Skip to main content

124 ஆவது பிரிவை பயன்படுத்தியது ஏன் என்ற கேள்விக்கு ஆளுநர் மாளிகையின் பதில் என்ன?

Published on 12/10/2018 | Edited on 12/10/2018

 

நக்கீரனுக்கு பெருகிவரும் ஆதரவு ஆளுநர் மாளிகையை ஏதோ செய்திருக்கிறது போலும். அடுத்தடுத்து ஆளுநர் பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது குற்றமில்லை என்று நிரூபிக்கும்வரை விலகியிருக்க வேண்டும் என்றும் குரல்கள் ஓங்கி ஒலிப்பது ஆளுநர் மாளிகையின் செவிப்பறையை கிழிக்கிறது போலும்.
 

governor


எனவேதான், தனது அடக்குமுறை நடவடிக்கையை நியாயப்படுத்த மேலும் ஒரு வழவழா அறிக்கையை விளக்கெண்ணையில் நனைத்து ஒப்புக்காக வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை நக்கீரன் இதழ் நியாயம் தவறிவிட்டதாக சொல்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது.
 

திருவள்ளுவரையும், டாக்டர் ராதாகிருஷ்ணனையும் தேவையில்லாமல் ஒப்பிட்டு, அவர்களை தங்களுடைய நடவடிக்கைகளுக்கு துணையாக அழைத்திருக்கிறது.
 

அதுமட்டுமின்றி, சுப்பிரமணிய பாரதி, வ.உ.சி, அண்ணா, காமராஜர், எம்ஜியார், அப்துல்கலாம் போன்றோரை வரிசைப்படுத்தி தனக்கு ஆதரவு தேடப் பயன்படுத்தி இருக்கிறது.
 

இவர்களை பயன்படுத்தி இருக்க வேண்டியதில்லை. தனது நெஞ்சில் துணிவிருந்தால், நேர்மை துளியேனும் இருந்தால் ஒரு பத்திரிகை வெளியிட்ட கட்டுரைக்காக இந்தியத் தண்டனைச் சட்டம் 124 ஆவது பிரிவை பயன்படுத்தியது ஏன் என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலை சொல்லியிருக்கலாம். அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டை ஆதாரத்தோடு மறுத்திருக்கலாம். பொத்தாம் பொதுவாக நக்கீரனை குறைகூறுவதிலேயே அறிக்கையின் வாசகங்கள் இருக்கின்றனவே தவிர, நக்கீரன் வெளியிட்ட கட்டுரைக்கு 124 ஆவது பிரிவு தேவையில்லை என்ற விஷயத்தை தொட்டுக்கூட பார்க்கவில்லையே ஏன்?
 

ஆளுநர் மாளிகையின் அறிக்கையில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா என்பதை வாசகர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே அந்த அறிக்கையின் தமிழாக்கத்தை இங்கே கொடுக்கிறோம்…
 

“மிகுந்த திகைப்புடனும், கவலையுடனும் இந்த செய்தி அறிக்கை வெளியிடப்படுகிறது.
 

திருவள்ளுவர் முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரை பல நூற்றாண்டுகளாக மிகப்பெரிய தத்துவார்த்த தலைவர்களையும், மிகப்பெரிய கலாச்சாரத்தையும் கொண்ட நாடு இந்தியா.
 

தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் நேர்மை, உண்மை மற்றும் நல்லவை பக்கம் நிற்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
 

governor


சமூகவிரோத சக்திகள் சமூகத்தை தங்கள் கையில் எடுத்துவிடுவார்களோ என்ற பயத்தில் இந்த விளக்கத்தை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
 

பிரிட்டிஷ் காலத்திலிருந்து  மகாத்மா காந்தி எ்போதும் உண்மை மற்றும் நல்லவற்றுக்கான பாதையில் அச்சை தவிர்த்து உறுதியாக நிற்கவேண்டும் என்று மக்களுக்கு போதித்திருக்கிறார்.
 

ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ, அருப்புக்கோட்டை கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி என்பவருக்கும் தொடர்பு என்ற செய்தியில் துளியளவு உண்மையும் இல்லை, அந்தச் செய்திகள் முற்றிலும் தவறானவை.
 

போலீஸிடம் நிர்மலாதேவி கொடுத்த வாக்குமூலம் உண்மைக்கு மாறானது. மாநிலத்தின் முதல்குடிமகன் மீது ஆபாசமான, கோழைத்தனமான தாக்குதலை சகிக்கும் பொறுமையை இழந்த பிறகே பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்துவதாக சிலர் கூறுவது நகைப்புக்குரியது.
 

எல்லா விஷயங்களுக்கும் ஒரு எல்லை உண்டு. கடந்த ஆறுமாதங்களாக, நிர்மலா தேவி விவகாரத்தில் சட்டப்படியான விசாரணைகள் நீதிமன்றத்தின் முன் விசாரணைக்காக வைக்கப்படுவதை கண்ணியம் நிறைந்த அமைதியுடன் கவனித்து வருகிறது.
 

செப்டம்பர் 2 ஆம் தேதி எல்லா விசாரணையும் நிறைவுபெற்று  குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. அதன்பிறகு, நக்கீரன் என்ற பத்திரிகையில் மீண்டும் ஆபாசமான தகவல்கள் வெளியிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 

புலனாய்வு இதழியல் என்று சொல்லிக் கொள்கிறவர்கள், நிர்மலாதேவி போலீஸிடம் கொடுத்த உண்மையான வாக்குமூலத்தை சரிபார்க்க வேண்டும் என்றுகூட கவலைப்படவில்லை.


(நக்கீரனின் கேள்வி… போலீஸ் வாக்குமூலத்தை மட்டும் அப்படியே நம்பி போடுவது புலனாய்வு அல்ல. குற்றம்சாட்டப்பட்டவர் சொல்வதை அப்படியே ஏற்று வாக்குமூலத்தை தயார் செய்யுமா போலீஸ்? போலீஸ் விசாரணைக்கு அப்பால் நடந்த உண்மைகளையும் மறைக்கப்பட்ட உண்மைகளையும் வெளிக் கொண்டுவருவதுதானே புலனாய்வு?)
 

நக்கீரன் வெளியிட்ட கட்டுரையில் இதழியல் ஒழுக்கம் மீறப்பட்டுள்ளது. நிர்மலாதேவி கடந்த ஒரு ஆண்டில் எப்போதும் ராஜ்பவனுக்குள் நுழைந்ததில்லை. ஆளுநரையோ, அவருடைய செயலாளரையோ, ஆளுநர் மாளிகை ஊழியர்களையோ சந்தித்ததில்லை. 
 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அன்னை தெரஸா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஆளுநர், மதுரை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியதில்லை. அப்போது அவருடைய ஆளுநருடைய செயலாளர் உடன் செல்லவில்லை. நக்கீரனில் வெளியிடப்பட்ட கட்டுரையில் உண்மைக்கும் நேர்மைக்கும் மாறாக வெறுப்புணர்வுதான் அதிகமாக இருக்கிறது.
 

உண்மையை உணராமல், நக்கீரனின் அப்பட்டமான பொய்க் கட்டுரையை மரியாதைக்குரிய நபர்களும் ஆதரிப்பது வருத்தமளிக்கிறது.
 

சுப்பிரமணிய பாரதி, வ.உ.சி, அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், அப்துல்கலாம் போன்றோர் தங்களுடைய சிந்தனைகளாலும் பேச்சாலும் நடவடிக்கைகளாலும் இந்த மாநிலத்தை கவுரவப்படுத்தினார்கள்.
 

மாநில அரசின் அதிகாரத்தை ஆளுநர் மாளிகளை ஒருபோதும் எல்லை மீறி அதீதமாக பயன்படுத்தியதில்லை. தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் சட்டப்படி ஒரு புகார் கொடுக்கப்பட்டது. ஜனநாயகத்தில் ஆரோக்கியமான கருத்துகள் பரிமாறப்படலாம், ஆனால், நேரடியாகவே, மறைமுகமாகவோ, ஆளுநரை நோக்கி விடுக்கப்பட்டால் தாங்கிக்கொள்ள முடியாது.. ஆளுநர் மாளிகையின் கண்ணியத்தை காயப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆளுநர் மாளிகை பணிந்துவிடாது.”
 

இப்படி முடித்திருக்கிறது அந்த அறிக்கை. நீதிமன்றம் நக்கீரன் மீது 124 ஆவது பிரிவில் குற்றம்சுமத்தியது தவறு என்றுதான் சொல்லியிருக்கிறது. அவரை கைது செய்து நடத்திய விதத்தைத்தான் கண்டித்திருக்கிறது. உடல்ரீதியாகவோ, பலப்பிரயோகத்தை பயன்படுத்தி மிரட்டியோ அவருடைய பணிக்கு இடையூறு செய்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டிய சட்டப்பிரிவை, ஒரு பத்திரிகையில் வந்த கட்டுரைக்காக பயன்படுத்துவதை ஏற்கமுடியாது என்றுதானே நீதிமன்றமும், பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க நினைப்பவர்களும் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பிரிவின்கீழ் ஏன் ஆளுநர் மாளிகை ஏன் புகார் கொடுத்தது என்ற விளக்கமே இந்த அறிக்கையில் இல்லை என்பதை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள் என்றே நினைக்கிறோம்.  
 

Next Story

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Punjab Governor banwarilal Purohit resigns

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது ராஜினமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பினார். அந்த கடிதத்தில், எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளின் காரணமாகவும், பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி ஆகிய பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். தயவு செய்து இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோகித் முன்னதாக அசாம், மேகாலயா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார். இவர் 14 வது தமிழ்நாடு ஆளுநராக கடந்த 2017  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல்  2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி வரை வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ஆளுநர் மாளிகை சம்பவம்; கூடுதல் ஆணையர் விளக்கம்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Governor's House incident; Additional Commissioner Explanation

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதைப் பற்ற வைத்து ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசி இருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு பாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளார். ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது மீண்டும் ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கு இதுதான் உண்மை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவர் மொத்தமாக நான்கு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களைக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவும், ஏ பிளஸ் குற்றவாளியாக கருக்கா வினோத் இருந்துள்ளார்.

 

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு மாதிரிகள் சேகரித்து எடுத்துச் செல்லப்பட்டது.

 

Governor's House incident; Additional Commissioner Explanation

 

தொடர்ந்து சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது பெட்ரோல் குண்டு விழுந்துள்ளது. மது போதையில் தவறுதலாக ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார்.