Skip to main content

எம்.ஜி.ஆருக்கு தொண்டன்... ஜெ., -வின் நம்பிக்கைக்குரியவர்... தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அரசியல் பயணம்...

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

raja kannapan political journey

 

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில் திமுக 133 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, நேற்று (05/05/2021) மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 

 

அதன் தொடர்ச்சியாக, நாளை (07/05/2021) காலை 09.00 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்கிறார். இந்நிலையில் திமுக அமைச்சரவை பட்டியலைத் தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. 

 

அதன்படி, போக்குவரத்துத்துறை அமைச்சராக ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழக அரசியலில் மிகநீண்ட வரலாற்றைக் கொண்ட ராஜா கண்ணப்பன் எம்.ஜி.ஆரின் தீவிர தொண்டராகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர். எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்றால் 1972 ஆம் ஆண்டு தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். கட்சி பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு மிகத்தீவிரமாக பணியாற்றிய இவர், படிப்படியாக உயர்ந்து மாவட்டச் செயலாளர் ஆகியிருந்த காலத்தில் எம்.ஜி.ஆர் மறைவு காரணமாக அதிமுக இரண்டாக உடைந்திருந்தது. இதில் ஜெயலலிதா பக்கம் நின்ற ராஜகண்ணப்பன், 1989 தேர்தலில் ஜெ அணி சார்பாகத் திருப்பத்தூரில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். 

 

ஆட்சி கலைப்புக்குப் பின்னர் 1991 -ல் நடந்த தேர்தலில் அதிமுக சார்பாகத் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ஜெயலலிதாவின் ஐந்தாண்டுகால ஆட்சியில் நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை மற்றும் மின்சாரத்துறை என மூன்று துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். மூன்று துறைகளையும் சிறப்பாகக் கையாண்டதோடு கட்சி பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டதற்காக ஜெயலலிதாவின் பாராட்டுகளைப் பெற்றதோடு, 'கம்ப்யூட்டர் கண்ணப்பன்'  என ஜெயலலிதா அழைக்குமளவுக்கு அவரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார் கண்ணப்பன். அதன் பின்னர் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில், அக்கட்சியிலிருந்து விலகிய இவர், 2000 ஆவது ஆண்டு மக்கள் தமிழ்த் தேசம் என்ற தனிக்கட்சியைத் துவக்கினார். இதற்காக இவர் 25 லட்சம் தொண்டர்களைக் கூட்டி சென்னையில் நடத்திய மாநாடு, அக்காலத்தில் மிகப்பெரிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

2001 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி. மு. க வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இவர், 2006 ஆம் ஆண்டு தனது கட்சியைக் கலைத்துவிட்டு தி.மு.கவில் இணைத்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்ற இவர், பிப்ரவரி 2009 -ல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க -விலிருந்து விலகினார். அதன்பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்த இவருக்கு, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா. ஆனால், மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ப.சிதம்பரத்திடம் இவர் தோல்வியைத் தழுவினார். 

 

அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தென் தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும், 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை அதிமுக வென்றதில் முக்கிய பங்காற்றியவர் இவர். ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு சசிகலா குடும்பத்தை எதிர்த்த இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திமுகவில் இணைத்தார். இவரது அரசியல் மீது நம்பிக்கை கொண்டு இந்த தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து, தீவிர களப்பணி ஆற்றிய இவர், இத்தேர்தலில் 94784 வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற நிலையில், தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். 1991 சட்டசபையில் அமைச்சராக அங்கம் வகித்த இவர் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.