Skip to main content

''கூப்பிடும்போதெல்லாம் வரணும்!'' தொண்டரின் மனைவியிடம் அத்துமீறிய அ.தி.மு.க. புள்ளி! முதல்வரின் சொந்த ஊரில் 'பிளே பாய்' கவுன்சிலரின் லீலை... 

Published on 25/07/2020 | Edited on 25/07/2020

 

Ervadi

 

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள ஏர்வாடியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். அ.தி.மு.க.வில் பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளராகவும், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் இருக்கிறார். இவருடைய மனைவி அமுதா. ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். உள்ளூரில் இக்குடும்பத்திற்கு அரசியல் செல்வாக்கு உண்டு. அண்மையில், அவர் காமாட்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் ஒருவரின் மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது, அவரிடம் 'அத்துமீறிய' சம்பவம், சேலம் மாவட்ட இலை கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஜெகநாதன் மீது மல்லூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்மீது காவல்துறையினர் எப்.ஐ.ஆர். பதிவு செய்வதற்குள்ளாகவே, புகார் கொடுத்தவரே திடீரென்று மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வாபஸ் பெற்றுள்ளார். ஜெகநாதனின் ஆள்கள் அவரை மிரட்டியதால்தான், புகாரைத் திரும்பப் பெற நேர்ந்ததாக காட்டுத்தீ போல தகவல்கள் கிளம்பின. மற்றொருபுறமோ, ஜெகநாதன் இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட குரல் பதிவும் வெளியாகியது. 

 

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணும், அவருடைய கணவரும் பேசத் தயங்கிய நிலையில், அவர்கள் சார்பாக உள்ளூரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் நம்மிடம் விரிவாகப் பேசினர்.


பாலியல் தொந்தரவுக்கு உள்ளான பெண்ணுக்கு 30 வயதாகிறது. அவருக்கு 14 வயது, 12 வயதுகளில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கணவர், சுமை தூக்கும் தொழிலாளி. அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில்தான், ஜூலை 10ஆம் தேதி அவருடைய வீடு அருகே, ஏர்வாடி பஞ்சாயத்து நிதி சார்பில் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக போர்வெல் போடும் பணிகள் நடந்தது. அந்தப் பணிகளைப் பார்வையிடுவதற்காக பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெகநாதனும், அவருடன் இன்னும் சிலரும் வந்திருந்தனர்.


அப்போது வீட்டில் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்ணும், இரு குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். கணவர் வேலைக்குச் சென்றுவிட்டார். அந்த வீட்டுக்குப் பின்புறத்தில் ஜெகநாதனும், உடன் வந்தவர்களும் மது அருந்தினர். திடீரென்று ஜெகநாதன், 'சைடு டிஷ்' வாங்கி வருவதாகக் கூறிவிட்டு அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் திடுதிப்பென்று நுழைந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டார். 


ஜெகநாதன், ஒரே ஊர்க்காரர் மட்டுமின்றி, அ.தி.மு.க.வில் பெரிய புள்ளி. அதனால் அந்தப் பெண், அவர் வீட்டுக்குள் நுழைந்ததைப் பற்றி எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ''என்னாலே இத்துனூண்டு வூட்டுக்குள்ள இருக்கறவ... பனமரத்துப்பட்டி சேர்மன் நான்தான். அரசாங்கம் கொடுக்குற இலவச தொகுப்பு வீட்டை உனக்குத் தந்துடறேன். உன்னை என் பொண்டாட்டி மாதிரி வெச்சி காப்பாத்துறேன்... என்ன சொல்றலே...,'' என்று அவருக்கு வலை விரித்துள்ளார். திடீரென்று ஜெகநாதன் அந்தப் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்து, தவறாக நடக்க முயன்றார். பதறிப்போன அவர், மகன்களிடம் ஓடிச்சென்று அவர்களை அரவணைத்தபடி நின்று கொண்டார். 


'நீங்க எனக்கு அப்பா மாதிரி. பசங்க முன்னாடி இப்படி எல்லாம் செய்றது நல்லா இல்லீங்க... இங்கிருந்து வெளியே போய்டுங்க...,' எனக் கெஞ்சவும், எதையோ எதிர்பார்த்து ஏமாந்து போன ஜெகநாதன், 'சரி... இப்போ போய்டுறேன்... நான் கூப்புடும்போது நீ வந்துடணும். ஒரு நாளாவது என் கூட இருக்கணும்லே... சரினு சொல்லி சத்தியம் பண்ணு... நான் போயிடறேன்...,' எனப் பிடிவாதமாக கேட்டிருக்கிறார். அவரை எப்படியாவது அங்கிருந்து அப்புறப்படுத்தினால் போதும் என்ற கையறு நிலையில் இருந்த அந்தப் பெண், அவருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார். அதன் பின்னர்தான் ஜெகநாதன் அங்கிருந்து வெளியே சென்றிருக்கிறார். ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியும் இருக்கிறார்.


ஊரு பெரிய மனுஷன பகைச்சிக்கிட்டா என்னாவறதுனு ரெண்டு நாளா மனசுக்குள்ளேயே மருகிக்கிட்டிருந்த அந்தப் பொண்ணு, தயங்கி தயங்கி தன் புருஷன்கிட்ட நடந்த சம்பவத்தைச் சொல்லிருக்கு. அதன்பிறகுதான், அந்தப் பொண்ணோட கணவன், இதுபத்தி ஜெகநாதன்கிட்ட போன் போட்டு நியாயம் கேட்டிருக்கிறார்,'' என்கிறார்கள் உள்ளூர் ர.ர.க்கள். 


பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஜெகநாதனிடம் நியாயம் கேட்கும் குரல் பதிவும் வாட்ஸ்ஆப்பில் வேகமாக பரவியது. அந்த ஆடியோவில், அந்தப் பெண்ணின் கணவர், மரியாதையாக அப்பா என்றே அழைக்கிறார். ஜெகநாதனோ, எடுத்த மாத்திரத்திலேயே, 'தெரியாம தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சுடு...,' என்று திரும்பப் திரும்பத் ஒரே பதிலைச் சொல்லி பேச்சைத் துண்டித்தார்.

 

2.36 நிமிடங்கள் கொண்ட அந்தக் குரல் பதிவில் உள்ள உரையாடல் விவரம்...


பாதிக்கப்பட்டவர்: அப்பா... காமாட்சி காட்டுலருந்து பேசறேன்பா... அன்னிக்கு எங்கூட்டுக்காரம்மா கிட்ட ஏதோ கேட்டீங்களாமே...

 

ஜெகநாதன்: சொல்லுப்பா

 

பாதிக்கப்பட்டவர்: அன்னிக்கு எங்கூட்டுக்காரிக்கிட்ட என்னமோ கேட்டீங்களாமே

 

ஜெகநாதன்: என்ன..?

 

பாதிக்கப்பட்டவர்: நீங்கதான் சொன்னீங்களாம்... 'என்கூட ஒரு நாள் இருனு' சத்தியம்லாம் வாங்கிட்டுப் போனீங்களாமே...

 

ஜெகநாதன்: டேய் டேய் டேய் இல்லட இல்லடா இல்லடா... சத்தியம்லாம் ஒண்ணுமில்லடா டேய் டேய் டேய் டேய்... தப்புடா தப்புடா

 

பாதிக்கப்பட்டவர்: நான் உங்க மேல தனி மரியாதை வெச்சிருக்கேன். இந்த மாதிரிலாம் இருந்தா எப்படி... உங்கள நம்பிதானே கட்சில இருக்கோம்...

 

ஜெகநாதன்: டேய் டேய் டேய்... நூத்துக்கு நூறு உண்ம. நேரடியா வந்து பேசறேன்... நானே வந்து மன்னிப்பு கேட்டுக்கறேன்டா

 

பாதிக்கப்பட்டவர்: என்னப்பா நேரடியா வந்து பேசறீங்க...? எனக்கு எப்படிப்பா இருக்கும் ரெண்டு நாளா?

 

ஜெகநாதன்: இல்லடா இல்லடா... தவறுடா தவறுடா... வரேன்டா வரேன்டா... இருடா

 

பாதிக்கப்பட்டவர்: என்னப்பா வரேன்னு...

 

ஜெகநாதன்: டேய்... தப்புன்னுட்டேன் ஒரே வார்த்தைல... ஆங்... தப்பு. ஏதோ தெரியாம ஒரு வார்த்த வந்திருக்கலாம். தவறு. செஞ்சது தப்புதான். நானே சொல்லலாம்னு பார்த்தேன். டைம் கிடைக்கல. 

 

பாதிக்கப்பட்டவர்: இல்லப்பா. நீங்க பெரிய இதுல இருக்கீங்க. நாங்க இல்லாதவைங்கதான். இந்த மாதிரி கேவலமா.. எனக்கு ழுவாச்சி ஆத்திரம் தாங்க முடியல. அதுக்கு நாங்க செத்தே போயிடலாம்பா... இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு... (நா தளுதளுக்கப் பேசினார்)

 

ஜெகநாதன்: டேய் டேய் டேய் ... அழுவாதடா... 

 

பாதிக்கப்பட்டவர்: அதுக்கு நாங்க செத்தே போயிடலாம்...

 

ஜெகநாதன்: அட சொல்ற வரைக்கும் கேளுடா... 'டிரிங்க்ஸ்' ஆயிப்போச்சுடா... ஆண்டவன் பொதுவா தவறுதான்...

 

பாதிக்கப்பட்டவர்: நான் அந்த மாதிரி தண்ணீ போட்டுட்டு உங்க வீட்டுக்கிட்ட வந்து கேட்டா என்ன நினைப்பீங்க சொல்லுங்க...?

 

ஜெகநாதன்: அதான் முன்னாடியே சொல்லிப்புட்டேன். தவறுனுபுட்டேன். இனிமே நடக்காது. எம்புள்ள அது. ரொம்ப பீல் பண்ணுனேன்...

 

பாதிக்கப்பட்டவர்: புள்ளைங்கிறீங்க...

 

ஜெகநாதன்: ப்ச்... தப்புனுட்டேன். சொல்றேன்லடா... வுட்ரா... வுடு. மன்னிப்பு கேட்டுக்கறேன் வுடு. இதுக்குமேல எந்த ஒரு வார்த்தையும் வராது. அது எம்புள்ள. அது ரொம்ப பீல் பண்றது எனக்குத்தான் தெரியும். உனக்கு ஒண்ணும் தெரியாது.

 

பாதிக்கப்பட்டவர்: எனக்கு எதுவுமே செய்ய வேண்டாம். கையும் காலும் ஆண்டவன் கொடுத்தது இருக்குது. திறமையா சம்பாதிச்சு பொழச்சுக்கறேன்...

 

ஜெகநாதன்: சரி...

 

இவ்வாறு அந்த உரையாடலில் பதிவாகி உள்ளது.


பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை நேரில் சந்தித்துப் பேசினோம். 


அவரோ, ''சார்... ஜெகநாதன், தப்பு செய்துவிட்டதாகச் சொல்லி எங்கள் இருதரப்பிலும் மத்தியஸ்தம் பேசிய ஒருவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுட்டார். அதனால நானும் மேல் நடவடிக்கை எதுவும் வேணாம்னு போலீஸ்கிட்ட எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன். நான்லாம் சாதாரண மூட்டை தூக்குற கூலிக்காரன். அன்னாடு வேலைக்குப் போனாதான் வீட்டுல அடுப்பெரியும். அ.தி.மு.க.வுல அவர் பெரிய ஆளு. நான் பாட்டுக்கு ஒண்டியா போய்க்கிட்டு வந்துட்டு இருக்கேன். எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுனா என்ன பண்றதுனு என் மனைவியும் பயப்படுறாங்க. இதுக்கு மேல ஒண்ணும் சொல்ல விரும்பலைங்க. எதுவாக இருந்தாலும் நீங்க மல்லூர் போலீஸ்ல கேட்டுக்கங்க,'' என்றார் விரக்தியாக.


ஜெகநாதனைப் பற்றி உள்ளூரில் விசாரித்தபோது, அவர் 'பிளே பாய்' ரகம்தான் என்கிறார்கள். அவருக்கு பிடித்த பெண்களை உடனடியாக கட்சியில் சேர்த்துக் கொள்வதும், ஏதாவது ஒரு பொறுப்பில் நியமித்து விடுவதும் உண்டாம். கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஜெகநாதனின் மகனும் கூட்டாளிகளும் சேர்ந்து தாக்கிய சம்பவம் நடந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட தரப்பு சாலை மறியல் வரை போக, ஒருவழியாக சமரசம் பேசி முடித்திருக்கிறார் ஜெகநாதன். அதனால், ஜெகநாதன் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் அப்போது எடுக்க முடியாமல் போய்விட்டது என்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர்.


மல்லூர், பனமரத்துப்பட்டி ஆகிய இரு காவல்நிலையங்களும் கிட்டத்தட்ட ஜெகநாதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஜெகநாதன் மீதோ, அவரின் தொடர்பில் இருப்பவர்கள் மீதோ புகார் கொடுக்கவே பலரும் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே புகார் கொடுத்தாலும், எப்.ஐ.ஆர். வரை போகாமல் சாம, பேத, தான, தண்டங்களைப் பயன்படுத்தி சமாளித்து விடுவார் என்கிறார்கள். 


காமாட்சி காட்டைச் சேர்ந்த பெண் மீதான பலாத்கார முயற்சி குறித்த புகாரும் அப்படித்தான். ஜூலை 20ஆம் தேதி புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. மறுநாள், (ஜூலை 21) ஜெகநாதன் மன்னிப்பு கேட்ட குரல் பதிவு வாட்ஸ்ஆப்பில் கசிந்து விட, அன்றைக்கே பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காதபடி காம்ப்ரமைஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதில் புகார்தாரர் தரப்பை சரிக்கட்ட, ஜெகநாதன் தரப்பில் இருந்து 6 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் ஒரு யூகமான தகவலும் உலா வருகிறது. எனினும், இத்தகவலை பாதிக்கப்பட்டவர் மறுத்துவிட்டார். 


இந்த விவகாரம் தொடர்பாக ஜெகநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டோம்.


''அது ஒண்ணுமில்ல சார்... நான் வில்லேஜ்ல எப்பவுமே மாமா மச்சானுதான் விசாரிச்சிட்டு இருப்பேன். இவன் கேட்பாரு பேச்ச கேட்டுக்கிட்டு என் பேச்சை ரிக்கார்டு பண்ணிட்டான். சம்பவம் நடந்த அன்னிக்கு போர்வெல் போட்டுக்கிட்டு இருந்தோம். முப்பது நாற்பது பேரு இருந்தாங்க. அங்க சும்மா கைய புடிச்சி பேசிட்டு இருந்தேங்க. எல்லா பொம்பளைங்ககிட்டயும் தமாசு பேசிட்டு இருந்தேன். எல்லாத்துக்கும் தெரியும். அங்க இவனோட சேர்ந்தவனுங்க தி.மு.க.காரங்க மூணு பேரு இருக்காங்க. என்னை மாட்டி விடணும்னு எதிர்க்கட்சிக்காரங்க பண்ணின சதிங்க சார். ஊருக்குள்ள 70 வயசு கிழவில இருந்து 15 வயசு பொண்ணுங்ககிட்ட கூட கேட்டுப்பாருங்க... மாமன் இப்படித்தான் பேசும்னு சொல்வாங்க. ஆண்டவன் பொதுவா நான் தப்பான நினைப்புல பேசலைங்க. 

 

http://onelink.to/nknapp

 

அவங்க பேமிலில பிரச்னை வரக்கூடாது பாருங்க. அதனாலதான் நான் பேசுனதுகூட தப்புனு ஒத்துக்கிட்டேன். நான் யார் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கல. நான்லாம் மல்லூர் போலீஸ் ஸ்டேஷன் பக்கமே போகலீங்க. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவரின் கணவரைக்கூட நேரில் பார்க்கலீங்க. இதுல நூத்துக்கு நூறு அரசியல் உள்குத்து இருக்கு. எல்லா பெண்களையும் நான் தாய்க்குலமாகத்தான் பார்க்கிறேன். 


என்னுடைய வில்லேஜ்ல எல்லா பொம்பளைங்ககிட்டயும் கையப் புடிச்சும், தோள் மேல கையப் போட்டும்தான் பேசறேன். அவங்க வூட்டுக்காரனுங்க பாத்தாலும்கூட, 'அண்ணா நீ கூட்டிட்டு போண்ணா'னுதான் சொல்வானுங்க. அந்தளவுக்கு மக்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கு. அ.தி.மு.க.வில் ஆரம்பக்காலத்துல இருந்து இருக்கிறேன். மக்களோடு மக்களாக பழகிட்டு இருக்கேன். இது எதிர்க்கட்சிக்காரங்களுக்கு பிடிக்கல. அவங்க எனக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். நான் மூகாம்பிகையை கும்பிடறவன். தப்பு பண்ணியிருந்தா கடவுள் பார்த்துக்கும்,'' என்றார் ஜெகநாதன்.


மல்லூர் காவல்நிலையம் பக்கமே போகவில்லை என்ற ஜெகநாதன், இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் முன்னிலையில் ஜூலை 21ஆம் தேதி, ஒரு விளக்கக் கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.


அந்தக் கடிதத்தில், ''என் மீது புகார் கூறிய நபருக்கும், அவருடைய மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் நான் எந்தத் தொந்தரவும் இடைஞ்சலும் ஏற்படுத்த மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். அப்படி ஏதாவது தொந்தரவு ஏற்பட்டு, சாட்சியுடன் நிரூபித்தால் முழு பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று என் மனசாட்சிப்படி உறுதி கூறுகிறேன்,'' எனக் குறிப்பிட்டு, கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார், ஜெகநாதன்.


அவர் ஏற்கனவே சொன்ன விளக்கத்தில் கடித விவகாரம் குறித்து எதுவும் சொல்லாததால், நாம் மீண்டும் ஜெகநாதனிடம் இதுபற்றி கேட்டபோது, ''சார்... சொல்றவரைக்கும் நல்லா கேளுங்க. அவன் பயந்துக்கிட்டு நான் அடிச்சிடுப்புடுவேன்னு போலீஸ்ல சொல்லியிருக்கான். அதனால ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தேன். வேற எவனாவது அவனை ஏதாவது செஞ்சிப்புட்டான்னு வைங்க... சார்... ஓப்பனாவே சொல்றேன்... 'எல்லாரையும் இப்போ நான் கையெடுத்து கும்பிட்டுக்கிட்டு இருக்கேன். யாரும் எதுவும் பேசினாலும் என் மேலதான் வரும்டா... அமைதியா இருங்கடா சாமின்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்,'' என்றார்.


இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''புகார்தாரரே ஜெகநாதன் என்பவர் ஊருக்குள் எல்லா லேடீஸையும் தொட்டுதான் பேசுவார் என்றும், எல்லார்கிட்டயும் பாசமாக பேசுவார் என்றும் சொல்கிறார். அவர் கொடுத்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்று அவரே திடீரென்று வாபஸ் பெற்றுக்கொண்டார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது அவர்தான் சொல்ல வேண்டும். அவருக்கு நியாயம் வேண்டும் என்றால் அவர்தான் நிற்க வேண்டும்,'' என்றனர்.

 

Ervadi

 

சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவனிடம் கேட்டபோது, ''ஜெகநாதன் எப்பவும் கேஷூவலாக பேசுவார். எல்லாரும் அங்கே சொந்தக்காரர்கள்தான். அவர் பேசியதாகச் சொல்லப்படும் ஆடியோவை நான் இன்னும் கேட்கவில்லை. அவர் மீது புகார்கள் வருகிறது எனில், ஊராட்சி மன்றத் தலைவராக தொடர்ந்து நாலஞ்சு முறை அவர்தான் வெற்றி பெற்று வருகிறார் என்பதையும் பார்க்க வேண்டும். ஜெகநாதன் விவகாரம் குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு 100 பர்சன்ட் கொண்டு செல்லப்படும்,'' என்றார்.


வேலியே பயிரை மேய்ந்த கதையாக அ.தி.மு.க. தொண்டரின் மனைவியையே பெண்டாளத் துடித்த கட்சி நிர்வாகியைக் கண்டிக்க முடியாத நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரா என்ற கேள்வியும் உள்ளூர் ர.ர.க்களிடம் எழுந்துள்ளது. சாமானியனுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அடங்கித்தான் போக வேண்டும் என்பதற்கு இச்சம்பவமும் மேலும் ஒரு சான்று. சொந்த மாவட்டத்தில், சொந்தக் கட்சியில் உள்ள பெண்ணின் மானத்தையே காப்பாற்ற முடியாத எடப்பாடி பழனிசாமி, மூச்சுக்கு முந்நூறு தடவை 'இது அம்மா வழியில் நடைபெறும் ஆட்சி' என முழங்குவது ஆகப்பெரும் நகைமுரண்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.