத்தட்ட 70 எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவை சந்திப்பார்கள் என அப்போது சசிகலா வட்டாரங்கள் சொன்னது. எல்லோரையும் நரேந்திர மோடியை காண்பித்து எடப்பாடி அமைதியாக்கிவிட்டார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு சசிகலா அமைதியாக இருக்கவில்லை. அதன் விளைவு தான், சமீபத்தில் நடந்த அ.தி.மு.க மா.செ.க்கள் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்.

 

சசிகலா வெறுமனே அ.தி.மு.க., ர.ர.க்களிடம் செல்போனில் பேசவில்லை. ஒரு பெரிய லிஸ்டே எடுத்துவைத்து வேலைசெய்துவருகிறார். அ.தி.மு.க.வின் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய மா.செ.க்கள், முன்னாள் மா.செ.க்கள், நகரம், ஒன்றியம் என அனைவரையும் சசிகலா சார்பில் அவரது நலன் விரும்பிகள் தொடர்புகொண்டு பேசிவருகிறார்கள். அவர்களது தேவைகளுக்கேற்றாற்போல் கரன்சி விநியோகமும் நடை பெறுகிறது. நடராஜனின் சகோதரர்களான பழனிவேலுவும் ராமச்சந்திரனும் இதனை கவனிப்பதுதான் அ.தி.மு.க.வில் ஹாட் டாபிக்கான பேச்சாக இருக்கிறது.

 

தேர்தல் நேரத்தில், ஓட்டிங் மெஷினில் தில்லுமுல்லு செய்தாவது நம்மை பா.ஜ.க ஜெயிக்க வைத்துவிடும் என்று எடப்பாடி சொன்னதை அ.தி.மு.க நிர்வாகிகள் நம்பினார்கள். ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரும் பண மழையில் நனைவார்கள் என்கிற எடப்பாடியின் வார்த்தைகளைக் கேட்டு சாதாரண ஒன்றிய நிர்வாகிகள்கூட சசிகலாவைப் பார்க்கச் செல்லவில்லை. சசிகலாவுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் அப்படியே ஆப்லைனுக்கு சென்றுவிட்டார்கள்.

 

தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மட்டும் பணம் ஆறாக ஓடியது. மற்ற இடங்களில் மந்திரிகள் செலவு செய்யவில்லை. தங்கள் தொகுதிகளைவிட மற்ற தொகுதிகளை திரும்பிக்கூட பார்க்கவில்லை. தேர்தலில் சீட் எதிர்பார்த்த தோப்பு வெங்கடாச்சலம் போன்ற பலரை எடப்பாடி நம்பவைத்துக் கழுத்தறுத்துவிட்டார்.

 

இதெல்லாம் நடந்துமுடிந்தபிறகு எடப்பாடியால் பழைய மாதிரி அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை சசிகலா சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், எதிர்காலம் என்னவாகுமென கவலைப்படும் அ.தி.மு.க.வினருக்கு நிம்மதியையும் பணத்தையும் செலவுசெய்து வியூகம் அமைத்துவரும் சசிகலாவுக்கு ஆரம்பகட்ட வெற்றிகள் கிடைத்துள்ளன.

 

சசிகலாவை எதிர்த்து மாநில அளவில் நிர்வாகிகளைக் கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடியால் முடியவில்லை. அப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றினால் ஓ.பி.எஸ். சம்மதிக்கமாட்டார் என்கிற அச்சம் எடப்பாடிக்கு இருக்கிறது. எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலம் புறநகர் மாவட்டத்துக்கு எடப்பாடிதான் மாவட்டச் செயலாளர். அவர் தலைமையில் நடந்த மாவட்ட கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் பொழுது மூன்று முக்கிய நிர்வாகிகள் வெளிநடப்பு செய்து அந்த தீர்மானத்தை எதிர்த்து பேட்டியளித்து எடப்பாடிக்கு அதிர்ச்சியை கொடுத்தார்கள்.

 

தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க.வின் 52 மாவட்டக் கழகங்களில் வெறும் பத்து மாவட்டம் மட்டுமே சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள். மற்ற மாவட்டங்கள் சிம்பிளாக நோ சொல்லிவிட்டார்கள். ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் போன்றவர்களின் மாவட்டங்களே சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுத்துவிட்டார்கள். மாஜி அமைச்சர் காமராஜ், சசிகலாவின் அண்ணன் திவாகரனால் பாதிக்கப்பட்டிருந்ததால் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள் என, சசிகலாவின் அசைவுகள் அ.தி.மு.க.வில் ஏற்படுத்தும் பாதிப்புகளை பட்டியலிடுகிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

 

முன்பு, கட்சி நிர்வாகிகளுடன் நடந்த பல ஆலோசனைக் கூட்டங்களில், "சசிகலா ஒரு பேய் நாம் மீண்டும் சசியிடமும், தினகரன், வெங்கடேஷ் போன்றவர்களிடம் அடிமையாக வேண்டுமா' என்கிற எடப்பாடி, சமீபத்தில் சென்னையில் சசிகலாவுக்கு எதிராகத் தலைமைக் கழகத்தில் கூட்டிய அ.தி.மு.க மா.செ.க்கள் கூட்டத்தில் அப்படி எதுவும் பேசவில்லை. சசிகலாவுக்கு எதிராக ஒரு நிர்வாகிகூட அந்தக் கூட்டத்தில் வாய்திறக்கவில்லை. ஆனால் எடப்பாடி கடந்த சட்ட மன்றத் தேர்தலில் மேற்கொண்ட வியூகத்தை கடுமையாக விமர்சித்தார்கள்.

 

அன்வர் ராஜா இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்தார். பா.ஜ.க.வுடன் கூட்டணி தவறான முடிவு என ஆரம்பித்த அவரது பேச்சைத் தொடர்ந்து பெரும்பாலான மா.செ.க்கள், பா.ம.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தது, விஜயகாந்தோடு கூட்டணி வைக்க மறுத்தது, டாக்டர் கிருஷ்ணசாமியோடு கூட்டணி வைக்காதது, சரத்குமாரை மதிக்காதது என எடப்பாடியின் சர்வ அசைவு களும் கேள்விக்குள்ளானது.

 

டாக்டர் ராமதாஸை ப்ளாக்மெயில் அரசியல் வாதியென வர்ணிக்கவும் அவர்கள் தயங்கவில்லை. அனைவரும், சி.வி.சண்முகம் பா.ஜ.க.வை விமர்சித்து அ.தி.மு.க. தோல்விக்கு பா.ஜ.க.தான் காரணம் என்றதை கோரஸாகவே வழிமொழிந்தார்கள். செஞ்சி ஏழுமலை மட்டும், சி.வி.சண்முகமெல்லாம் ஒரு ஆளா… நான் 1972-லிருந்து அரசியல் செய்துவருகிறேன். எடப்பாடி, சி.வி.சண்முகத்தையும் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனையும் வளர்த்துவிட்டார். சண்முகம் வன்னியர், நானும் வன்னியர் தான் என சண்முகத்திற்கு சவால்விட்டார்.

 

சி.வி.சண்முகம் அந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. ஆனால், சண்முகத்தை பேசவைப்பது எடப்பாடிதான் என்று நிர்வாகிகள் பேசிக்கொண்டனர். கொஞ்சநாள் ராஜேந்திரபாலாஜி, கொஞ்சநாள் செல்லூர் ராஜு, எப்போதும் ஜெயக்குமார், இப்போது சண்முகம் என டயலாக் பேசவைத்து ஓ.பி.எஸ். மகனை வஞ்சித்து விட்டார்கள். அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் கிடைக்கவேண்டிய மத்திய மந்திரி பதவியை கெடுத்துவிட்டார் எடப்பாடியென நேரடியாகவே குற்றம்சாட்ட, ஒட்டுமொத்தக் கூட்டமும் அமைதியாக வேடிக்கை பார்த்தது.

 

அமித்ஷா, மோடிக்காக ஆங்கிலத்தில் அறிக்கைவிட்ட ஓ.பி.எஸ்.ஸின் செயலை சிலர் கிண்டலாகவே பேசினார்கள். அந்த ஆங்கில அறிக்கைக்கு அடுத்தபடியாக பா.ஜ.க.வுடன் கூட்டு நிரந்தரம் என ஓ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ்ஸும் இணைந்துவிட்ட அறிக்கையில் குள்ள ரி வேலைசெய்கிறார் என சசிகலாவை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்ததை மா.செ.க்கள் ஏற்கவில்லையென்பதை பா.ஜ.க. கூட்டு தவறான முடிவு என மா.செ.க்கள் கூட்டத்தில் எழுந்த விமர்சனங்கள் தெளிவாக உணர்த்தியது.

 

சசிகலா, தன்னை நீக்கி, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டியது தவறு என போட்ட சிவில் வழக்கில் மிகவும் சீரியஸாக இருக்கிறார். தான் அரசியலைவிட்டு துறவறம் பூண்டதற்கு பா.ஜ.க.தான் காரணம் என்கிற கருத்தையும் சொல்லிவருகிறார். அதேநேரத்தில் தினகரனையும் டாக்டர் வெங்கடேஷையும் ஒதுக்கிவிட்டார். பா.ஜ.க. என்னை எதிர்க்கவில்லை என்கிற இமேஜையும் பரப்பிவருகிறார். ஓ.பி.எஸ். தனது மகனுக்குக் கிடைக்கவேண்டிய மந்திரி பதவியை எடப்பாடி கெடுத்துவிட்டார் என்கிற கோபத்தில் இருப்பதால், சசிகலா என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்.

 

இந்நிலையில் தினகரன் வீட்டுத் திருமணம் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. அந்த திருமணம் முடிந்தபிறகு தினகரன் ஆக்டிவாக அரசியலுக்கு வந்துவிடுவார். அதற்காக செந்தமிழன், சி.ஆர். சரஸ்வதி மூலம் பத்திரிகையாளர்களை சந்திக்கவைத்து அ.ம.மு.க. ஆக்டிவாக இருப்பதாக காண்பித்துவருகிறார். சசிகலா அரசியலுக்கு வந்தால் அவர்மீது பா.ஜ.க. வழக்குகள் போடுமென தினகரன் ஆதரவாளர்கள் பேசிவருகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் ஓபி.எஸ். சசிகலாவை வெளிப்படையாக ஆதரிப்பார் என்று சசிகலா வட்டாரங்கள் கூறுகின்றன. எடப்பாடிக்கு ஆதரவாக உள்ள வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் போன்றோர் மீது தி.மு.க. ஊழல் வழக்குகளை பாய்ச்சும். அப்போது எடப்பாடி முகாம் கலகலத்துப் போகும் என சசிகலா திட்டம்போட்டு காய் நகர்த்தி வருகிறார். அதே நேரத்தில் எடப்பாடி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள டி.டி.வி. தினகரனுடன் கைகோர்ப்பார். அதற்கான ஆலோசனைகள் தொடங்கிவிட்டன என்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.

Next Story

“எடப்பாடி பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் மறக்க மாட்டார்கள்” - திமுக காட்டம்! 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டம், உதய்மின் திட்டம் போன்ற பா.ஜ.க. அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிகையில், “எடப்பாடி பழனிசாமி ஏறத்தாழ நான்கு ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ அவரால் சிறு பயனும் இல்லை. அவரால் பயன் கூட வேண்டாம். அவர் பாதகம் செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா. பதவி சுகத்தை அனுபவித்தார். ஆனால், தமிழர்களுக்குப் பாதகங்கள் பல செய்தார். எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல், தன்னெழுச்சியாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் திரண்டு பல மாதங்கள் போராடினார்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்குப் புற்றுநோய் முதலான கொடிய நோய்கள் ஏற்பட்டு, அவர்கள் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி திரண்டு எழுந்து போராடினார்கள். அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது பழனிச்சாமியின் காவல்துறை. ஒரு பெண்ணின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். ஒரு தந்தை கண் எதிரே அவர் மகன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தக் காட்சிகளை எல்லாம் கண்ட மக்கள் பதறினார்கள். இந்தக் கொடுமைகள் குறித்து அப்போதைய முதலமைச்சர் பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தொலைக்காட்சியில் பார்த்துத்தான் நான் தெரிந்து கொண்டேன் என்றார் நிதானமாக. ஒரு முதலமைச்சர் இப்படிக் கூறியது நியாயமா?. அந்தக் கொடிய துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா தலைமையிலான ஆணையம் அந்தச் சம்பவம் குறித்து ஏற்கெனவே அவருக்குத் தெரியும் என்று கூறி, பழனிசாமியின் பொய்முகத்தை வெளிப்படுத்தியது.

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைகள் :

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

பொள்ளாச்சியில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள், 200க்கும் மேற்பட்ட மகளிரை மிரட்டி, கற்பழித்து கொடுமைகளுக்கு ஆளாக்கினர். மகளிர் சங்கங்கள் போராடின. பாதிக்கப்பட்ட மகளிர் கூறியும் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் பழனிசாமி.

நீட் தேர்வை அனுமதித்த பழனிசாமி : 

அரியலூர் அனிதா முதல் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களும் மகளிரும் தற்கொலை செய்து கொண்ட கொடுமைகளுக்குக் காரணமானவர் பழனிசாமி. அவர் தான் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவர். ஜெயலலிதா இருந்தவரை நீட்தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. ஆனால் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவரும் பழனிசாமிதானே.

உதய் மின் திட்டத்தை அனுமதித்தவரும் பழனிசாமியே :

உதய் மின் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு நன்மை இல்லை. தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநிலங்கள் வாங்க வேண்டும். தனியார் மின் நிறுவனங்கள் மின்சாரத்தை மாநிலங்களில் விற்பனை செய்து, வங்கியில் வாங்கிய கடன்களைச் செலுத்தி அவை லாபம் சம்பாதிக்கும். இத்திட்டத்தை ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாடு ஏற்கவில்லை. அவர் மறைந்த பின் உதய மின் திட்டத்தை ஏற்றார் பழனிசாமி. இதனால், மின்வாரியத்தின் கடன் 40 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு ஏற்று அதன் நிதிச்சுமை தமிழ்நாடு அரசின் மேல் விழுந்தது. இதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழனிசாமியை பாதம் தாங்கிப் பழனிசாமி என்று கூறுகிறார்.

இன்னும் ஒரு வேடிக்கை :

பழனிசாமி சொல்கிறார் நான் என் உழைப்பால்தான் முதலமைச்சர் பதவிக்கு உழைத்து முன்னுக்கு வந்தேன் என்று. பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பதை ஊரும், உலகமும் தொலைக்காட்சியில் பார்த்துக் கைகொட்டி சிரித்ததே. அவர் மண்புழு போல தரையில் ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆனதுடன், யாரால் முதலமைச்சர் ஆனாரோ அவருக்கே துரோகம் செய்தவர் அல்லவா பழனிசாமி. அது மட்டும் அல்ல கொடநாடு கோட்டைக்குள் புகுந்து காவலரைக் கொன்று அங்கிருந்த ஊழல் பண மூட்டைகளைக் கொள்ளையடித்த கும்பல், எங்களை ஏவியது பழனிசாமிதான் என்று காவல்துறையிடம் கூறி பழனிசாமியின் பொய்முகத்தைத் தோலுரித்துக் காட்டியதை மறக்க முடியுமா? உறவினர்களுக்கு அரசு டெண்டர் எதுவும் வழங்கக்கூடாது எனும் விதிகளுக்கு மாறாக, தன்னுடைய சம்பந்திக்கு அரசுப் பணிகளை டெண்டர் மூலம் வாரி வழங்கி ஊழல் செய்தவர் பழனிச்சாமி என்பதை அவர் மறுக்க முடியுமா?.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த பழனிச்சாமி : 

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

பா.ஜ.க.அரசின் பாதகச் செயல்களில் ஒன்று சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம். அச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அ.தி.மு.க. எம்.பி.க்கள் 11 பேர் வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டம் நிறைவேறி இருக்காது. ஆனால், அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து கொண்டது பழனிசாமியின் அ.தி.மு.க.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் பழனிசாமி :

எங்கு சென்றாலும், தான் ஒரு விவசாயி என்று கூறிவரும் பழனிசாமி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் என்பதை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

தொழில் வளர்ச்சியில் கடைசி இடம் :

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டைக் கடைசி இடத்திற்குத் தள்ளியது இந்த பழனிசாமி ஆட்சிதானே.

ஒரே நாடு ஒரே தேர்தல் : 

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே உணவு என்பதை மட்டுமல்லாமல், பாஜக ஆட்சி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறியதைக் கேட்டு உடனே டெல்லிக்கு ஓடிச்சென்று பா.ஜ.க. அரசிடம் ஆதரவு தெரிவித்தவர் பழனிசாமி தானே. இப்படித் தமிழ்நாட்டை பா.ஜ.க.விடம் அடகு வைத்து பிரதமரின் பாதம் தாங்கிய பழனிசாமி இப்பொழுது பா.ஜ.கவிடம் கூட்டணி இல்லை என்று கூறி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் முழுவதும் தி.மு.க கூட்டணிக்கு சென்று விடக்கூடாது என வஞ்சக நோக்கத்துடன் பிதற்றுகிறார். பாஜ.க.வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள பழனிசாமியின் செயலை இனியும் தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் அல்ல” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.