Skip to main content

நகைக்கடையில் பேரம் பேச மாட்டார்கள்... ஆனால் கீரைக்கடையில் பேசுவார்கள் - விக்கிரமராஜா ஆதங்கம்!

Published on 25/11/2021 | Edited on 27/11/2021

 

ிு


சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. தற்போது அதே போலவே தக்காளியின் விலையும் கிலோ 160 ரூபாய் என்ற அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இந்த அளவுக்குத் தக்காளியின் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பது குறித்த கேள்வியை வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜாவிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு.

 

"தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் வருடா வருடம் மழைக்காலங்களில் விலை ஏறுவது என்பது சஜகமே. மழைக்காலங்களில் தக்காளிச் செடிகளில் தண்ணீர் தேங்கி விடுவதால் பலம் இழந்து தக்காளி அழுகி விடுவதால் அதன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அதன் காரணமாகத் தேவைக்கும் குறைவான அளவு உற்பத்தி இருக்கிறது. குறிப்பாகச்  சென்னைக்கு 15 லாரி தக்காளி தேவைப்படுகிறது என்றால், அது 10 லாரி, 5 லாரி என்று சுருங்கிப் போய் விடுவதால், டிமாண்ட் அதிகரித்து விலை அதிகமாகிறது. இதுதான் விலை ஏற்றத்துக்குக் காரணமே தவிர, வேறு எந்த காரணமும் இல்லை. 

 

இது ஒரு தற்காலிக விலை ஏற்றம்தான், எனவே இதனை நினைத்து யாரும் பயப்படத் தேவையில்லை, சில நாட்களில் விலை பழைய நிலைக்குச் செல்லும் என்பது உறுதி. பெரு நிறுவனங்களில் தக்காளி உள்ளிட்ட பொருட்கள் விலை குறைவாகவும், சில்லறை விற்பனை கடைகளில் விலை அதிகமாகவும் இருப்பதாகக் கூறுகிறீர்கள். அதற்கும் காரணம் இருக்கிறது. பெரிய கடைகளில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட பொருட்களை குடோன்களில் வைத்துக்கொள்ள போதுமான வசதி உண்டு. அவர்கள் விவசாயிகளிடம் இருந்து ஆயிரக்கணக்கான மூட்டைகளை வாங்கி தங்களின் குடோன்களில் வைத்துக் கொள்கிறார்கள். எனவே இந்த மாதிரியான தருணங்களில் அவர்கள் சிறிய கடைகளில் விற்பதைக் காட்டிலும் சற்று விலை குறைவாக விற்கிறார்கள். அதற்காக நாம் சிறிய கடை வைத்திருப்பவர்களைக் குறை கூற முடியாது. ஏனென்றால் அவர்கள் கோயம்பேடு சென்று ஒரு மூட்டை தக்காளி வாங்கி வந்து விற்கிறார்கள் என்றால், அதை எடுத்து வரப் போக்குவரத்து செலவே கிலோவுக்கு 10 ரூபாய் ஆகும். அதையும் தாண்டி நான்கு, ஐந்து கிலோ வீணாகப் போய்விடும். அதை எல்லாம் சரி செய்துதான் விற்க வேண்டும். 

 

பெரிய கடைகளைப் போல் அந்த கடைக்காரர் பல பொருட்களை விற்க மாட்டார். ஒரு மூட்டை தக்காளி தான் அவரின் ஒருநாள் பிழைப்பு. எனவே பொருட்களின் வரத்துக் குறையும் போது இவர்களால் விலையைக் குறைத்து விற்க முடியாது. சந்தையில் வாங்குவதை விடச் சற்று அதிகமாகத்தான் விற்க முடியும். அதுவும் இந்த மாதிரியான மழைக் காலங்களில் தான். இந்த குறையும் விரைவில் சரி செய்யப்படும். அதையும் தாண்டி, நம் மக்களிடமும் சில விஷங்களை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. ஒரு நகைக்கடைக்குப் போவார்கள், ஒரு ஜவுளிக்கடைக்குப் போவார்கள், பொருளை வாங்குவார்கள், எந்த வித பேரமும் பேசமாட்டார்கள். ஆனால் ஒரு கத்தை கீரை 4 ரூபாய் என்றால், அவரிடம் 2 கத்தை 5 ரூபாய்க்குத் தருவீர்களா என்று கேட்பார்கள். ஆனால் கீரை கட்டை கேட்பவர்கள் பெரிய கோடீஸ்வரர்களாகத்தான் இருப்பார்கள். அதே போல் பூ கடைக்காரர் முழம் 3 ரூபாய் என்றால், 2 ரூபாய் போட்டுக்கொண்டு கொடுங்கள் என்று பேரம் பேசுவார்கள்.  எனவே இவரைப் போன்றவர்களிடம் பேரம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். பெரிய நிறுவனங்களும் இவர்களும் ஒன்றல்ல. இந்த விலை உயர்வு தற்காலிகமானது. விரைவில் அது முற்றுப்பெறும்" என்றார்.

 

 

 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.