Skip to main content

"என்னைப் பாடாய்ப் படுத்திய எஸ்.பி.பி.!” - கவிப்பேரரசு வைரமுத்து பகிரும் நினைவுகள்

Published on 08/10/2020 | Edited on 08/10/2020
vairamuthu with spb

 

 

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி.யோடு, கடந்த 40 ஆண்டு காலமாக திரையுலகில் பயணித்து வந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவரது முதல் பாடலைப் பாடியவர் எஸ்.பி.பி.தான். அதேபோல் வைரமுத்து எழுதிய கொரோனா விழிப்புணர்வுப் பாடலைத்தான், எஸ்.பி.பி., கடைசி கடைசியாய் தானே இசையமைத்துப் பாடிவிட்டுப் போயிருக்கிறார். எஸ்.பி.பி.க்கு நெருக்கமான நண்பராகவும் இருந்த வைரமுத்து நம்மிடம் எஸ்.பி.பி.,  குறித்து பகிர்ந்த நினைவலைகள்...

 

"என் பதினான்கு வயதிலேயே எஸ்.பி.பி.யின் பாடலை அவர் ரசிகனாக நான் கேட்டேன். அடுத்த பதின்மூன்று வருடத்தில் என் பாடலைப் பாடுமிடத்தில் அவரைச் சந்தித்துவிட்டேன். அப்படியொரு திகைப்பான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. டி.எம்.சௌந்தரராஜனைக் கழித்துவிட்டு எந்த ஆண்குரலையும் ரசிக்க முடியாதவனாக இருந்தவன் நான். டி.எம்.எஸ், பி.சுசீலாவுக்கு நிகராக வேறெந்தக் குரல்களையும் வைத்துப் பார்க்கமுடியாத மன நிலையில் நானும் தமிழ்ச் சமூகமும் இருந்த காலகட்டம் அது. அப்போது எங்கள் முன்முடிவுகளைத் தாண்டி அன்பொழுகும் குரலாக எஸ்.பி.பி.யின் குரல் என்னை ஈர்க்கத் தொடங்கியது. 'சாந்தி நிலையம்' படத்தில் இடம்பெற்ற 'இயற்கை என்னும் இளைய கன்னி' பாடலைக் கேட்டபோது அந்தக் குரலில் இருந்த இனிமை, புதுமை, இளமை என்ற மூன்றும் பரவசத்தால் என்னைப் பாடாய்ப் படுத்த ஆரம்பித்தன. அதே சமயத்தில் 'சபதம்' படத்தில் இடம்பெற்ற "தொடுவதென்ன தென்றலோ... மலர்களோ...' என்ற பாடலும், 'ஏன்' படத்தில் இடம்பெற்ற "இறைவன் என்றொரு கவிஞன்; அவன் படைத்த கவிதை மனிதன்' என்ற பாடலும் எஸ்.பி.பி.யை என் மனதின் நெருக்கத்துக்குக் கொண்டுவந்தன. முன் உதாரணம் இல்லாத குரலாக அவர் குரல் இருந்தது. காதலிக்கத் துடிக்கும் இளைஞனுக்கு வழக்காடுகிற குரல் அது. காதலுக்காக ஒரு பாடகன் வழக்காடுவதை அவர் குரலில்தான் பார்த்தேன். அப்படித்தான் எஸ்.பி.யிடம் நான் வயமிழந்தேன்.

 

1971 ஆம் ஆண்டு நான் பச்சையப்பன் கல்லூரியில் பி.யு.சி. படித்துக் கொண்டிருந்த நேரம். எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த என் அத்தை, “எங்கள் கல்லூரியில் எஸ்.பி.பி.யின் கச்சேரி நடக்குது; வர்ரியா?" என்றார். என் கனவுப் பாடகனைப் பார்க்க வரமாட்டேன் என்றா சொல்வேன். அப்போது அவர் பாடிய 'பொட்டு வைத்த முகமோ' பாடல், பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்தது. அதனால் கூட்டமான கூட்டம். அந்த மேடையில்தான் அவர் உருவத்தை முதன்முதலாக நேரில் பார்த்தேன்.

 

எஸ்.பி.பிக்கும் எனக்குமான தொழில் உறவில் காலம் ஒரு கனத்த ஒற்றுமையை விட்டுச் சென்றி ருக்கிறது. கொரோனா குறித்து இருபாடல்கள் கேட்டார். எழுதி மின்னஞ்சலில் அனுப்பினேன். இரண்டுக்கும் அவரே இசையமைத்துப் பாடினார்; யூ டியூபில் பதிவேற்றினார்; பரவலான பாராட் டைப் பெற்றார். அதுதான் அவரது கடைசிப் பாடல். என் முதல் பாடலைப் பாடியவர் அவர்; அவரது கடைசிப் பாடலை எழுதியவன் நான்.

 

எஸ்.பி.பி.யின் மரணம், கலையுலகத்திற்கு மட்டுமல்ல சிறு கிராமம் வரை சோகத்தைக் கொண்டு சென்றிருக்கிறது. ஒவ்வொரு வீட்டி லும் பெரும் வேதனையும் வலியும் நுழைந்திருக்கிறது. இது பாட்டு மரணம் மட்டுமல்ல; ஒவ்வொரு வீட்டு மரணமும் கூட. அதனால் தான் இந்த சகாப்தத்தின் கடைசிப் பெரும் பாடகர் எஸ்.பி.பி. மறைந்துவிட்டார் என்றேன். பாடுதல், இசையமைத்தல், நடிப்பு, பின் னணி பேசுதல், பலமொழி அறிவு, பண்பாடு, கனிவு என இவ்வளவு கலவையோடு ஒரு கலைஞன் பிறப்பது அரிதிலும் அரிது."  

 

 

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. 

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.