Skip to main content

பெரியாரின் தளபதி ராஜாஜியின் தளபதியானார்...

Published on 09/03/2018 | Edited on 09/03/2018

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவராக வலம் வந்தவர் தந்தைபெரியார். மேல்தட்டு மனிதராக, உயர்சாதியினர் என அழைத்துக்கொள்ளும் மக்களின் தலைவராக வலம் வந்தவர் ராஜாகோபாலாச்சாரி. இந்த இரு மேதைகள் தமிழகத்தை வலம் வந்தனர், வரலாற்றில் இடம்பிடித்தனர். அந்த தலைவர்களின் தளபதியாக இருந்தவரின் மறைவு தினம் இன்று.
 

தஞ்சாவூர் மாவட்டம், தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை அடுத்த கொடைவிளாகம் என்கிற கிராமத்தில் 1895 டிசம்பர் 30ந்தேதி பிறந்தவர் ராமநாதன். சென்னை பச்சையப்பா கல்லூரி, சென்னை கிருஸ்த்துவ கல்லூரி, சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற மேதையிவர். தமிழ் எந்தளவுக்கு இலக்கண சுத்தத்தோடு பேசுவாரோ அதே அளவுக்கு ஆங்கிலத்திலும் திறமையாக பேசுவார், எழுதுவார்.
 

periyar rajaji


சட்டக்கல்லூரியில் பயிலும்போது காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டு அதில் இணைந்து செயல்பட்டார். காங்கிரஸ்சில் உயர்சாதி – கீழ்சாதி என்கிற பாகுபாடு இருந்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பெரியார் தலைமையில் ஒரு அணி போராடிவந்தது. அப்போதை காங்கிரஸ் தலைவராக இருநத வ.வே.சு அய்யரின் சேரன்மாதேவியில் செயல்பட்ட பார்ப்பன சாதிக்கான குருகுலத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற முறையில் கட்சி நிதியை குருகுலத்துக்கு வாரி வழங்கியதை பெரியார் கண்டித்தார். அப்போது பெரியார் தலைமையிலான அந்த அணியில் முக்கிய தளபதியாக இருந்தவர் ராமநாதன்.
 

1925 ஆம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சியில் புயல் வீசியகாலம். 1925 மே மாதம் பெரியார் வழிகாட்டுதலில், பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு காட்டுதல் கூடாது என ராமநாதனை காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரவைத்தார். அது பெரும் சர்ச்சைக்கும், கருத்து மோதலுக்கும் வழிவகுத்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரியார் விலகினார். அவருடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியவர்களில் முக்கியமானவர் ராமநாதன்.
 

அதற்கு அடுத்த 6 மாதத்தில் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியபோது அதன் செயலாளர் பதவியில் ராமநாதன் அமர்த்தப்பட்டார். ஒருவகையில் சுயமரியாதை இயக்கத்தின் தளகர்த்த ராமநாதன் தான். பொதுவுடமை கட்சியின் பிற்காலத்தில் தொடங்கிய ஜீவா ஆரம்பத்தில் பெரியார், இராமநாதன்னுடன் இணைந்து செயல்பட்டார். சுயமரியாதை இயக்கத்தில் சார்பில் பெரியார், மனிதன் தன் பெயருக்கு பின்னால் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும், பார்ப்பன குருமார்கள் என்பவர்களை ஏற்றுக்கொள்ளகூடாது, சாதி மறுப்பு திருமணங்களை அதிகப்படுத்தவேண்டும், தீண்டாமை கொடுமையை அகற்ற வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை முன்வைத்து போராடும்போது அதற்கு உறுதுணையாக இருந்து செயல்படுத்தியவர் ராமநாதன்.
 

1927ல் காந்தியடிகள் தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது, பெங்களுரூவில் தங்கியிருந்த காந்தியை சந்தித்து அவருடன் உள்ள பிணக்கை சரிசெய்துக்கொள்ள வேண்டும் என கடிதம் வாயிலாக பெரியாருக்கு வேண்டுக்கோள் விடுத்தார் இராமநாதன். அதனை ஏற்று காந்தியை சந்தித்து உரையாடினார் பெரியார்.
 

periyar rajaji

 

1931ல் பெரியார் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, உடன்சென்ற இருவரில் முதன்மையானவர் ராமநாதன். 11 மாதங்கள் ரஷ்யா உட்பட சில நாடுகளை சுற்றிப்பார்த்துவிட்டு வந்து அந்த நாட்டின் பெருமைகளை தமிழகத்தில் எடுத்துரைத்தவர் பெரியார். அதோடு ரஷ்யாவின் புரட்சிக்கரத்தலைவர் எழுதிய மதம் என்கிற நூலை பெரியாரோடு சேர்ந்து மொழி பெயர்த்தவர் இராமநாதன். இயக்கத்துக்காக ரிவோல்டு என்கிற ஆங்கில ஏடு நடத்தப்பட்டது. அதன் முழு பொறுப்பும் இராமநாதனிடம் இருந்தது.
 

நீதிக்கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டு சுயமரியாதை இயக்கம் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. நீதிக்கட்சி தேர்தலில் ஆட்சியமைத்தது. அப்போது சுப்பராயன், ராமநாதன் போன்ற நீதிக்கட்சி தலைவர்கள் ஆட்சியை நடத்தினர். அப்போது காங்கிரஸ் தேர்தலை புறக்கணித்தும், ஆட்சி பொறுப்புக்கு வராமல் இருந்தது. மீண்டும் ஆட்சி பொறுப்பில் பங்கேற்க முடிவு செய்தது காங்கிரஸ்.
 

1933ல் காந்தி சென்னை வந்தபோது, அவரை சந்தித்து பேசினார் ராமநாதன். அதன்பின் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து பெரியாரின் நண்பரும், அரசியல் எதிரியுமான இராஜகோபாலாச்சாரி அழைத்தார் என காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி சென்றுவிட்டார். பதவி ஆசை சுப்பராயன், ராமநாதன் போன்றவர்கள் காங்கிரஸ்க்கு சென்றார்கள் என கடும் விமர்சனம் எழுப்பியது நீதிக்கட்சி.
 

காங்கிரஸ்சில் இருந்த ராஜகோபாலாச்சாரி அணியில் இருந்து செயல்பட்டார் இராமநாதன். 1936ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிட்டு இராஜகோபாலாச்சாரி தலைமையிலான மந்திரி சபையில் இடம் பிடித்தார். அரசியலில் நீண்டகாலம் அதன்பின் அவரால் இருக்கமுடியவில்லை. இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்றவை காங்கிரஸ் மீது பெரும் விமர்சனமாக எழுந்தது. காங்கிரஸ் கோஷ்டி அரசியலில் நீண்ட காலம் அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு பின் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று குடும்பத்தாருடன் வசித்து வந்தவர் 1970 மார்ச் 9ந்தேதி உடல்நலக்குறைவால் மறைந்தார்.

Next Story

'பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல'- முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக இசை உலகில் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 98 வது மார்கழி நிகழ்வில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில் இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இசை சகோதரிகளான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள், தவறான ஒருவருக்கு கர்நாடக இசை உலகின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் டி.எம்.கிருஷ்ணாவையும் அவருடைய கொள்கைகளையும் விமர்சித்து சமூக வலைதளத்தில் ரஞ்சனி - காயத்ரி இசை சகோதரிகள் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில், டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர். சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர். தியாகராஜ சுவாமிகள் எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய சின்னங்களை அவமதித்துள்ளார். ஆன்மீகத்தை தொடர்ந்து அவர் இழிவுபடுத்தியுள்ளார் என கடுமையாக சாடி வந்தனர்.

அதேநேரம் டி.எம்.கிருஷ்ணாவின் ரசிகர்களும், ஆதரவாளர்களும், 'ஒரு மதத்திற்காக மட்டும் இருந்த கர்நாடக இசையை கிறிஸ்துவம், இஸ்லாம் என எல்லா மதங்களுக்கும் பாடி இசையில் சமூக நல்லிணக்கம்  கொண்டுவந்தவர் என அவருக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். 

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும்  டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

'It is not fair to criticize  the periyar unnecessarily' - Chief Minister M. K. Stalin's opinion

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'சிறந்த பாடகர் டி.ம்.கிருஷ்ணா 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல.பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் நடத்தை விதி; மூடப்பட்ட பெரியார் சிலை அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் திறப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 closed Periyar statue will reopen in the next half hour

இந்தியாவில் நடைபெற இருக்கின்ற லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அனைத்து கட்சிகளுமே அதனதன் கூட்டணிகளை உறுதி செய்வதிலும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதிலும் மிக தீவிரம் காட்டி வந்தனர். அதன்படி, தமிழகத்தில் ஆளும் கட்சியாகவும், கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுக அதன் கூட்டணி கட்சிகளையும், தொகுதிப் பங்கீடுகளையும் உறுதி செய்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கூட்டணியை உறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதன் பின்னர், முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த பாமக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனியாக கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே தேர்தல் தொடர்பான பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிக் கம்பங்கள், வளைவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்படுவது வழக்கம். இவ்வாறு மூடப்படும் சிலைகளில் பெரியார் சிலைகள் அடங்காது. இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பில், தேர்தலை காரணம் காட்டி பெரியார் சிலையை மூடக்கூடாது என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து நடந்த இந்த வழக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி, நீதிபதி வி.பார்த்திபன் “மறைந்த தேசத் தலைவர் மற்றும் பெரியார் சிலைகளை தேர்தலுக்காக மூடக்கூடாது” என தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

அதன் பின்னர், பெரியார் சிலைகள் தமிழகத்தில் மூடப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தலைக் காரணம் காட்டி, திண்டுக்கல்லில் உள்ள பெரியார் சிலையை போலீசார் மூடியுள்ளனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பெரியார் அமைப்பினர், நீதிமன்றமே பெரியார் சிலைகளை மூடக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, நீங்கள் எப்படி மூடலாம் எனக் கொந்தளித்துள்ளனர். உடனே இது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, தலைமைக் கழக அமைப்பாளர் இரா. வீரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்த முனிராசன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காஞ்சித்துரை உள்ளிட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் முயற்சியில் உடனடியாக மூடப்பட்ட பெரியார் சிலை உடனடியாகத் திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி எனக் கூறி திண்டுக்கல்லில் மூடப்பட்ட பெரியார் சிலை, மூடிய அரை மணி நேரத்திலேயே மறுபடியும் திறக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.