Skip to main content

சசிகலாவை திணறடித்த தினகரன்! - அவசரகதியில் அறிக்கை!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

 AIADMK

 

‘என்னை எதிர்த்தால் மீண்டும் 1989’ என்பதில் உறுதியாக இருந்த சசிகலா, ‘அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து..’ என அறிக்கை வெளியிடும் அளவுக்கு நிலைமை மாறிப்போனது ஏன்? என்ற நமது கேள்விக்கு சற்று விரிவாகவே பதிலளித்தார் அந்த ‘சின்னம்மா’ விசுவாசி –

 

“ஜெயலலிதாம்மா சொல்லாததையா சின்னம்மா சொல்லிட்டாங்க? 1989-ல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரா அம்மா இருந்தப்ப.. அவர் எழுதிய ராஜினாமா கடிதம் ‘லீக்’ ஆகி பரபரப்பாச்சு.. அந்த லெட்டரில் என்ன சொல்லிருந்தாங்க? ‘அரசியலில்,  எனது ஏழாண்டு கால பொதுவாழ்வில் நான் கண்ட ஒரே லாபம் – அவமானமும் கீழ்த்தரமான இழிசொற்களும்தான். அரசியலில் ஈடுபட்ட ஒரே காரணத்திற்காக, இதுவரை வேறு எந்தப் பெண்ணிற்கும் நேர்ந்திராத கொடுமையெல்லாம் எனக்கு நடந்திருக்கிறது.’ என்று தனது உடல் நிலையைக் காரணம் காட்டி, ‘அரசியலைவிட்டு விலகுகிறேன்’ என்று எழுதியிருந்தாங்க. அம்மா அரசியலை விட்டு விலகவா செய்தார்கள்? சாகும் வரையிலும் முதலமைச்சராக அல்லவா இருந்தார்கள்?

 

 AIADMK

 

சின்னம்மாவுக்கும் அந்தமாதிரி ஒரு நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனநிலையில் இருக்காங்க. மனுஷன்னா சூழ்நிலைக்கு ஏற்ப மனசு மாறும் இல்லையா? அதுதான் நடந்திருக்கிறது. அறிக்கை வெளியிடறதுக்கு முன்னால சின்னம்மா வீட்டு வாசல்ல எந்த போலீசும் நிற்கல. இப்ப பாருங்க.. நூற்றுக்கணக்குல போலீஸை குவிச்சிருக்காங்க. 

 

ஜாதி பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க.. நான் தேவருன்னு சொல்லிக்கிட்டு, மக்கள்ட்ட ஓட்டு கேட்டுப் போறதுல, சின்னம்மாவுக்கு சுத்தமா விருப்பம் இல்ல. அதிமுகவுக்கு போறதும் நடக்கிற மாதிரியில்ல. தினகரனுக்குப் பின்னாலயோ, முன்னாலயோ போனா, அதிமுக தோற்றதுக்கு காரணம் சசிகலாதான்னு ஊரு உலகம் பேசும். அம்மா இறந்தப்ப.. கட்சியோட பொதுச்செயலாளரா இருக்கேன்னு சின்னம்மா சொன்னாங்க. தினகரன்தான் சின்னம்மாவ முதலமைச்சர் ஆயிடலாம்னு மண்டைய குழப்பினாரு. இப்ப தினகரனுக்கு முதலமைச்சர் ஆகணும்கிற வெறி வந்திருச்சு. 

 

‘எனக்கு ஓட்டு கேட்டு களத்துக்கு வரணும். இல்லைன்னா வெளிப்படையா எங்களுக்கு (அமமுக) ஆதரவு தெரிவிச்சு அறிக்கை விடணும். ஆளும்கட்சியா இருந்தும் அதிமுகவுல ஏழு நாள்ல 6,000 பேர் கூட விருப்பமனு கொடுக்கல. எனக்காக ஒரு தடவை நீங்க வாய்ஸ் கொடுத்தா போதும். 234 தொகுதிக்கும் இருபதாயிரம் பேரை விருப்பமனு கொடுக்க வைக்கிறேன்.’ என்று டிடிவி தினகரன் கொடுத்த நெருக்கடியில், சின்னம்மாவால் என்ன பண்ண முடியும்? ஒதுக்கியிருந்து அதிமுக வெற்றிக்காகப் பிரார்த்தனை பண்ணுறேன்னு அவசர அவசரமா அறிக்கை வெளியிட்டுட்டாங்க. 

 

 AIADMK

 

அமமுகவுக்கு சசிகலா ஓட்டு கேட்டதுனால அதிமுக தோற்றுப்போச்சுன்னு வரலாறு சொல்லிடக்கூடாதுல்ல. அதே நேரத்துல, சசிகலாவ அதிமுகவுல சேர்த்துக்கிடாததுனால, அந்தக் கட்சி தோற்றுப்போனதுன்னு வரலாறு பதிவு பண்ணுறதுதான் சரியா இருக்கும்கிற மனநிலைலதான் சின்னம்மா இருக்காங்க.   

 

நேற்று (3-ஆம் தேதி) வீட்டுக்குள்ள சின்னம்மாவோட கடுமையா டிடிவி சண்டை போட்டாரு. வீட்ல சசிகலா - பொதுச் செயலாளர்ங்கிற லெட்டர் பேடு இருக்கு. அதுல எக்ஸ்-ன்னு போட்டுகூட அறிக்கை விட்டிருக்கலாம். ஆனாலும், கடகடன்னு டைப் அடிக்க வச்சி, வெள்ளை பேப்பர்ல சின்னம்மா அறிக்கை தயார் பண்ணுனாங்க. அதுவும் கீழேயிருந்து மேல வர்ற மாதிரி, அவசர அவசரமா அறிக்கை வாசகத்த அவங்களே சொன்னாங்க.    

 AIADMK


 
எடப்பாடி மேல கோபமும் விரக்தியும் சின்னம்மாவுக்கு ரொம்ப இருக்கு. ஆனாலும்.. அக்கா வளர்த்த கட்சியேன்னு பார்க்கிறாங்க. சின்னம்மா வயித்தெரிச்சல வாங்கிக் கட்டிக்கிட்ட எடப்பாடியால தேர்தல்ல ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆகக்கூட முடியாது. அந்த தொகுதில அதற்கான வேலையெல்லாம் சத்தமில்லாம நடந்துக்கிட்டிருக்கு. 

 

 AIADMK

மொத்தத்துல அரசியல்ல இருந்து ஒதுங்குறேன்னு சின்னம்மாகிட்ட இருந்து அறிக்கை வந்ததுக்கு காரணமே டிடிவி-தான். ஒதுங்கிறேன்னு சொல்லிருக்காங்க. விலகுறேன்னு சொல்ல. தேர்தல் முடிவுகள் வெளியானதும், என்னென்ன நடக்கப்போகுதுன்னு பார்க்கத்தானே போறோம். அதுவரைக்கும், தன்னுடைய கோபதாபங்களை உள்ளுக்குள்ளே அடக்கிவைத்து, தான் நினைத்தது நிறைவேறுவதற்காக, கடுமையான பிரார்த்தனையில் சின்னம்மா ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்.” என்று பெருமூச்சுவிட்டார். 

 

‘அக்கா’ ஆசி சசிகலாவுக்கு கிடைக்குமா? வேண்டுதல் நிறைவேறுமா? 

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.