Skip to main content

அந்தச் சம்பவத்தை 'அண்ணியார்' மறக்கமாட்டார்! - விவாதத்தில் தேமுதிக தொண்டர்கள்!

Published on 02/03/2021 | Edited on 03/03/2021

 

premalatha vijayakanth cant forget that incident says dmdk partymen

 

2005ல் தேமுதிகவை தொடங்கினார் விஜயகாந்த். 2006 சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு தேர்தலைச் சந்தித்தது தேமுதிக. அந்த தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது தேமுதிக. அதில், பல தேமுதிக எம்எல்ஏக்கள் கட்சி மாறி சென்றுவிட்டனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. அதுபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக தோல்வியைச் சந்தித்தது. 

 

பா.ம.க.வுடனான பேச்சு வார்த்தையை சுமூகமாக முடித்துவிட்டது.  விஜயகாந்தின் தேமுதிகவுடனும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்திருந்த நிலையில், மீண்டும் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், "நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு" எனத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எல்.கே.சுதீஷ் பதிவு செய்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், சுதீஷ் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

 

அதேநேரம், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்கிறதா? எத்தனை தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளது என்பது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து பேசுவதற்கு இன்னும் அதிமுக தலைமை தங்களை அழைக்கவில்லை என வெளிப்படையாகவே அறிவித்தார். இருப்பினும், அதிமுக தலைமை அதைக் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து அதிமுக தரப்பில் கேட்டபோது, "பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்குத் தொகுதி உடன்பாடுகள் முடிக்கப்பட்ட பின்னர்தான் தேமுதிகவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியும்" எனக் கூறப்பட்டது.

 

தற்போது, பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்படும். மேலும், ஒற்றை இலக்கத்தில் தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இதனால், அதிர்ச்சியான தேமுதிக, பாமகவுக்கு இணையான தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் தங்களுக்கு வேண்டும் என அடம்பிடிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், தொகுதிப் பங்கீடு இன்னும் இழுபறியாகவே உள்ளது. இதற்கிடையில், "திமுகவின் முன்னாள் அமைச்சரின் உறவினர் ஒருவர், தேமுதிகவிடம் கூட்டணி குறித்துப் பேசியுள்ளார். அதற்கு, ஏற்கனவே திமுக கூட்டணி நிரம்பி வழிகிறது, இதில் எங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என தேமுதிக தரப்பில் இருந்து பதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொகுதிகளைக் குறைத்து உங்களுக்கு பங்கீடு செய்கிறோம். அணியில் சேரவேண்டியது மட்டும்தான் உங்கள் பணி, எனத் திமுக தரப்பில் சொல்லப்பட்டதாக" கூறப்படுகிறது. 

 

ஆனால், நம்மிடம் பேசிய சில தேமுதிக தொண்டர்கள், "கேப்டனின் மகன் விஜய பிரபாகரன் சுறுசுறுப்பாகக் களத்தில் இயங்கிவருகிறார். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தேமுதிக தயாராக உள்ளது எனக் கூறிவருகிறார். இப்படி இருக்கும்போது திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை நாடிச்சென்றபோது நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். இரண்டு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் தேமுதிக கூட்டணி பேசுகிறது என அவப்பெயரை உண்டாக்கினார்கள். இதையெல்லாம் அண்ணியார் மறந்துவிடுவாரா?" எனக் கூறினர். தேமுதிகவின் இன்னொரு தரப்போ, "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. பெட்ரோல் விலை 100-ஐ தொடப்போகிறது. கேஸ் விலையும் ஏறிக்கொண்டே உள்ளது. திமுக பக்கம் மக்கள் சாய்வது போலத் தெரிகிறது. அதனால், அதிமுகவில் தேமுதிக இணைவது நல்லதல்ல. ஒன்று, திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கலாம். அல்லது, கட்சி இருக்கிறது என்பதைக் காட்ட தனியாக நிற்கலாம்" எனச் சில தொண்டர்கள் புலம்புகின்றனர்.

 

 

 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.