Skip to main content

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ம.க. எங்களிடம்தான் முதலில் பேசியது!

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

ர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு டி.டி.வி. தினகரன் தரப்பு எடுக்கும் வியூகங்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் உற்றுப் பார்க்க வைத்துள்ளது.

epsநடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலிலும் இருபத்தியொரு தொகுதி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் டி.டி.வி. அணியின் வியூகம் என்னவென அதன் முக்கிய தலைவர்களிடம் பேசினோம். இன்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ம.க. எங்களிடம்தான் முதலில் பேசியது. நாங்கள் "முடியாது. பா.ம.க. தலைவர் ராமதாஸ் ஜெ.வை குற்றவாளி என பேசினார்'ன்னு பா.ம.க.வுடனான கூட்டணியை மறுத்தோம். அதேபோல் தே.மு.தி.க.வும் எங்களுடன் தான் பேசினார்கள். எல்.கே.சுதீஷின் உறவினரான ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. மூலம் அந்த பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது தி.மு.க.வின் துரைமுருகன் சுதீஷின் பேச்சுவார்த்தையை நக்கலடித்து பேட்டி கொடுத்தவுடன் மறுபடியும் சுதீஷ் அந்த முன்னாள் எம்.எல்.ஏ. மூலம் எங்களிடம் தொடர்பு கொண்டார். நாங்கள் பெரிய நோ சொல்லிவிட்டோம். அதன்பிறகே அ.தி.மு.க.வுடன் கூட்டணி என சுதீஷ் அறிவித்தார்'' என்கிறார் டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பெரம்பூர் எம்.எல்.ஏ.வான வெற்றிவேல்.

டி.டி.வி. அணியுடன் இன்று வரை எஸ்.டி.பி.ஐ. கட்சி மட்டுமே கூட்டணி என அறிவித்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் "நான் டி.டி.வி.அணியுடன் பேசுகிறேன்' என அறிவித் துள்ளார். "ஏன் உங்கள் அணியில் பெரிய பெரிய கட்சிகளை தவிர்த்து விட்டு மிகச்சிறிய கட்சிகளை சேர்த்துள்ளீர்கள்' என டி.டி.வி. அணியை சேர்ந்தவர்களை கேட்டோம்.

தமிழகத்தில் எங்களைப் போல தேர்தல் வியூகம் அமைக்க யாராலும் முடியாது. அறிவிக்கப்பட்ட திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.விற்கும் முன்பே நாங்கள் வேட்பாளரை அறிவித்தோம். அந்த தொகுதி யில் உள்ள அனைத்து இடங்களிலும் பிரம்மாண்டமான ஊழியர் கூட்டங்களை நடத்தினோம். அதைப் பார்த்த அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் பயந்துபோய் விட்டது. அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து வழக்கு போட்டார்கள். அந்த தேர்தலையே நிறுத்தினார்கள். அந்தத் தேர்தல் நடந்திருந்தால் அதில் டி.டி.வி. அணி வெற்றி பெற்று அடுத்து நடக்கவுள்ள அனைத்து தேர்தல் முடிவுகளையும் மாற்றும் என்பதால் நடத்தவில்லை.

dinakaran


திருவாரூர் தேர்தலில் நாங்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போல தனியாகத்தான் களம் கண்டோம். தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களில் தனியாகத்தான் களம் காண்கிறோம். எங்கள் வெற்றிக்கு நாங்கள் எங்கள் பலத்தைத்தான் நம்புகிறோம். கூட்டணி கட்சிகள் என்கிற சுமையோடு நடக்க நாங்கள் விரும்பவில்லை. ஒன்றிரண்டு கட்சிகள் எங்களுடன் வர உள்ளன. அதனால் பெரிய கட்சிகளை தவிர்த்து விட்டோம்'' என பதில் சொல்கிறார்கள் டி.டி.வி. அணியினர்.
dinakaran
தினகரன் தமிழகம் முழுவதும் நடத்தும் சுற்றுப்பயணமும், காத்திருந்து அவர் பேச்சை கேட்கும் மக்களின் எண்ணிக்கையும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உற்றுப் பார்க்க வைத்துள் ளது. அ.ம.மு.க.வை மத்திய பா.ஜ.க அரசு தனது ஆயுதங்களால் பலமாக தாக்க ஆரம்பித்துள்ளது. டி.டி.வி. தினகரனுக்கும் சிறையிலிருக்கும் சசிகலாவிற்கும் நெருக்கமான கார்னெட் மணல் அதிபர் வைகுண்டராஜன் செய்து வந்த கனிம பிசுனசுக்கு மத்திய அரசு தடை போட்டு விட்டது.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட தினகரன் அணியைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ரத்தினசபாபதி, "என்னை தகுதி நீக்கம் செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டால் சபாநாயகர் தனபாலின் கையை வெட்டுவேன்' எனக் கூறினார். அதற்கு அடுத்தநாளே ரத்தின சபாபதிக்கு நெருக்கமான மணல் கார்த்திக் மற்றும் மணல் ரமேஷ் ஆகியோர் திருச்சி மற்றும் சென்னையில் நடத்தும் ஓட்டல்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இது டி.டி.வி. தினகரனின் பணபலத்தை நொறுக்குவதற்காக எடப்பாடி மத்திய அரசிடம் சொல்லி நடத்திய ஏற்பாடு என்கிறார்கள் டி.டி.வி. அணியை சேர்ந்தவர்கள்.

தேர்தல் களத்துக்கு வந்தால் "இரட்டை இலை' லஞ்ச வழக்கு வேகமெடுத்து தினகரனுக்கு திகார் ஜெயில்தான் என்ற மிரட்டல் பாலிசியால் ஹேப்பியாக இருக்கிறார் எடப்பாடி. பெரிய கட்சிகளே மிரளும் வகையில் செயல்படும் அ.ம.மு.க.வின் உள்குத்துகளும் மீடியாக்களில் வரத் தொடங்கியுள்ளன. டி.டி.வி. அணியின் மா.செ.வாக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன் மற்றும் சமீபத்தில் மா.செ. பதவி பறிக்கப்பட்ட செந்தமிழன் ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர். அதில் கலைராஜன் தி.மு.க.விற்கு தாவப்போகிறார் என செய்திகள் சிறகடிக்கின்றன. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் டி.டி.வி. கட்சியில் போட்டியிட யாரும் தயாராக இல்லை. இரட்டை இலை சின்னத்தை டி.டி.வி. தினகரன் இழந்தார். அத்துடன் குக்கர் சின்னமும் கிடைக்காது என்கிற நிலை உருவாகிவிட்டது. தேர்தலில் நின்றால் ஓட்டுக்களை பிரிக்க முடியுமே தவிர வெற்றி பெற முடியாது என்பதால் தேர் தலில் போட்டியிட தயக்கம் நிலவுகிறது.

சசிகலா குடும்ப உறுப்பினர்களுடன் தினகரனுக்கு சரியான உறவுமில்லை. டி.டி.வி.யுடன் கூட்டணி பேசி வந்த ஜான் பாண்டியனை எடப்பாடியிடம் அனுப்பி வைத்ததே திவாகரன்தான். குடும்ப உறுப்பினர்களை அட்ஜஸ்ட் செய்து நடந்து கொள்ளாததால் சசிகலா, இளவரசி மகன் விவேக் மூலம் கொட்டப்படும் பணம் தினகரனுக்கு கிடைக்காது என செய்திகளை வாசிக்கிறார்கள் மன்னார்குடி வகையறாக்கள்.

அ.ம.மு.க. நிர்வாகிகளோ, எங்களிடம் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட் பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். சசிகலாவுக்கும் தினகரனுக்கும் மோதல் இல்லை. தினகரன் சுற்றுப் பயணத்தில் இருப்பதால் அவரது மனைவி அனுராதா சசிகலாவை சந்தித்து பேசி யிருக்கிறார்.

அ.ம.மு.க.வை ஒருங்கிணைப்பதே சசிகலாதான். தேர்தலை சந்திக்க சசிகலா தான் நிதி தர வேண்டுமென்பதில்லை. எங்கள் பணத்தையே செலவு செய்து தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகவே உள்ளோம்'' என்கிறார்கள்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது