Skip to main content

''ரொம்ப உணர்ச்சிவயப்படுறீங்க..!'' -கதி கலங்கிய அமைச்சர்கள்!

Published on 12/02/2021 | Edited on 13/02/2021
Sasikala

 

சசிகலாவின் வருகை அ.தி.மு.க. தலைவர்களை ஏகத்துக்கும் பதட்டமடைய செய்திருக்கிறது. சிறையிலிருந்து விடுதலையான சசிகலாவுக்கு பெங்களூரிலிருந்து சென்னை வரையில் அசத்தலான வரவேற்பை அளிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் டி.டி.வி. தினகரன்.

 

இதனையடுத்து முதல்வர் எடப்பாடியின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் டிஜிபி திரிபாதியை சந்தித்து, ""அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என புகார் வாசித்தார்கள்.

 

டிஜிபியிடம் புகார் கொடுக்க அமைச்சர்கள் போயிருக்கக் கூடாது என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் விவாதப் பொருளானது. ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான புதுமை பாலு நம்மிடம், ""முதலமைச்சர் எடப்பாடியும் அவரது தலைமையில் உள்ள அமைச்சரவை சகாக்களும்தான் தமிழக அரசின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவர்கள். இவர்களின் உத்தரவுகளை நிறைவேற்றும் பொறுப் பில் இருப்பவர்கள்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள். அப்படியிருக்கும் நிலையில், டி.ஜி.பி.யை சந்தித்து அமைச்சர்கள் புகார் தெரிவிப்பது ப்ரோட்டகாலுக்கு எதிரானது.

 

கேபினெட் அமைச்சர்களே புகார் கொடுப்பது அவர்களைவிட டிஜிபி உயர்ந்தவராகி விடுகிறார் என பொருள். அதுவும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமே புகார் கொடுப்பது மரபுகளை மீறிய செயல். ஒரு பிரச்சனை குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க புகார் தெரிவிக்க வேண்டுமாயின் அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்று கொடுத்திருக்க வேண்டும். அதுதான் மரபு. அமைச்சர்கள் செல்லக் கூடாது'' என்கிறார் அதிரடியாக.

 

ddd

 

இதற்கிடையே, சென்னையில் சசிகலாவுக்கு வரவேற்பும் பேரணியும் நடத்த அனுமதி கேட்டு கடந்த 5-ந்தேதி டிஜிபி திரிபாதியிடம் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் மனு கொடுத்தார். இதனை அறிந்து டென்சனான எடப்பாடி பழனிச்சாமி, மீண்டும் சி.வி.சண்முகத் திடம் பேச, இரண்டாம் முறையாக மீண்டும் டி.ஜி.பி.யை சந்தித்து 6-ந் தேதி புகார் வாசித்தார் சி.வி.சண்முகம். அ.தி.மு.க.வினரிடம் பதட்டம் அதிகரித்தபடியே இருந்தது.

 

இது குறித்துப்பேசிய சி.விசண்முகம், ""சசிகலா, தினகரனின் ஆதரவாளர்கள் மனித வெடிகுண்டாக மாறுவோம் என பேட்டி தருகின்றனர். தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அதனை அ.தி.மு.க. மீது பழி போட துடிக்கிறார்கள். மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு சிறை சென்றவர் சசிகலா''‘என்று போட்டுத்தாக்கினார். டிஜிபி அலுவலகத்தை விட்டு வெளியே சென்றதும், ""ரொம்ப உணர்ச்சிவயப்படுறீங்க'' என சண்முகத்திடம் சொல்லியிருக்கிறார் ஜெயக்குமார்.

 

தினகரனோ,’""சின்னம்மா (சசிகலா) வெளியே வருவதால் அமைச்சர்கள் பயந்து நடுங்குகிறார்கள். சட்டம் ஒழுங்குப் பிரச் சனையை ஏற்படுத்தி எங்கள் மீது பழிபோட திட்டமிட்டுள்ளனர்'' என்கிறார் ஆவேசமாக.

 

ddd

 

அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் சம்மந்தமில்லை என முதல்வர் தொடங்கி சில அமைச்சர்கள் வரை சொல்வதும், சசிகலாவின் வருகையை ஒடுக்க நினைப்பதும் எடப்பாடிக்கு எதிரான புகைச்சல்களை அ.தி.மு.க.வில் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

இதற்கிடையே சென்னைக்கு வந்ததும் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு முதலில் செல்ல வேண்டும் என்றே திட்டமிட்டிருந்தார் சசிகலா. வருவதற்கு 4 நாட்களுக்கு முன்பு, சென்னைக்குள் நுழைந்ததும் எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு சென்று, அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு (இதனை சசிகலாதான் அமைத்தார்) மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, எம்.ஜி.ஆர். வீட்டினுள் சில நிமிடங்கள் அமர்ந்து விட்டு கிளம்புகிற மாதிரி தனது திட்டத்தை மாற்றியிருந்தார் சசிகலா. இதனை ஜானகி எம்.ஜி.ஆரின் தம்பி மகள் சுதாவிடம் தெரிவித்தது தினகரன் தரப்பு.

 

இதனையறிந்து அதனை தடுக்கும் முயற்சியாக, மற்றொரு மகள் கீதா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை எதிர்த்து பதில் மனு தாக்கல் செய்ய சுதா தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எடப்பாடியின் மறைமுக தூண்டுதலாலேயே சசிகலாவுக்கு எதிராக மனு போடப்பட்டிருப்பதாக ஒரு தகவல் தினகரனுக்கு கிடைக்க, அதனை சசிகலாவிடம் வெள்ளிக்கிழமையே பாஸ் செய்திருந்தார்.

 

எடப்பாடியை மேலும் பதட்டமடைய வைக்க, எம்.ஜி.ஆர். இல்லத்தில் வரவேற்பு அதிகமாக இருக்க வேண்டும் என திட்டமிட்ட தினகரன், அந்த பொறுப்பை மாவட்ட கழக முன்னாள் துணைச்செயலர் வைத்திய நாதனிடம் கொடுத்தார். இந்த பதட்டச் சூழலால், ஜெ நினைவிடம் செல்ல நினைத்த சசிகலா, தம்மால் ஒரு மோதல் போக்கு உண்டாகி விடக்கூடாது எனவும் ஆலோசித்திருக்கிறார். 

 

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நம்மிடம் பேசிய பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க.வின் எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் அழகப்பன், ‘""காண்ட்ராக்ட் உள்பட எந்த பிரதிபலனும் பாராமல் 35 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக் கிறோம். சின்னம்மா மற்றும் முதல்வர் எடப்பாடிக்குமிடையே நடக்கும் மோதலால், புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு அம்மாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க. அழிந்து விடுமோ என பயமாக இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை சின்னம்மாவின் ஒற்றைத் தலைமைக்குள் அ.தி.மு.க. வந்தால் மட்டுமே இன்னும் பல ஆண்டுகாலம் அ.தி.மு.க. உயிர்ப்புடன் இருக்கும்'' என்கிறார் அழுத்தமாக!

 

சசிகலா-எடப்பாடி மோதலை பா.ஜ.க. உருவாக்கி வருகிறது என்ற எண்ணமும் அ.தி.மு.க தொண்டர்களிடம் உள்ளது.

 

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.